Wednesday, April 30, 2008

குருவாக வந்த குழந்தைப் பெண்!


ஒரு பெரியவர் ஒருவர் துறவு நிலையை மேற்கொண்டு தம் விரதங்களையும், ஜப, தபங்களையும் விடாமல் காப்பாற்றி வந்தார். விதிமுறைகளை மீறாமல் கடுமையாக விரதங்களை அனுசரித்து வந்தார். விண்ணில் ஆதவன் உதயத்தின் பின்னர் நீர் கூட அருந்தாமல் கடுமையாக விரதம் அனுஷ்டித்து வந்தார். பார்த்தார் இறைவன். இத்தகையவருக்கு ஏதாவது கொடுக்கணுமேன்னு தோன்றியது இறைவனுக்கு. என்ன கொடுப்பது? அவரோ எதுவும் வேண்டாதவராய் இருந்தார். எதிலும் பற்றில்லை. பற்றில்லாதவர்க்கு என்ன கொடுப்பது? அவருடைய நெறியைப் போற்றினாலே போதும் அல்லவா? விண்ணில் தோன்றியது ஒரு விண்மீன் இறை அருளால். அந்த விண்மீன் பகலிலும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட துறவி இறைவன் செய்த அற்புதங்களினால் மனம் மகிழ்ந்து தினமும் அந்த விண்மீனைப் பகலிலும் தரிசித்து வந்தார்.

ஒரு நாள் அந்தத் துறவி பக்கத்து மலை உச்சிக்குப் போக நினைத்தார். அடுத்த நாள் காலையிலேயே அங்கே செல்லக் கிளம்பினார். அப்போது துறவி இருந்த ஊரிலேயே இருந்த ஒரு சிறுமி, துறவியைப் பார்த்துக் கேட்கின்றாள்:"தாத்தா, எங்கே போறீங்க, நானும் வரேனே உங்களோடே?" என்று கேட்க, துறவியோ, தான் மலை உச்சிக்குப் போகப் போவதாயும், சிறுமியால் இயலாத ஒன்று என்றும் சொல்கின்றார். சிறுமி கேட்பதாய் இல்லை. அடம் பிடித்தாள். அழுதாள், புரண்டாள்,. வேறு வழியில்லாத துறவி அவளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். வேறு வழியில்லை எனக் கண்ட துறவி அவளையும் உடன் அழைத்துச் செல்கின்றார்.

இருவரும் மலைப்பாதையில் மேலே ஏற ஆரம்பிக்கின்றார்கள். கொஞ்ச தூரம் போகப் போக வெயில் அதிகமாகி, தண்ணீர் தாகம் எடுக்கின்றது. சிறுமி துறவியிடம் தண்ணீர் கேட்க துறவியும் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க, சிறுமியோ துறவியும் குடிச்சால் தானும் குடிப்பதாய் அடம் பிடிக்கின்றாள். ஆனால் கடும் விரதம் இருக்கும் துறவியோ சூரிய உதயம் ஆனதும் எதுவும் சாப்பிட மாட்டார். ஆகவே சிறுமியிடம் சொல்கின்றார். "நான் விரதம் இருக்கேன், குழந்தை! இப்போ எதுவும் சாப்பிட மாட்டேன்.நீ தண்ணீர் குடிச்சுக்கோ!" என்று சொல்கின்றார். ஆனால் சிறுமி கேட்காமல் மீண்டும் அழுது, புரண்டு, பிடிவாதம் பிடிக்கத் துறவி பலவகையிலும் அவளைச் சமாதானம் செய்து பார்த்தும் முடியவில்லை. விரதம் முக்கியமா? சிறுமியின் தாகம் தீர்க்கறது முக்கியமா? தர்மசங்கடமாய் இருந்தது துறவிக்கு. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தாமும் நீர் அருந்தினார். அந்தப் பெண்ணும் பின்னர் தண்ணீர் குடித்துத் தாகம் தீர்த்துக் கொள்கின்றாள்.

பயணம் தொடர்ந்தது. துறவி தலை குனிந்தது. நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை அவருக்கு. விரத பங்கம் செய்து நீர் அருந்திய தமக்கு இறைவன் என்ன கொடுப்பான்? ஒன்றும் கொடுக்க மாட்டான். ஆகாயத்தைப் பார்த்தால் என்ன இருக்கும்? ஒன்றும் இருக்கப் போவதில்லை. விரதமும் போச்சு, அத்தோடு விண்மீனும் போயிருக்கும். அவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்தார். தலை குனிந்த வாறே நடந்து வந்தார் துறவி. உச்சிக்குப் போனார்கள் இருவரும். ஒரு மரத்தடியில் களைப்போடு அமர்ந்தார்கள். அப்போது அந்தக் குழந்தை துறவியிடம், "தாத்தா, இதோ பார்!" என்றது. துறவியும் நிமிர்ந்து பார்க்க விண்ணில் இப்போது இரு விண்மீன்கள் முன்னைவிடப் பளீரென ஒளி வீசப் பக்கத்தில் பார்க்கின்றார் துறவி, யாரையும் காணோம்.

Wednesday, April 23, 2008

பத்ம பாதரும் நரசிம்மரும்....


ஆதிசங்கரரின் பரம சிஷ்யர்களில் ஒருவர் பத்மபாதர். இவரைப்பற்றி சிறிது ஏற்கனவே இந்த வலைப்பூவில் பார்த்திருக்கிறோம். இவர் ஆதிசங்கரரிடம் வருவதற்கு முன்னர் தீவிரமான நரசிம்ஹ பக்தர். இவரது சீக்ஷா நாமம் சனந்தனர், இவர் தனது நரசிம்ஹ பக்தியினால் பகவத்பாதரை இருமுறை காப்பாற்றி இருக்கிறார். இன்று பத்மபாதரது நரசிம்ம பக்தியினை பார்க்கலாம்.



பத்ம பாதர் மிக திவிரமான தவத்தின் மூலம் நரசிம்மத்தை நேரில் தரிசிக்க வனத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவர் அவ்வாறு இருக்கையில் ஒரு வேடன் அவரிடம் வந்து "சாமி.....கண்ணை மூடிக்கிட்டு அப்படி என்ன வேண்டிக்கிறீங்க" அப்படின்னு கேட்டான். பத்மபாதர் பதிலாக, 'உனக்கு சொன்னால் புரியாதே' என்கிறார். அதெல்லாம் புரியும் நீங்க சொல்லுங்கன்னு வேடன் வற்புறுத்துகிறான். பத்மபாதரும் அவனுக்கு புரியும்படியாக 'சிங்க முகமும் மனிதவுடலும்' கொண்ட ஒருத்தரைக் காண்பதற்காக தவமிருப்பதாக சொல்கிறார். நீங்க சொன்ன மாதிரி எந்த மிருகத்தையோ அல்லது மனிதனையோ நான் பார்த்ததே இல்லை என்று கூறிய வேடன், அதனால் என்ன இந்த வனத்தினுள் இருப்பானாயில் அவனை இன்று மாலை சூரியன் மறைவதற்குள் கட்டி இழுத்து வருகிறேன் என்று சூளுரைத்துச் செல்கிறான்.



பத்ம பாதரும், பலகாலமாக கடுந்தவம் செய்யும் எனக்கே காணக் கிடைக்கவில்லை, இவன் கட்டி இழுத்து வருகிறானாமே என்று மனதுள் சிரித்துக் கொண்டு தனது தவத்தை தொடர்கிறார். வேடன் சோறு தண்ணியின்றி அலைந்து தேடுகிறான். மாலையும் நேரம் வருகிறது, ஆனால் அந்த மிருகம் கண்ணில் தென்படவில்லை. வேடனுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம். கொடிகளைக் கொண்டு தூக்கு மேடை அமைத்து, 'சாமி என்னை மன்னிச்சுக்கோங்க, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நான் உயிர் வாழ விரும்பவில்லை' அப்படின்னு சொல்லிக் கொண்டே கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்கிறான். சுருக்கு இறுகும் நேரத்தில் நார்/கொடி அறுபட்டு கிழே விழுகிறான். அவனெதிரில் அந்த மனித மிருகம் கண்ணில் படுகிறது. ஆகா அகப்பட்டாயா என்று அதைப் பிடித்து கொடியாலேயே கட்டி இழுத்துக் கொண்டு பத்ம பாதரிடம் வருகிறான். பத்ம பாதர் முன்பு வந்து, 'சாமி, கண்ணைத் திறந்து பாருங்க, நீங்க சொன்ன மனித மிருகத்தை கொண்டு வந்திருக்கேன்' என்கிறான். கண் திறந்த பத்மபாதருக்கு எதிரே ஏதும் தெரியவில்லை. ஆனால் அவன் கட்டிய கொடி/நார் மட்டும் கண்ணுக்குப் புலப்படுகிறது. 'எங்கேயப்பா? எதையும் காணவில்லையே' என்கிறார். வேடனும், 'நல்லாப் பாருங்க சாமி'ன்னு சொல்லிட்டு 'ஏ மிருகமே உனக்கென்ன மாய-மந்திரம் தெரியுமான்னு அதட்டுகிறான்.



நரசிம்மம் கர்ஜிப்பதை காதில் கேட்டார் பத்மபாதர். 'பத்மபாதா, ஞானக் கண்ணால் தவமிருந்த உனக்கு குரலால் தரிசனம் தருகிறேன். வேடனின் நம்பிக்கையும், தீவிரமும் என்னை தோன்றச் செய்தது. நீ என்னை நினைக்கும் போது நான் உன்னில் ஆவிர்பவிக்கிறேன்' என்று சொல்லி மறைந்தார். இந்த வரத்தினாலேயே பின்னாளில் ஆதிசங்கரரை கபாலிகர்கள் பலியிட முயன்றபோது பத்மபாதர் காப்பாற்றுகிறார். இவரே இன்னொரு சமயத்தில் சரசவாணியின் கேள்விக்கு பதிலறிய ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்த நேரத்தில் ஆதிசங்கரர் தனது உடல் எரியும் முன்பாக திரும்பி வருவதற்கு உதவுகிறார். இவ்வாறாக தனது தபோ பலத்தையும் குருவுக்கு அர்பணிக்க தயங்காதவர் பத்ம பாதர்.

Wednesday, April 16, 2008

ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...



நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.



ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.



சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

Wednesday, April 9, 2008

சுகப் பிரும்மம் (3)


ஜனகரது கருணை நிறைந்த மனிதநேயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. ஜனகர், ஒரு சமயம் தனது யோக சக்தியால் உடலை நீத்தார். உடனேயே அவரை அழைத்துச் செல்ல தேவலோகத்திலிருந்து ஒரு விமானம் வந்தது. ஜனகர் அதில் ஏறிக்கொண்டார்.தேவலோகத்திற்குப் போகும் வழியில் யமபுரியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே பாவம் புரிந்தவர்கள் எண்ணற்றோர் பலவிதமான கொடும் தண்டனைகளை அனுபவிப்பதைக் கண்டார். புண்ணிய மூர்த்தியான ஜனகர், நரகத்துக்கருகே சென்றபோது, அவரது உடலில் பட்ட காற்று அங்கு வீசியது. உடனே நரக வெப்பம் தணிந்து தண்ணெனக் குளுமையானது. எனவே அந்த மனிதர்கள், மேலே போகாமல் அங்கேயே இருக்குமாறு ஜனகரை வேண்டினர். அக்கொடிய பாவிகளுக்குத் தன்னால் ஓரளவு துன்ப நிவர்த்தி கிடைக்குமானால், தான் அங்கேயே தங்கி விடலாமெனத் தன் பெருங்கருணையினால் ஜனகர் நினைத்தார்.
அப்போது காலன் அங்கு வந்தான். ஜனகரை அங்கே கண்டு பெரிதும் வியப்பெய்தி, ஒப்பற்ற புண்ணிய புருஷரான அவர் அங்கிருப்பதன் காரணத்தை வினவினான். ஜனகரும் நடந்ததைக் கூறினார். உடனே காலனும் அங்கு நரகவாதனையில் உழலும் மாந்தர்கள் செய்த மாபாதகங்களையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்கள் செய்த வினைக்கேற்ற பலனைத்தான் அனுபவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தான். ஆனால் ஜனகரோ அக்கொடிய நரகத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற ஏதாவது வழியுண்டா என்று காலனைக் கேட்டார். ஜனகரது ஒரு நற்செயலின் பயனை அப்பாவியர்க்களித்தால், அவர்கள் விடுதலை பெறுவர் என்று கூறினான், காலன்.
உடனேயே தூய உள்ளத்தோடு ஜனகர் இராம நாமத்தை ஜபிக்க, அதனால் பாவியர் நரகத்தினின்றும் விடுதலை பெற்றனர். பின்னர் ஜனகரும் தேவருலகம் சென்றார்


இப்படி பட்ட ஜனகரைத் தான் சுகபிரும்மம் தன் குருவாக தேர்ந்தெடுத்தார்.

குருவாக இருபதற்கும் தகுதி வேண்டும் அப்படி இருந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் அதனால் பெரும் பலனடைவார்கள்.சேரிடம் அறிந்து சேர் என்ற சொல்லே இதனால்தான் ஏற்பட்டது.