Wednesday, April 29, 2009

சங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...

சங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்!
பெரியவர்கள் பிசி போல! அதான் முன்பு மெளலி அண்ணா எழுதிய சங்கரப் பதிவை, சங்கர ஜெயந்தி அன்று மீள் பதிக்கிறேன்! இதோ!

இவ்வமயம் திராச ஐயாவின் அண்ணன் மரு-மகனார் நேற்று இயற்கை எய்திய சேதி வந்தது!
சதுர்த்தி விரத நாள் அன்று, அவர் முருகப்பெருமான் திருவடி நிழலில் கலாப மயிலாய் கண் துஞ்ச அடியேன் பிரார்த்தனைகள்!
அவர் அண்ணன் மகளுக்கும், அந்த இளங் குழந்தைகளுக்கும் கண்ணன் காப்பும் அருளும் கிடைத்து அமைதி பெற அடியேன் வேண்டுதல்கள்!



நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.

ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.



சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

Monday, February 9, 2009

யார் ஜகத்குரு? - கூரத்தாழ்வான் கலக்கம்!

கடந்த சில வாரங்களாக, பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்கள்,
கூரத்தாழ்வானின் 1000வது பிறந்தநாள் வைபவங்களை ஒட்டி,
ஆழ்வானின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர் இடுகைகளாக இட்டு வந்தார்கள்! நான்கு பகுதிகளாக வந்த தொடர் நிறைவுற்றது!

இந்த கைங்கர்யத்துக்கு, அண்ணாருக்கு நம் வாழ்த்தையும் வணக்கங்களையும், இவ்வமயத்தில் சொல்லிக் கொண்டு,
சுந்தர் அண்ணா எழுதி அருளிய இத்தொடரினை, இ-புத்தகமாக,
ஸ்ரீயப்பதியான எம்பெருமான் - பெருந்தேவித் தாயார் உடனுறை பேரருளாளன், காஞ்சி வரதனின் திருவடிகளில் சமர்பிக்கின்றோம்! இதோ புத்தகம்!

Kuresa Vaibhavam



இது வரை கூரேசர் பற்றி வந்துள்ள பதிவுகள் இதோ:

1. ஷைலஜா அக்கா எழுதிய, கூரேசன் சீர் கேளீரோ!

2. KRS, கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்தநாள்

3. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1
குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2

4. கைலாஷி ஐயா எழுதிய, கண் கொடுத்த கூரேசர்

5. பரவஸ்து சுந்தர் அண்ணா எழுதிய, கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் (1-4)

இன்னும் வைபவப் பதிவுகள் நன்முறையில் வளர்ந்து,
ஆசார்ய மணம் பரப்ப, ஆசார்யர்கள் கிருபையையே முன்னிடுகிறோம்!

ஸ்ரீவத்சசிஹ்ந மிஸ்ரேப்யோ, நம உக்திமதீமஹே!
யதுக்தய ஸ்த்ரயீகண்டே, யாந்தி மங்கள ஸூத்ரதாம்!!

(கூரத்தாழ்வாரின் தனியன்)


ஜகத்குரு-அணுக்க சீடர், சேர்த்தி சேவை!


திருவரங்கம், வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் - போதாதா வாக்குவாதம் தோன்ற? :) இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்! அதனால் தவறில்லை!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம்,
கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது! - யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்! சரி வம்பே வேணாம்! ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - கீதாசார்யன் - அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...

கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்! கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!


"மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குரு? அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே! கீதையே நேரில் கேட்டவனுக்கே இந்தக் கதி!

ஆனால் நம் இராமானுசர், நம் அத்தனை பேரையும், கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா? இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்! கண்ணனிடமா அவை இருக்கின்றன?

இதில் இருந்தே தெரியவில்லையா? யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா? அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன், காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"

அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்! இவர் காவிரியில் நடக்கத் துணிந்த கதை அப்படியே பத்ம்பாதர் கதை போலவே இருக்கல்லவா?
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க, "ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!

"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!

அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "

இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!


இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்! ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??

கூரத்தாழ்வார்-இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!

Wednesday, January 28, 2009

ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும் விடக் கூடாதா?

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் அடியேன் எப்பமே ஊறிக் கிடந்தாலும்,
சில பல "புரிதல்கள்" காரணமாக,
"ஆச்சார்ய ஹ்ருதயம் என்னும் வலைப்பூவில்" பதிவுகள் இடுவதை நிறுத்தி வைத்திருந்தேன்!

ஆனால் பெரியவர் திராச ஐயா, ஒரு கிருத்திகை தினத்தன்று, முருகனருள் வலைப்பூவில் திடீரென்று ஆக்ஞாபித்தார்! - "கேஆரெஸ், மீண்டும் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் எழுதத் துவங்குங்கள்"!

இதோ, அவர் மார்கழியில் இட்ட இந்தப் பதிவினையே எடுத்துக் கொண்டு மீண்டும் துவங்குகிறேன்!


ஆச்சாரம் என்றால் என்ன?
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்! ஆச்சாரம் = ஒழுக்கம்!

சரிங்க, அப்போ, ஒழுக்கம்-ன்னா என்ன?
* "ஒழுங்கா" நான் சொல்லுறதைக் கேள்!
* "ஒழுங்கா" என் பேச்சுப்படி நட!
* "ஒழுங்காப்" பேசு!
* "ஒழுங்கா" எழுது!
- இதெல்லாமா ஒழுக்கம்?

"ஒழுகுதல்"-ன்னு வேற இதைச் சொல்றாங்க? வீட்டுக் கூரையில் இருந்து மழைத்தண்ணி ஒழுகுதலா? ஹா ஹா ஹா! :)

தமிழில் இருக்கும் அழகான காரணப் பெயர்களில், மிக மிக அழகானது, இந்த "ஒழுக்கம்"!
ஒழுகு = நட, கடைப்பிடி, குணம் (ஆற்றொழுக்கு-நீரோட்டம் போல போய்க்கொண்டே இருப்பது!)

* உயர்வான ஒன்றைக் குறித்துக் கொண்டு, அதில் ஒழுகுவதே ஒழுக்கம்!
* உயர்வான ஒன்றைப் பற்றி, "பேச மட்டும் செய்யாது, அதைக் கடைப்பிடிப்பதே" = ஒழுக்கம்! ஆச்சாரம்!


ஒழுக்கம்-ன்னா என்ன-ன்னு ஐயன் என்ன சொல்றாரு?
ஒழுக்கம் விழுப்பம் தரலான்! ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்!

* பெரியதை (விழுப்பம்) தருவது = ஒழுக்கம்!
* அதனால் ஒழுக்கம் உயிரை விட கடைப்பிடிக்கப்படும்! ஆச்சாரத்தை (ஒழுக்கத்தை) கடைப்பிடித்தே ஆகணும்-ன்னு வள்ளுவரே சொல்றாரு! :)


ஓ...பெரியதைத் தருவது தான் ஒழுக்கமா?
அப்போ எது பெரியது? = கடவுள் தான் பெரியது! இதில் என்ன சந்தேகம்?
எனவே கடவுள் பூசை எல்லாம் "ஒழுங்கா" கடைப்பிடிச்சே ஆகணும்! "எக்காரணம்" கொண்டும் ஒழுக்கம்=ஆச்சாரம் விட்டுறக் கூடாது! சரி தானே?

ஹிஹி! சரி தான்! ஆனால் பொறுமை! பொறுமை!
ஞானம் பற்றிப் பேசினா மட்டும் போதாது! அனுஷ்டானமும் ரொம்ப ரொம்ப முக்கியம்! ஆத்மார்த்தமான அனுஷ்டானம்!
ஞானம், அனுஷ்டானம் ரெண்டுமே வேண்டும்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தானே ஒழுக்கம்? இப்போ எது பெரியது-க்கு வருவோம்! எது பெரியது?
என் அப்பனும் சுப்பனும் ஆன முருகப் பெருமான், இதே கேள்வியைத் தான் கேட்கிறான்! - "ஒளவையே, எது பெரியது?"

பெரியது கேட்கும் எரி தவழ் வேலோய்!-ன்னு வரிசையா லிஸ்ட் போடுகிறாள் தமிழ் மூதாட்டி!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு!
...
...
புவியோ அரவுக்கு ஒரு தலைப் பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
...
...
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்!
இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்போ சொல்லுங்க! எது பெரிது? கடவுள் பெரிதா? ஆமாம்! இல்லை-ன்னு சொல்லலை! கடவுள் = "பெரிது"! ஆனால் தொண்டர் = "பெரிதே"!!!

* கடவுள் = பெரி"து"!
* ஆனால், அடியார்களை கடவுளுக்கு ஆட்படுத்துதல் = பெரி"தே"!

இப்போ எல்லாத்தையும் ஒவ்வொன்னாக் கோர்த்துப் படிங்க!
* பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் (ஆச்சாரம்)! ஒழுக்கம் விழுப்பம் தரலான்!
* அடியார்கள் தான் "பெரிதே"!
* ஆக, அடியார்கள் என்னும் பெரிதைத் தருவது எதுவோ, அதுவே ஒழுக்கம் (ஆச்சாரம்)!

நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது! ஞானம்,அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும்! ஆனால்...ஆனால்....
* நித்ய கர்மாக்கள் = ஆச்சாரம்!
* அடியார்கள் = ஆச்சார-ஆச்சாரம்! சதாச்சாரம்!
நேயம் "சத்ஜன" சங்கே சித்தம் என்றார் ஜகத்குரு ஆதிசங்கரர்! அவர் வழி வந்தவர் அல்லவா காஞ்சி மாமுனிகள்! அவர் எப்படி இருப்பார்? ஆச்சாரத்தை விடுவாரா?

ஹிஹி! காஞ்சி மாமுனிகளா? ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
*** அடியவர்கள்=ஆச்சாரம்! - இந்த அடியவர் என்னும் ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
இனி திராச ஐயா இதைப் பற்றிப் பேசுவார்! அவர் இட்ட பழைய பதிவு இதோ! படிப்போம்! ஒழுகுவோம்!


மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை.
வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம். பேசமாட்டார்கள்.
வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.

வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.

ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார்.

சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று.
மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.

அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது .

நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது.
அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.

இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்.
அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""

இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள் - காஞ்சி மாமுனியின் கருணை!


காஞ்சி முனிகளை விடவா நாம் ஆச்சாரத்தில் விற்பன்னர்கள்?
அவர் ஹ்ருதயம் = ஆச்சார்ய ஹ்ருதயம்!
அவர் ஹ்ருதயம் = அடியவர் ஹ்ருதயம்!


நமக்குள் ஆயிரம் ஒழுக்க வேறுபாடுகள், அனுஷ்டான வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! ஆனால் ஹ்ருதயத்தில் அடியவர் வெறுப்பு என்பது மட்டும் கூடவே கூடாது! அது "ஆச்சாரம்" ஆகாது!

ஒழுக்கம் = விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தான் ஒழுக்கம்!
அடியார்கள் என்னும் பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் = ஆச்சாரம்!
இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பித்துக் கொள்வோம்!
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள் திருவடிகளே சரணம்!
நாராயண! நாராயண!

Monday, January 19, 2009

கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவு-1


ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூரத்தாழ்வாரது 1000ஆவது ஜெயந்தி மஹோத்ஸவ சிறப்பு இடுகை இட வேண்டும் என்று அறிந்தவுடன் இந்த மஹானுபாவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாதே என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற வருத்தம் ஏற்பட்டது. பதிவர் ஷைலஜாவிடம் விசாரித்ததில் அவர் தமது பங்களிப்பினை கண்ணன் பதிவில் இட இருப்பதாகச் சொன்னார். அடுத்ததாக நான் அணுகியது நண்பர் பரவஸ்து அவர்கள். அவரிடம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் போடுவதற்காக என்று கேட்ட மாத்திரம், கோரிக்கையை ஏற்று எழுதி அனுப்பினார். தன்னுடைய கருத்துக்கள் ஏதும் கலவாது, தான் கேட்டறிந்ததை, படித்தறிந்ததை எழுதியதாகக் கூறினார். கூரத்தாழ்வவர் பற்றி அவர் எழுதி அனுப்பியிருக்கும் செய்திகளை 2 அல்லது மூன்று இடுகைகளாக போட நினைத்திருக்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று, எழுதிய அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழே அவரது எழுத்துக்கள்.
----------------------------------------------------------------------------------------

ஸ்ரீமதே இராமானுஜாய நம:

லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்!
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!!


அடியேன், என் சிறு மதிக்கு எட்டிய வரையில், இந்த ஆசார்ய ஹ்ருதயத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 999 ம் வருடம் அவரைப் பற்றி எழுதும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது முன் பிறவியில் செய்த புண்ணியமே. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு குருவிடம், அவரது சிஷ்யர், மாணாக்கர், அடியார்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, கலியுகத்தின் மிகச் சிறந்த உதாரணம், கூரத்தாழ்வான்.


ஆங்கில ஆண்டு 2010 ம் வருடத்தில் வரக்கூடிய தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 1000 ம் வருடம் முடிவுறும். இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்.

திரு அவதார வைபவம்:

காஞ்சிக்கு வடமேற்கே சுமார் 5 மைல் தூரத்தில், அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள கூரம் என்னும், திருத்தலத்தில், கலி ஆண்டு 4111 சௌம்ய வருடம்,(கி.பி 1009) தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் தேய்பிறை பஞ்சமி திதி, வியாழக்கிழமை அவதரித்தார். ஹாரீத கோத்ரம், வடமாள் குலத்தைச் சேர்ந்த அனந்தர்-பெருந்தேவி நாயகி தம்பதியற்கு நல் திருமகனாய், ரகு குல திலக இராமனின் அம்சமாகப் பிறந்தார். ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் (திருமறுமார்பர்) என்று அழைக்கப்பட்ட கூரேசர், இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர்.

திருமணம்:

இரவில் நகர சோதனைக்கு கூரேசர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, ஒரு நாள் ,ஆண்டாள் என்னும் கன்னிகையின் இல்லம் தாண்டிச் செல்லும்போது, அவளின் பெற்றோர், தமது மகளின் ஜாதகம் சரி இல்லாததால் , திருமணம் நீண்ட காலம் தடை பட்டிருப்பதை, வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை.இல்லறப் பற்று இல்லாத போதும், அளவற்ற சீர்வரிசைகளை அனுப்பி ஆண்டாள் என்னும் அந்த கன்னிகையை, தாமே மணம் செய்து கொண்டார் கூரேசர். தம்பதியர் இருவரும், புராணம், இதிஹாஸம் மற்றும் ஸகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த ஆழ்ந்த வேத வித்துக்களாக விளங்கினர்.

இராமானுஜர் திருவரங்கம் செல்லப் புறப்பட்ட போது, கைங்கர்யம் செய்தல்:

அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார். அப்போது இராமானுஜர் கலங்கி நின்று வரதனை விட்டுப்பிரிய மனம் இல்லாமல் நிற்கிறார். அப்போது தமது மடத்திற்குக் கூட தகவல் சொல்லாமல், தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாளை மடத்திலிருந்து எழுந்தருளப் பண்ணி வரவும் பகவதாராதனத்திற்கு வேண்டிய பொருள்களை மடத்திலிருந்து கொண்டு வரவும் கூரத்தாழ்வார், முதலியாண்டான்,நடாதூர் ஆழ்வான் ஆகியோரை நியமிக்கிறார். அவர்களும் திருவாராதனப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஆரம்பித்த தொண்டு உள்ளம், கூரேசரின் இறுதிக்காலம் வரை இராமானுஜரின் தொண்டே தமது பணி என்று வாழ்ந்து இருந்தது.இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம், திருவாராதனம் முதலிய கடமைகளைத் தவறவிடாமல் தினமும் எல்லாரும் செய்ய வேண்டும் என்பதை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால் ஆசார்ய, மற்றும் பகவத் ஸங்கல்பம் கொண்டுள்ள எல்லாரும், இந்த நியமங்களை, கடினம் என்று நினைத்து ஒதுக்காமல், உங்கள் நேரத்தை இதற்கும் சிறிது ஒதுக்கினால் உஙகள் ஆசார்யர்களின் ஹ்ருதயம் நிச்சயம் குளிரும்.

ஆசார்ய சம்பந்தம் வந்து விட்டால், குடும்பத்தை விட்டு விட வேண்டுமா?:

கூரத்தாழ்வார், ஆசார்ய சம்பந்தம் வந்த உடன், தம் இல்லாளைப் பிறிந்து வாழ்ந்தார். அதை அறிந்த இளையாழவார், உடனே கூரேசரை அழைத்து, அவருடைய மனையாளை திருவரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். கூரேசரும் தமது மனையாள் ஆண்டாளை அழைத்து வருவதற்கு, கூரம் சென்றார். அங்கே அவர் முதலில் செய்த காரியம், தம்மிடம் மீதம் இருந்த செல்வங்களை அனைவருக்கும் வழங்கி விட்டு, தம் மனையாள் எனும் செல்வத்தை மட்டும் தம்முடன் இருத்தி, திருவரங்கம் திரும்புகிறார். வரும் வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வருகையில் “பயமாய்” இருக்கிறது என்று ஆண்டாள் தேவி உரைக்கவும் கூரேசர் “மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்?” என வினவுகிறார். அதற்கு தேவி அவர்கள் “பொன் வட்டிலில் தினமும் அமுது செய்த தேவரீர் இனிமேல் அமுது செய்ய ஒரே ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட!” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உடையவர் இருக்கும் இடமான திருவரங்கம் வந்து சேர்ந்தார். அதனாலேயே கூரேசர் “பொன் வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே!” என்று புகழப்பட்டார்.(ஒரு குந்து மணியைக் கூட, தூக்கி எறிய நமக்கு மனப்பக்குவம் வராது.மாறாக, தெருவில் ஏதேனும் பொன் கிடைத்தால், நாம் அதை எடுத்துக் கொண்டு விடுவோம்.!!!)

இங்கு ஆண்டாள் எனும் தேவியும் குடும்ப வாழ்க்கையை விடவில்லை. இளையாழ்வாரும் கூரேசர் துறவியாக வேண்டும் என்று விரும்பவில்லை.ஆசார்யர்களின் மனப்போக்கை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புறிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைக் கைவிடாமல், அதே நேரத்தில் ஆசார்யர்களுக்கும், ஆண்டவனுக்கும் நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்யலாமே.

கூரத்தின் சிறப்பும் அடையா நெடுங்கதவமும்:

அக்காலத்தில் கூரத்தின் சிறப்பே, கூரேசரின் இல்லத்தில் தினமும் நடைபெற்ற அன்னதானம் தான். தர்மம் தலை காக்கும் என்னும் நியமம் உண்மையாயின், அத்தகைய அன்னதானம் தான் கூரேசரின் வாழ்வையே திசை மாற்றும் கருவியாக விளங்கியது.அவரின் செல்வச் செழிப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது.(இக்ஷுவாகு குல திலக இராமனின் அம்ஸம் என்றால் சும்மாவா?). தோன்றிற் புகழொடு, தோன்றிய கூரேஸரின் திருமாளிகையில், காலை முதல், இரவு வரை, அங்கு வரும் அடியார்க்கு , இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடக்கும்.அதனால் அவரது இல்லத்தின் பிகப்பெரிய கதவு, அடையா நெடுங்கதவம் என்று அழைக்கப்பட்டது.கதவை அடைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை எனும்போது, ஏன் அப்படி ஒரு நெடுங்கதவம் வேண்டும்? பேரருளாளனின் அருள் கூரேசருக்குக் கிடைத்தது யாரால்?. அந்த நெடுங்கதவின் ஓசை தான் கூரேசரின் அருள்வாழ்வுக்கு வித்திட்டது. கோனேரி வாழும் குருகாய்- பிறப்பேனே என்று ஆழ்வார்கள் பாடியது போல, மரமாய்ப் பிறந்தாலும், ஓசை தரும் மணியாய் பிறந்தாலும் கூரேசரின் இல்லத்தின கதவாய் நாம் பிறந்திருக்கலாமே, என்ற ஆதங்கம் எல்லார் மனத்திலும் இருந்தது என்றால் மிகை ஆகாது. அத்தகைய பெருமை வாய்ந்த நெடுங்கதவம் தினமும் எப்போது அடைக்கப்படும்? காஞ்சிப் பேரருளாளனின் திருக்கோவிலில் இரவு திருவாராதனம் முடிந்து, திருக்காப்பு செய்யப்பட்ட பின்னரே, அடையா நெடுங்கதவம் அடைக்கப்படும். இவ்வாறாக கூரேசர் இல்லத்தில் எப்போதும் எல்லா திருமால் அடியார்களுக்கும் உணவு உபசரிப்பு கண்டிப்பாக உண்டு.

காஞ்சியில் ஒரு நாள் உற்சவத்தின் காரணமாக இரவில் திருவாராதனம் முடிவதற்குத் தாமதமானது. அதனால் பேரருளாளன், ஆலயத்திருக்கதவம் திருக்காப்பு பெறுவதற்குத் தாமதமானது. ஆனால் கதவின் திருக்காப்பு செய்யப்படும் முன்னரே, அதன் கிண்கிணிகளின் ஓசை பெருமாளுக்கும், தாயாருக்கும் கேட்டது. அப்போது, தனக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்த, தமது அந்தரங்கரான திருக்கச்சி நம்பிகளிடம் ”நம்பீ! எக்காரணத்தால், நமது திருவாராதனம் முடியும் முன்பே, கோயில் கதவம் திருக்காப்பு செய்யப்படுகிறது என பேரருளாளன் வினவ, அதற்கு நம்பி, "இது நம் கோயில் கதவத்தின் ஓசை அன்று. தொலைவில் உள்ள கூரேசரின் திருமாளிகையின் அடையா நெடுங்கதவத்தின் ஓசை" என்று பதிலிறுத்தார். அதைக்கேட்ட தேவப்பிரான் “கூரேசனின் ஐஸ்வர்யமோ நம்மை இங்ஙனம் மயக்கிற்று?” என வியந்தான். பேரருளாளனே தமது செல்வச் செழிப்பையும், தர்மத்தையும் வியந்தார் எனும் செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் கூரேசர், அறிந்து, மனம் உருகி, கண்ணீர் உகுத்து, செய்வதறியாது, திகைத்தார். பின்னர் ஒரு திடமான முடிவு எடுத்து, தம்மிடம் இருந்த நிலையாச் செல்வங்களில் பெரும்பாலானவற்றை ஏழைகளிடம் தானம் செய்து விட்டு, திருக்கச்சி வந்து எதிராசரை சரணடைகிறார். எதிராசரும் அவருக்கு, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து, தமது சீடராக ஏற்றுக்கொண்டார். கூரேசனுக்கு, “கூரத்தாழ்வான்” என்ற திருநாமம் இட்டார்.பின்னாளில் இவர் இராமானுஜரின் “பவித்ரம்” என்று அழைக்கப்பட்ட பெருமை பெற்றார்.

தண்டும் பவித்ரமும்:

திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரப் பொருள் அறிய வேண்டி இராமானுஜர் முயற்சி செய்த போது, நம்பிகள் இளையாழ்வாரிடம் “மறு நாள் தண்டும், பவித்ரமுமாக, தனியே வரவும்” என நியமிக்கிறார். அவ்வாறே இளையாழ்வார் மறு நாள் செல்கிறார். ஆனால் தனியாக அல்ல. முதலியாண்டான் , மற்றும் கூரேசரை உடன் அழைத்துச் சென்று நம்பிகளை அடைகிறார். அப்போது நம்பிகள் கோபமாக இராமானுஜரை நோக்கி “உம்மை தனியாகத் தானே வரச்சொன்னேன், உம்மோடு இருவரை ஏன் அழைத்து வந்தீர்” என வினவ, அதற்கு, நமது முனி, முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார். இந்த பெருமை அடைய கூரேசரை விட வேறு ஒருவர்க்குத் தகுதி உண்டோ? இங்கு முக்கிய செய்தி, நல்ல குரு என்பவர் தமது தகுதி உடைய சீடர்களுக்கும், தம்மைப்போல நல்ல கதி அடைய வேண்டும் என்றே விரும்புவார்.

.....கூரத்தாழ்வாரைத் தொடர்வோம், குருவருளைப் பெறுவோம்

Wednesday, December 31, 2008

குலபதி என்றால் என்ன அர்த்தம்?

குலபதி என்றால் என்ன அர்த்தம்னு கேஆரெஸ் கேட்டிருந்தார். அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்கு புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வாரா வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் இதிலே போடுகின்றேன்.

முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது.

எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம்.

இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றது. "யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 24, 2008

பரிபாடலில் பாவை நோன்பும், ஆண்டாளின் பாவை நோன்பும்!

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//

மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள். குறிப்பாகப் பாண்டிய நாட்டில் வையை நதி பெருக்கெடுத்து ஓடிய காலகட்டத்தில் வையைக் கரையில் நோன்பு நூற்கப் பட்டிருக்கின்றது. அதற்கான வழிமுறைகளையும் சொல்லுகின்றது பரிபாடல் பாடல்கள். அது ஆண்டாள் காலம் வரையிலும் சற்றே மாறுதல்களுடன் தொடர்ந்து வந்திருப்பதாயும் தெரியவருகின்றது.

இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.

மேலும் முதல் பாடல் பக்தி யோகத்தையும், அடுத்த பாடலான "வையத்து வாழ்வீர்காள்" கர்ம யோகத்தையும், மூன்றாம் பாடலான "ஓங்கி உலகளந்த" ஞான யோகத்தையும் குறிப்பிடுவதாயும் சொல்லுவதுண்டு. ஆண்டாள் கண்ணனைக் காதலோடு வர்ணிப்பதோடல்லாமல், கண்ணனையே மணாளனாக வரித்துக் கொள்ளுவேன் என்றும் உரிமையுடன் சொல்கின்றாள். ஆண்டாள் வாழ்ந்த காலத்திலே பெண்களுக்குத் தங்கள் மணாளனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்கு இத்தனை சுதந்திரம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அத்தோடு மட்டுமா? ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. முதல் பாடல் மூலம் கண்ணனுக்கு பக்தி செய்யவேண்டிய அவசியத்தையும், அவ்வாறு பக்தி செய்தால் கிடைப்பதையும் சொல்கின்றாள். இரண்டாவது பாடலில் எவ்வாறு விரதமுறைகள் எனக் குறிப்பிடுகின்றாள். அடுத்த பாடல் தான் இன்றளவும் அனைவராலும் மிக விரும்பிப் பாடப் படும் பாடல்.

டிஸ்கி: மெளலி இந்த வாரம் எழுதும்படி அழைத்தார். அழைத்து 4 நாட்கள் ஆகியும் என்னால் தயார் செய்து கொள்ள முடியலை, ஆகவே மீள் பதிவு சில மாற்றங்களுடன் தலைப்பையும் மாற்றிப் போட்டிருக்கிறேன். அடுத்தவாரமும் நானே தொடர்ந்தால் இதன் தொடர்ச்சி வரும். இல்லைனா நேரம் இருக்கும்போது எண்ணங்கள் பதிவிலே வரும். இந்தப் பாவை நோன்பைப் பற்றிய மேலதிகத் தகவல்களை http://jayasreesaranathan.blogspot.com/ இவரின் பதிவில் காணலாம். லிங்க் கொடுத்தால் போகவே இல்லை. அரை மணியாய் முயன்று பார்த்தும் எரர் வருது. ஆகவே மன்னிக்கவும். படமே ஒத்துக்கலை. ரொம்பவே ஆசாரமான வலைப்பதிவு போல! எதுவுமே ஒத்துக்கமாட்டேன்னு ஒரே பிடிவாதம்! இல்லைனா நம்ப ராசியோ??? ஷெட்யூல் பண்ணினா தேதி வேறே இப்போத் தான் 24-ம் தேதி காலைனு சொல்லுது. யு.எஸ். நேரம் தான் எடுத்துக்குதோ?

Wednesday, December 17, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -2



சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.

இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.

மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.



பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது

இவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்














ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....


ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.