Wednesday, December 31, 2008

குலபதி என்றால் என்ன அர்த்தம்?

குலபதி என்றால் என்ன அர்த்தம்னு கேஆரெஸ் கேட்டிருந்தார். அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்கு புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வாரா வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் இதிலே போடுகின்றேன்.

முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது.

எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம்.

இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றது. "யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 24, 2008

பரிபாடலில் பாவை நோன்பும், ஆண்டாளின் பாவை நோன்பும்!

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//

மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள். குறிப்பாகப் பாண்டிய நாட்டில் வையை நதி பெருக்கெடுத்து ஓடிய காலகட்டத்தில் வையைக் கரையில் நோன்பு நூற்கப் பட்டிருக்கின்றது. அதற்கான வழிமுறைகளையும் சொல்லுகின்றது பரிபாடல் பாடல்கள். அது ஆண்டாள் காலம் வரையிலும் சற்றே மாறுதல்களுடன் தொடர்ந்து வந்திருப்பதாயும் தெரியவருகின்றது.

இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.

மேலும் முதல் பாடல் பக்தி யோகத்தையும், அடுத்த பாடலான "வையத்து வாழ்வீர்காள்" கர்ம யோகத்தையும், மூன்றாம் பாடலான "ஓங்கி உலகளந்த" ஞான யோகத்தையும் குறிப்பிடுவதாயும் சொல்லுவதுண்டு. ஆண்டாள் கண்ணனைக் காதலோடு வர்ணிப்பதோடல்லாமல், கண்ணனையே மணாளனாக வரித்துக் கொள்ளுவேன் என்றும் உரிமையுடன் சொல்கின்றாள். ஆண்டாள் வாழ்ந்த காலத்திலே பெண்களுக்குத் தங்கள் மணாளனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்கு இத்தனை சுதந்திரம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அத்தோடு மட்டுமா? ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. முதல் பாடல் மூலம் கண்ணனுக்கு பக்தி செய்யவேண்டிய அவசியத்தையும், அவ்வாறு பக்தி செய்தால் கிடைப்பதையும் சொல்கின்றாள். இரண்டாவது பாடலில் எவ்வாறு விரதமுறைகள் எனக் குறிப்பிடுகின்றாள். அடுத்த பாடல் தான் இன்றளவும் அனைவராலும் மிக விரும்பிப் பாடப் படும் பாடல்.

டிஸ்கி: மெளலி இந்த வாரம் எழுதும்படி அழைத்தார். அழைத்து 4 நாட்கள் ஆகியும் என்னால் தயார் செய்து கொள்ள முடியலை, ஆகவே மீள் பதிவு சில மாற்றங்களுடன் தலைப்பையும் மாற்றிப் போட்டிருக்கிறேன். அடுத்தவாரமும் நானே தொடர்ந்தால் இதன் தொடர்ச்சி வரும். இல்லைனா நேரம் இருக்கும்போது எண்ணங்கள் பதிவிலே வரும். இந்தப் பாவை நோன்பைப் பற்றிய மேலதிகத் தகவல்களை http://jayasreesaranathan.blogspot.com/ இவரின் பதிவில் காணலாம். லிங்க் கொடுத்தால் போகவே இல்லை. அரை மணியாய் முயன்று பார்த்தும் எரர் வருது. ஆகவே மன்னிக்கவும். படமே ஒத்துக்கலை. ரொம்பவே ஆசாரமான வலைப்பதிவு போல! எதுவுமே ஒத்துக்கமாட்டேன்னு ஒரே பிடிவாதம்! இல்லைனா நம்ப ராசியோ??? ஷெட்யூல் பண்ணினா தேதி வேறே இப்போத் தான் 24-ம் தேதி காலைனு சொல்லுது. யு.எஸ். நேரம் தான் எடுத்துக்குதோ?

Wednesday, December 17, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -2



சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.

இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.

மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.



பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது

இவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்














ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....


ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.

Wednesday, December 10, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்-6

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்தனங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர்.

ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

Posted by Picasa


இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html

எழுத்தாளர் பாலகுமாரன் “நண்பன்” என்று ஒரு கதையை சுவையாக எழுதி இருக்கிறார். அது பிரம்மேந்திராள் கதைதான்.
நண்பர் ஜீவா பிரம்மேந்திராளின் சாகித்தியங்களின் பட்டியலுக்கு ஒரு சுட்டி கொடுத்து இருக்கிறார்.

சரி தற்காலத்துக்கு வரலாமா?

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்து கொண்டோம்.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

From nerur

Wednesday, December 3, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 5

யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர், புதுக்கோட்டை, தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

From nerur

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும், கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.

Wednesday, November 26, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் -4

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும், கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி "திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும்" என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வணங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.


Posted by Picasa


சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து, அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்களில் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கிறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அகமுகமாகவே இருந்துவிட்டார்.

அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.

Wednesday, November 19, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்-3

இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.

தஞ்சையிலிருந்து ஒரு வித்வான் -கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் - சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (சன்னியாசம் இவர் கொடுத்தாரா என்பதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்மமாகவே ஆகிவிட்டார்.

கொடுமுடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். சாதாரணமாக தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.

பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாகத்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.

புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி, இது வழி அல்ல என ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக, வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.

இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நாள் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மந்திரத்தை மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. நவ ராத்திரிபோது அதை காட்சிக்கு வைப்பதாக சொல்கிறார்கள்.

சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.

Wednesday, November 12, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் - 2

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகள் எல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே" என்று கேட்டார். யோகியார் "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் "உனக்கு சத் புத்திரன் உண்டவான்" என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை
அதற்கு சம்மதிக்கவில்லை. கொஞ்சம் காலம் சென்ற பின் மீண்டும் கேட்க அன்னையோ அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது என்று சிவராமன் உற்சாகமடைந்தார்.

சதாசிவருக்கு பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். பாடம் கேட்டு மனனம் செய்யவே 7 வருஷம் ஆகும். அப்புறம் மீமாம்சை படித்தால்தான் பாஷ்யம் படித்து வேதத்துக்கு பொருளை ஒருவாறு உணரமுடியும். அதற்குப்பிறகு அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும்.

ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

Thursday, November 6, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

கொஞ்ச நாள் முன்னால் நெரூர் போக நேர்ந்தது. அதைப்பத்தி பதிவு போடப்போய் மௌலி ஆச்சார்ய ஹ்ருதயத்திலேயும் இதை வெளியிடணும்ன்னு கொக்கி போட்டார். ரொம்பவே லைட்டா பேச்சு மொழியில எழுதறவன் இதிலே போடலாமான்னு யோசிச்சேன். உம்ம்ம்ம், விதி யாரை விட்டது?
கொஞ்சம் அதிக தகவல்களுடன் சில படங்களுடன் இதோ போட்டாச்சு.

சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.


Posted by Picasa


சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.

நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.

பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள் என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 9 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.

இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?

குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வந்த காரியத்தை பார்க்க போய்விட்டோம்.

நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.

நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கொஞ்சம் கனத்த மனசுடன் கிளம்பினோம்.

அடுத்த பதிவிலிருந்து பிரம்மேந்திராள் சரிதம்.

Wednesday, November 5, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -1

கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல. இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது. இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே போதேந்திரர், திருவிசை ஐயாவாள் என்று சில நாம பக்தி சிரோன்மணிகளை இங்கு கண்டோம். இன்று நாம் காண இருப்பது சமர்த்த ராமதாசர். தியாகராஜர், திருவிசையார், போதேந்திரர், மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் போன்றே இவரும் ராம பக்தியில் திளைத்தவர். ராமநாமத்தை பலகோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமசந்திர மூர்த்தியைப் பிரத்யக்ஷமாக கண்டவர். அவரது வரலாற்றினை அறியாலாமா? [ராமதாஸர் பற்றி திராச எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறார். அவர் ராமதாசர் பாடல்களை/பஜனைகளைப் பற்றி எழுத இருக்கிறார் என்றே நினைக்கிறேன், இது ராமதாசர் வரலாறு மட்டுமே]



பாரதத்தை அன்னியர்கள் ஆக்ரமித்த 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ராமதாஸர். இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள சதாரா என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜம்ப் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சூர்யாஜி பந்த்-ரேணுபாய் என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1605ஆம் ஆண்டு ராமநவமி தினத்தில் பிறந்தவர். தாய்-தந்தையர் இவருக்கு வைத்த பெயர் நாராயணன் என்பது. சிறுவயதில் இவரது உடலில், பின்பகுதி சற்று நீண்ட வால் போன்ற பாகம் இருந்ததாம்.ன் பின்னர் வயதான போது அது மறைந்துவிட்டதாக கூறுப்படுகிறது. பிற்காலத்தில் இவரை ஸ்ரீ ஹனுமானது அம்சம் என்று கூற இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் தந்தையை இழந்தாலும், அவரது தாயும் அண்ணனும் இவருக்கு காலத்தில் உபநயனம் போன்றவற்றைச் செய்து வைத்து வளர்த்து வந்தனர்.


சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார். அப்போது ஹனுமனது தரிசனம் மட்டுமன்றி அவரிடமிருந்தே ஸ்ரீராம மந்திரம் உபதேசமாகிறது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் நாராயணனது செயல்களில் அதிக மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது.

வேத பாராயணம், போன்ற நேரங்கள் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். அண்ணனின் மனத்தில் இருக்கும் எண்ணத்தை அறிந்த நாராயணன் வீட்டை விட்டு முழுதாக வெளியேறி நாஸிக் அருகில் ஒரு கிராமத்தில் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத் தொடங்குகிறார்.




இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மீலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார். இந்த தரிசனத்துக்குப் பின்னரே அவருக்கு சமர்த்த ராமதாஸ் என்ற பெயர் வழங்கலாயிற்று. தனது குருவான ஸ்ரீ ஹனுமனுக்கு கோவில் கட்டி அதனருகிலேயே தங்கி வந்தார்.



இவர் யாத்திரையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.

Wednesday, October 29, 2008

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2


ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.


அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா



என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.


இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.


திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.


இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]

கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.

Wednesday, October 22, 2008

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1

முன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.

இந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.

இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.


இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.


அடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]

Thursday, October 16, 2008

ஸ்ரீ வித்யாரண்யர்


14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.


இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.


ஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.

இவற்றைத் தவிர, "ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே "பஞ்சதசீ" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், "விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு "காலமாதவம்" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு "ஸங்கீத ஸாரம்" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே "மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.

அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா
வித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே!

அவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.

Wednesday, October 8, 2008

குருவைக் காட்டிலும் மேலானது குருவின் பாதுகைகள்



ஸ்ரீ ராமனுஜருக்கு அமைந்த சீடர்களில் வடுக நம்பி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர்தான் அவருக்கு தளிகை செய்யும் பாக்கியம் பெற்றவர்.ஸ்ரீ ராமானுஜர் சில வேளைகளில் உணவு அருந்த மறந்தாலும் அவருக்கு நினைவூட்டி அவரை உணவு அருந்தச் செய்வது அவருடைய வேலை.குருவின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் .தினமும் ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ராமனுஜர் இருக்கும்போது அவருடைய வீட்டின் வழியே ஸ்ரீ ரங்கநாதர் பவனி வருவார். உடையவர் எல்லா சிஷ்யர்களையும் போய் வண்ங்கச் சொல்லுவார். ஆனால் வடுக நம்பி போகமாட்டார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமனுஜர்தான் பகவானை விட குருவையே கொண்டாடினார்.குரு பக்திக்கு உதாரணமாக்த் திகழ்ந்தவர்.


ஒரு முறை ஸ்ரீராமனுஜர் மைசூரிலிருந்து வேறு ஊருக்கு பயணம் புறப்பட்டார்.பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் வடுக நம்பிதான் கவனித்தார். எல்லா பொருட்களையும் மூட்டைகட்டிக் கொண்டு வண்டியில் ஏற்றியாகி விட்டது.ஸ்ரீ ராமனுஜர் வடுக நம்பியை கூப்பிட்டு பெருமாள் இருக்கும் பெட்டியை பத்திரமாக வைத்தாகி விட்டதா என்று கேட்டார். அப்படியே வைத்தாகி விட்டது என்று கூறினார்.கிளம்புபோது உடையவர் தன்னுடையா பாதரக்ஷைகள் எங்கே என்று கேட்டார்.

உடனே வடுக நம்பி ஆச்சாரியரே நான் அப்போதே அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன் என்றார். எங்கே வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை பெருமாள் வைக்கும் பெட்டியோடு வைத்து விட்டேன் என்றார்.உடையவர் அபசாரம் செய்து விட்டீர்களே என்னுடைய பாத ரக்ஷைகளைப்போய் பகவானுடன் சேர்த்து வைக்கலாமா?அபசாரம் அபசாரம் என்றார். அதற்கு வடுக நம்பியின் பதில்தான் அவருடை குருபக்தியை காண்பித்தது.ஆச்சார்யரே பெருமாளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்கள் பாதரக்ஷையுடன் சம்பந்தம் வருவதற்கு என்றார்.அப்பேற்பட்ட சஞ்சலமில்லாத குருபக்தி.குருவை விட, பகவானை விட அவரது பதுகைகளே சிறந்தது என்ற பக்தி.ஸ்ரீ மான் நிகாமாந்த மஹா தேசிகன் பாதுகா ஸ்ஹஸ்ரம் என்ற நூலில் பதுகைகளின் பெருமையை பேசுகிறார். இன்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் அவதரித்த புராட்டாசி திரு நக்ஷ்த்ரமான திருவோணம். ஆச்சார்ய ஹிருதயம் அன்னாரின் ஆசிகளைக் கோருகிறது. பாதுகைகள் அயோத்தி ராஜ்யத்தையே 14 ஆண்டுகள் ஆண்டன.



குரு பாதுகா ஸ்தோத்ரம் குரு பாதுகையின் பெருமையை விளக்கும். கேட்டுப் பாருங்கள்




-

Wednesday, October 1, 2008

யார் புத்திசாலி? குருவா? சிஷ்யனா? (2)


சுக்ராச்சாரியார் நடந்தவற்றை ஞான திருஷ்டியில் உணர்ந்தார். தேவயானியிடம் கூறினார் மகளே கசன் இனி வரமாட்டான். அவன் இப்போது என் வயிற்றில் உள்ளான். அவன் உயிர் பெற வேண்டுமானால் நான் உயிர் துறக்க வேண்டும்.அவனை நீ மறந்துவிடு. ஆனால் தேவயானி கசனை என்னால் மறக்க முடியாது அதே சமயம் உங்கள் உயிர் போனாலும் நான் அதற்கு பிறகு உயிர் வாழமாட்டேன் என்றாள்.
சுக்கிராச்சாரியார் இப்பொழுது புரிந்து கொண்டார்."கசனே நீ வந்த காரியம் சித்தியாகும் காலம் வந்து விட்டது. தேவயானிக்காக நான் உன்னை உயிர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் நானும் உயிர்துறக்காமல் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி உனக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்.என் வயிற்றிலிருக்கும் நீ அதைக் கற்றுக் கொண்டு என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து பிறகு அந்த மந்திரத்தை உபயோகித்து என்னை பிழைப்பித்து தேவயானியின் துக்கத்தை தீர்த்து விடு.இவ்வாறு சொல்லிவிட்டு குரு தன் சிஷ்யனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். கசன் கற்றுக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து பிறகு அதே சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து குருவை பிழைக்க வைத்தான்.
பின்னர் சிறிது காலம் இருந்து முழு கல்வியையும் கற்றுக் கொண்டு பிறகு குருவிடம் விடை பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்டான். அப்பொழுது தேவயானி தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டாள். அதற்கு கசன் தேவயானி எனக்கு குருவான உன் தந்தை எனக்கு கல்வி கற்றுக் கொடுத்தார், மேலும் நான் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபடியும் பிறந்ததால் அவர் எனக்கும் தந்தை போன்றவர், நீயும் எனக்கு சகோதரி போன்றவள். ஆதலால் உன்னை மணக்க முடியாது என்றான். இவ்வாறு கூறிவிட்டு கசன் தேவலோகம் சென்றான்.
இனி தலைப்புக்கு வரலாம். தான் எடுத்துக் கொண்ட விரதமான சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்து, மாதுவின் இச்சைகளுக்கு ஆட்படாமல் வெற்றிகரமாக தன் காரியியத்தைச் சாதித்துக் கொண்ட சிஷ்யன் புத்திசாலியா? இல்லை மகள் மீது உள்ள அதீத பாசத்தினாலும், மதுவின் மயக்கத்தினால் தன்னையும் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தையும் இழந்த குரு புத்திசாலியா?. ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்

Wednesday, September 24, 2008

யார் புத்திசாலி குருவா? சிஷ்யனா?

அசுரர்கள் குருவான சுக்ராசாரியாருக்கு சஞ்சிவினி மந்திரம் தெரிந்ததால் போரில் மாண்டுபோன அசுரர்களை உயிர்பெறச்செய்து தேவர்களுக்கு கஷ்ட்த்தை கொடுத்துவந்தார்.தேவர்கள் இந்திலிருந்து எப்படி மீள்வது என்று யோஜித்து தங்கள் குருவான பிருஹஸ்பதியை அணுகினார்கள்.அவரும் தன்க்கு அந்த மந்திரம் தெரியாது,ஆனால் தன் மகன் கசனை கேட்டுப் பார்க்கலாம் என்றார்.தேவர்களும் அதன்படியே கசனை அணுகி சுக்க்ராசாரியாரிடம் சென்று சஞ்ஜீவினி மந்திரத்தை கற்றுவரும்படி கேட்டுக்கொண்டார்கள்.கசன் அழகுள்ளவன் அதனால் சுக்ராசாரியாரின் மகளான தேவயானியால் விரும்பப்படுவான் சுக்ராசாரியாருக்கு மகள் பேரில் பாசம் அதிகம் அதனால் எப்படியாவது கசன் சஞ்ஜிவினி மந்திரத்தை கற்றுக் கொண்டுவிடுவான் என்பது தேவர்களின் எண்ணம்.
கசனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சுக்ராசாரியாரிடம் சென்று "நான் பிரஹஸ்பதியின் குமாரன் பிரும்மச்சரிய விரதம் இருந்து உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்"" என்றான். அவரும் அவனை உடனே சீடனாக ஏற்றூக்கொண்டார். அந்தகாலத்தில் ஒர் வழக்கம்,யாராவது ஒருவர் குருவை அணுகி தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

கசனும் மிகவும் கவனத்துடன் குருவுக்கு பணிவிடைகள் செய்து குருவின் மகளான தேவயானியையும் நன்றாக சந்தோஷப்படுத்திவந்தாலும் விரதத்தை விடவில்லை.கொஞசகாலம் இப்படியே சென்றது. அரக்கர்களுக்கு ஏனோ ஒரு சந்தேகம் குசன் சஞ்ஜீவினி மந்திரத்தை எப்படியாவது குருவிடமிருந்து கற்றுக் கொண்டு போய் தேவர்களுக்கு கொடுத்து விடுவான் என்று. ஆகவே அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்.குசன் காட்டுக்குள் சென்று குருவிற்கு பசுக்களை மேய்க்கச் சென்றபோது அவனைக் கொன்று அவன் உடலை நாய்களுக்கு உணவாக போட்டு விட்டார்கள்.மாடுகள் திரும்பிவந்தும் கசன் வராததால் தேவயானி கலக்கமடைந்து தந்தையிடம் கூறினாள்.குரு ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து சஞ்ஜிவினி மந்திரத்தை பிரயோகித்து குசனை உயிர்பெறச்செய்து விட்டார்.மறுபடியும் ஒருநாள் குசன் காட்டுக்குச் சென்றபோது அசுரர்கள் அவனைக் கொன்று சாம்பலைக் கடலில் கரைத்து விட்டார்கள். தேவயானியின் முயற்சியால் மறுபடியும் குரு அவனை சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் உயிர்பெறச்செய்தார்.அசுரர்கள் கசனை விட்டபாடில்லை. மூன்றாவது தடவையாக அவனைக் கொன்று அவன் சாம்பலை மதுவில் கரைத்து சுக்ராச்சாரியாருக்கே கொடுக்க அதைக் அவரும் குடித்து விட்டார். கசன் அவர் வயிற்றில் ஐக்கியமானான். குசனின்மீது ஒருதலைக்காதல் கொண்ட தேவயானி தன் தந்தையிடம் மறுபடியும் முறையிட்டு குசனை உயிர்பித்துத்தர வேண்டினாள்
மீதியை அடுத்தபதிவில் பார்க்கலாமா ?

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Thursday, September 11, 2008

ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி இன்று! ஓணம், திருவோணம்!

வாதிராஜர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னர் தியானத்தில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு வெள்ளைக் குதிரையாக வந்து நிலத்தில் திருவிளையாடல் புரிந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பது புரிந்தது. தியானம் கலைந்தது. நிலத்து உரிமையாளரோ அற்புதம் செய்த குதிரையை மீண்டும் காணவேண்டும் என ஆசைப் படுகின்றார். வாதிராஜருக்கு உண்மை நிலைமை புரிய, இனி அந்தக் குதிரை கண்ணில் காண முடியாது எனப் புரிய, நிலத்துக்காரரை எச்சரிக்கின்றார். விபரீத ஆசை வேண்டாம் என்றும், அந்தக் குதிரையை இனியும் பார்க்க முயன்றால் ஒருவேளை கண்பார்வையே போய்விடும் என்றும் சொல்லுகின்றார். நிலத்துக் காரரோ, பிடிவாதமாய்க் கண் போனாலும் பரவாயில்லை, என்று அன்று இரவு மீண்டும் நிலத்துக்குப் போய்க் குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, குதிரையும் வந்தது. அதைப் பார்த்ததுமே அவர் கண்பார்வையும் போனது. ஆனாலும் நிலத்துக்காரர் கவலைப்படாமல் இறைவனின் அவதார சொரூபத்தைத் தரிசிக்க முடிந்ததை எண்ணி மன மகிழ்ந்து இருந்தார். ஆனால் ஸ்ரீ வாதிராஜர் அவ்வாறு இருக்க முடியாமல் ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்ள, நிலத்துச் சொந்தக் காரரின் கண்பார்வை திரும்புகின்றது.

தெய்வீகக் குதிரையின் காலடி பட்ட இந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று நிலத்துச் சொந்தக் காரர் அந்த நிலத்தை ஸ்ரீமடத்துக்கே கொடுக்கின்றார். அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வேகவைத்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து, ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி என்று அழைக்கப் படுவதாய்த் தெரிகின்றது. (எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா, தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)

அம்பி, உடனேயே கடலையை வேக வைக்கக் கிளம்பவேண்டாம், இன்னும் கொஞ்சம் இருக்கு இதிலே! அதுக்குள்ளே கடலை போட அவசரமா?????

ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார் ஸ்ரீவாதிராஜர். அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில் வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார். ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம் மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும் உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால் வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர் தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள் ,அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம் கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.

ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப் புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும் உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப் பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, “வாதிராஜ குள்ளா” என்னும் ஒருவகைக் கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும் ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே செய்து வழிபடலாம். ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம் ஆண்டு “ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.

குரு பரம்பரை சுலோகங்கள்!

குரு பரம்பரை-ன்னா என்னா? எல்லாருக்கும் தெரிந்திருக்கும்!
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள்!

எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படி கால் தொடங்கி...வந்து வழி வழி ஆட்கொண்டு அருளும் குரு பரம்பரை!
அந்த குரு பரம்பரை சுலோகங்களை இன்று தியானிப்போம்!


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
நீங்களும் இரண்டு சுலோகங்களையும் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த சுலோகங்கள் திருமடங்களில் சொல்லப்படுகிறதா என்ற மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

பிகு:
ஒவ்வொரு வியாழனும் பதிவைத் தவற விட வேண்டாம் என்று மெளலி அண்ணா ஒரு முறை பேசும் போது சொன்ன ஞாபகம்!
கீதாம்மா வாதிராஜர் தொடரைப் போடுகிறார்கள்; ஹயக்ரீவ ஜெயந்தியான நாளைக்கு அவர்கள் பதிவை நிறுத்தி வைத்துள்ளார்கள்! அதான் இந்த Filler Post!

Monday, September 1, 2008

கீதாசாரியனா??? ஜகதாசாரியனா??? யார் உண்மையான ஆசாரியன்?

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.


இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.

//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//


இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

சொந்த செலவில் மான்யம்:
யாருங்க அது, அங்கே நமக்கு நாமே மானியம் கொடுத்துக்கக் கூடாதுனு சொல்றது?? திராசவா?? ம்ஹூம், சான்ஸே இல்லை, அவர் இங்கே எல்லாம் வர மாட்டாரே! :P கே ஆரெஸ் பதிவுக்குத் தான் போய்ப் பின்னூட்டம் போடுவாராமே? அப்படியா??? :P:P:P

Wednesday, August 27, 2008

வெள்ளைக் குதிரையாக வந்தது யார்??? வாதிராஜர் தொடர்ச்சி

ஸ்ரீவாதிராஜர் மடத்தின் அதிபதியாக ஆன சமயம். ஸ்ரீமடத்தை ஒட்டி, தனியார் ஒருவரின் நிலம் மிக மிகப் பெரிய பரந்த நிலம், இருந்தது. அதன் உரிமையாளர் நிலத்தில் கடலையை விதைத்திருந்தார். கடலையும் செழிப்பாய் வளர்ந்திருந்தது. பயிர்கள் இன்னும் சிறிது காலம் போனால் கடலையை எடுக்கலாம் என்ற நிலைமை. தினம்போல் அன்றும் நிலத்துச் சொந்தக் காரர் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்ல வந்திருந்தார். அப்போது அங்கே ஒரு பகுதியில் பயிர்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப் பட்டது. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறுநாளும் சென்று பார்க்க, மீண்டும் அதே மாதிரியாக, இன்னும் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப் பட்டது. “ஆஹா, யாரோ வந்து திருடித் தின்கின்றனர், அல்லது எடுத்துச் செல்கின்றனர்.” என்று எண்ணிய நிலத்துக் காரர் அன்று இரவு எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணியவராய், இரவு நேரம் நிலத்திலேயே ஒரு பக்கம் மறைவாய்க் காத்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் ஸ்ரீமடத்தில் இருந்து கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்தோடு ஒரு குதிரை ஒன்று வந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப் படுத்தியது. தாங்க மாட்டாக் கோபத்தோடு நில உரிமையாளர் ஓடிப் போய் அந்தக் குதிரையை விரட்டினார்.
குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஸ்ரீ மடத்தினுள் புகுந்து கொண்டது. சரி, இங்கே தானே இருக்கப் போகின்றது, பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினார் நிலத்துக் காரர். மறுநாள் நேரே ஸ்ரீ வாதிராஜரிடம் சென்றார். நடந்தவற்றை அப்படியே விவரித்தார். இது என்ன நியாயமா? என்று நியாயமும் கேட்டார். ஆனால் வாதிராஜரோ மறுக்கின்றார். ஸ்ரீ மடத்திற்கு எனச் சொந்தமாய்க் குதிரையே கிடையாது என்றும், நிலத்துக்காரர் சொல்லுவது உண்மையாக இருக்குமா என்றும் சந்தேகப் படுகின்றார். நிலத்துக் காரரோ அடித்துச் சொல்கின்றார். தான் தன்னிரு கண்களால் நடந்தவற்றைப் பார்த்ததாய். எனினும் மீண்டும் அன்று இரவும் பார்க்கப் போவதாயும், அதன் பின்னர் மீண்டும் வாதிராஜரை மறுநாள் வந்து பார்ப்பதாயும் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

அன்று இரவு. மீண்டும் நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகே மறைந்திருந்து காவல் காக்க, மீண்டும் அதே வெள்ளைக் குதிரை மடத்தில் இருந்து வெளியே வந்து வழக்கம்போல் நிலத்திற்குள் நுழைந்து, பயிர்களைச் சேதப் படுத்தத் தொடங்கியது. கடலைச் செடிகள் மிதிபட்டன, தின்றது போக மற்றவை சேதம் ஆயின. பின்பு எப்படி வந்ததோ அது போலவே மடத்தினுள் நுழைந்து மறைந்தது. நிலத்துக் காரர் குதிரையைத் துரத்திக் கொண்டு வந்தவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. சாதாரணக் குதிரைக்கே வேகம் அதிகம். இது சாதாரணக் குதிரை அல்லவே. அசாதாரண வேகத்துடன் ஓடி மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் வாதிராஜரின் முன்னிலையில் வந்து நின்றார் உரிமையாளர். “ஸ்வாமி, இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது எனக்கு. என் இரு கண்களால் நன்றாய்க் கண்டு விட்டேன். வெள்ளைக் குதிரை ஸ்ரீமடத்தில் இருந்தே வெளியே வந்து என் நிலத்தினுள் புகுந்து கடலைச் செடிகளைத் தின்றுவிட்டு சேதமும் பண்ணிவிட்டு, ஓடி மறைந்துவிட்டது.” என்று சொல்கின்றார். வாதிராஜரோ திகைப்புடன் ஸ்ரீ மடத்தில் குதிரையே கிடையாது, ஆனால் இவர் இப்படிச் சொல்லுகின்றாரே என்றார்.


ஆனால் நிலத்துச் சொந்தக் காரரோ, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஏற்கெனவேயே நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டதாயும், குதிரையை அடக்காவிட்டால் மேலும் ஏற்படும் இழப்பைத் தன்னால் தாங்க முடியாது எனவும் சொல்லுகின்றார். வாதிராஜர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இழப்பைத் தானே ஈடு செய்வதாயும், இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்லுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றார். ஆனாலும் ஸ்ரீமடத்தில் குதிரையே கிடையாது என்பதை வலியுறுத்தவும் தவறவில்லை அவர். நிலக்காரர் ஒருமாதிரியாக நஷ்ட ஈடு கிடைக்குமே என்று ஆறுதலுடன் சென்றார். மீண்டும் நிலத்தை மதிப்பீடு செய்யச் சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். ஓடோடி வந்தார் வாதிராஜரிடம். “ஸ்வாமி, ஸ்வாமி, இது என்ன அதிசயம்?? ஒரே மாயாஜாலமாக அல்லவா இருக்கின்றது. எங்கெங்கே சேதங்கள் ஏற்பட்டனவோ அந்த இடத்தில் எல்லாம் தங்கக் கடலைகள். ஸ்வாமி, அந்தக் குதிரை சாதாரணமானதல்ல. தெய்வீகக் குதிரை. தாங்களே வந்து பாருங்கள் அந்த அதிசயத்தை!” என்று பரவசத்துடன் கூறுகின்றார்.

இப்போத் தான் கவனிச்சேன், இது 50-வது பதிவு என்று.

50-வது பதிவு

Wednesday, August 20, 2008

தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்ட குழந்தை!

எந்தவொரு காரியத்துக்குமே காரணங்கள் கட்டாயமாய் இருக்கும். ஆராயப் போனால் நம் அறிவுக்கு உகந்த முறையில் சரியான பதில் எல்லாவற்றுக்கும் கிடைப்பது இல்லை. பொதுவாகவே நம் பெரியோர்கள் அதனாலேயே நம்மை எதையும் அதிகம் ஆராயாதே எனச் சொல்லி வருகின்றார்கள் போலும். இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன், காரணத்தை மட்டுமல்லாது, காரியத்தையும் அவனே அறிவான். மாத்வாசாரியாரின் மகத்தான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஸ்தாபித்த 8 மடங்கள் பற்றித் தெரிந்திருக்கும். அந்த எட்டு மடங்களின் தலைமை குருவாக இருப்பவரே மாறி, மாறி உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயிலின் வழிபாடுகளைச் செய்து வருகின்றனர் இன்றளவும். அதில் ஒன்றான ஸோதே மடத்தின் அதிபதியான வாகீச தீர்த்தர் ஒரு ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு தம்பதிகள் அவரை வந்து பார்த்துக் காலில் விழுந்து வணங்கி விண்ணப்பம் கோரி நின்றனர். தம்பதிகளுக்குத் திருமணம் ஆகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே வாகீச தீர்த்தரிடம் தங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றனர் இருவரும்.

வாகீச தீர்த்தர் ஒரு மகான். நடக்கப் போவதை அறிந்தவர். அவர் சொல்கின்றார்: "உங்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுவும் ஆண் குழந்தையாகவே பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே எங்கள் ஸ்ரீமடத்திற்குக் குழந்தையைத் தந்து விடவேண்டும், சம்மதமா?" என்று கேட்கின்றார். தம்பதிகள் தடுமாறினார்கள். குழந்தை நிச்சயம் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தையே பிறக்கும். ஆனால் பிறந்த குழந்தையை எவ்வாறு ஸ்ரீமடத்திற்குத் தருவது?? கொஞ்சம் கலங்கினர் இருவரும். பேசாமல் நின்றனர். மகான் யோசித்தார். இவர்கள் இவ்வாறெல்லாம் வழிக்கு வரமாட்டார்களே?? என்ன செய்வது??? வாகீச தீர்த்தர் சொல்கின்றார்:"சரி, நான் வேறொரு யோசனையைச் சொல்கின்றேன். பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை உங்களுக்கு. ஆனால் அது வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை ஸ்ரீமடத்துக்கு. சம்மதமா?" என்று கேட்கின்றார்.

போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருக்கிறது இருவருக்கும். அப்பாடா, குழந்தையாவது வீட்டுக்கு வெளியே பிறப்பதாவது?? எப்படியும் வீட்டுக்கு உள்ளேயே குழந்தை பிறக்கும், நாமும் குழந்தையை மடத்துக்குக் கொடுக்கவேண்டியதில்லை, ஆகவே இதுக்கு சரினு சொல்லிடுவோம். இருவரும் ஒத்துக் கொண்டனர். வாகீச தீர்த்தர் அளித்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வருகின்றனர். இவர்கள் பெயர் இருவிதமாய் வழங்குகின்றது. ஒரு சாரார் தேவரநாம பட்டர்-கெளரிபாய் என்றும் இன்னும் சிலர், ராமாசார்யர்-சரஸ்வதி என்றும் சொல்கின்றனர். நமக்கு முக்கியம் ஸ்ரீவாதிராஜரே. ஆகவே அதைக் கவனிப்போம்.

வாகீச தீர்த்தரின் வாக்குப் பலித்தது. கெளரிபாயின் வயிற்றில் திரு உதித்தது. பட்டருக்குக் கவலை அதிகம் ஆனது. மனைவியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார். வெளியே எங்கும், எதற்கும் மனைவியை அனுப்புவதில்லை. தானே வெளிவேலைகளையும் சேர்த்துக் கவனித்து வருகின்றார். வீட்டின் பின்பக்கம் ஆன தோட்டத்துக்கோ, மாட்டுத் தொழுவத்துக்கோ கூட மனைவியை அனுப்பாமல் அதையும் தானே கவனித்துக் கொண்டு மனைவியின் நடமாட்டத்தையே கட்டுப் படுத்திக் கொண்டு வந்தார். பிரசவம் என்பது எப்படியும் வீட்டின் உள்ளே தானே நடக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தாலும், ஒருவேளை என்ற சந்தேகமே இவ்வாறெல்லாம் அவரை நடக்க வைத்தது.

நாட்கள் சென்றன. கெளரிபாய் நிறை கர்ப்பிணி. வீட்டுக்குத் திடீரென ஒரு விருந்தினர் வந்தார். வேறு வழியில்லை. கர்ப்பிணியான கெளரிபாயே எழுந்து அவரைக் கவனித்தார். சாப்பாடு சாப்பிடும் நேரமும் வர, இருவருக்கும் நிறை கர்ப்பிணியான கெளரிபாயே உணவும் பரிமாறினார். அப்போது வீட்டின் கொல்லைப்புறம் திறந்திருந்தது. அது வழியாக ஒரு மாடு உள்ளே நுழைந்தது. அவர்கள் மாடு இல்லை அது. கொல்லையில் தோட்டம் வேறே இருந்தது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு அர்த்தமும் உண்டல்லவா??? மாடு உள்ளே நுழைந்ததின் காரணமே, உலகுக்குச் செல்வத்தை இவர்களே வைத்துக் கொள்ளப் போகின்றார்களோ என்ற பயமாயும் இருக்கலாமோ???

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபடியால் வேறு வழியில்லாமல் கெளரிபாய் வெளியே வர நேரிட்டது. வெளியே வந்து மாட்டை விரட்டினார். அதுவா, வேகமாய் ஓட மறுத்தது. நகர மறுத்துச் சண்டித்தனம் வேறே. மாட்டைச் சற்றுக் கோபத்துடனேயே வேகமாய் ஓடிப் போய் விரட்ட ஆரம்பிக்கின்றார் கெளரிபாய். திடீரென ஓட ஆரம்பித்த மாடு வேகமாய் ஓடி மறைய, மாட்டின் பின்னால் இயல்புக்கு மாறாக வேகமாய் ஓடிய கெளரிபாய்க்கு வீடு நோக்கித் திரும்பும் எண்ணம் வர வைத்தது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலி. வேதனையில் துடித்த அவர் வீடு நோக்கி அவசர, அவசரமாய்த் திரும்ப முயல, திரும்ப முடியாமல் அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார் நடக்கக் கூட முடியாமல்.

அப்போது பார்த்தால் வாசலில் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த இருவர் நிற்க, என்னவெனப் போய்ப் பார்க்கின்றார் பட்டர். ஒரு தங்கத் தாம்பாளத்தை அவர் கையில் கொடுத்துப் பிறக்கும் குழந்தை பூமியில் படுமுன்னே அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்துமாறு வாகீச தீர்த்தர் சொன்னதாய்ச் சொல்லவே, கலங்கிய பட்டர் அப்போது தான் மாட்டைத் துரத்திய மனைவி வீட்டினுள் நுழையவில்லை எனப் புரிந்து வேகமாய் வெளியே ஓட, அப்போது ஒரு ஒளிமயமான ஆண்குழந்தை பிறக்க, செய்வதறியாது, தன் கையில் இருந்த தங்கத் தாம்பாளத்தில் அந்தக் குழந்தையை ஏந்தினார் பட்டர். வேறு வழி இல்லை. நிபந்தனையில் ஜெயிப்போம் என நினைத்தால் இறைவன் அருள் இவ்வாறு இருக்கின்றதே! குழந்தையை எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்திற்குச் சென்று வாகீச தீர்த்தரிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார் பேச்சுப் படியே பட்டர். பட்டரைப் பார்த்த வாகீசர், உலகு உய்ய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை உங்கள் குழந்தையாக இருப்பான் என்று ஆசீர்வதிக்கின்றார். மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி வளர்த்தார் வாகீச தீர்த்தர். கூடவே குழந்தைக்கு ஞானமும் ஊட்டப் பட்டது. அந்தக் குழந்தைதான் வாதிராஜர்.

அடுத்து வாதிராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அற்புதங்களும், கடலை நைவேத்தியமும்.

தொடரும்

Wednesday, August 13, 2008

ஸ்ரீ வாதிராஜர்


அம்பி கேட்டிருந்த ஹயக்ரீவருக்குக் கடலை நைவேத்தியம் பத்தி எழுதணும்னு ரொம்ப நாட்களாய் முயன்றும் நேரமின்மையால் எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியாவது எழுதணும்னு ஆரம்பிச்சிருக்கேன், முடிக்க அந்த ஹயக்ரீவர் அருள் புரியவேண்டும்.
*************************************************************************************

முதலில் ஹயக்ரீவர் பற்றிய ஒரு சின்ன அறிமுகம். அநேகமாய் இரு பதிவுகளாய் வெளிவரும்னு நினைக்கிறேன். ஏற்கெனவே ராமாயணத்தைத் தோற்கடிக்கிறோம்னு ஒரு புகழ்ச்சி இருக்கு நம்ம பதிவுக்கு. ஆகவே கூடியவரையில் சுருக்கமாய்!

எப்போவுமே கல்விக்குத் தனிச் சிறப்பு. அந்தக் கல்விக்கு அதிபதியாய் நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை! ஆனால் அந்த சரஸ்வதிக்கும் ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும்?? அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே! ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். ஆனால் இன்றைய கல்வி வயிற்றுப் பாட்டுக்காக இருப்பதால் அதில் சந்தோஷம் இருந்தாலும் பேரானந்தம் என்பது இருக்க முடியாது. ஆனந்தம் வேறே, சந்தோஷம் வேறே இல்லையா??? சந்தோஷம் எப்போவும் தனித்து இருக்காது, தனித்து வராது. கூடவே துக்கமும் வரும். ஆனால் ஆனந்தம் அப்படி இல்லை. சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும் அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஆன ஹயக்ரீவர் தோன்றியது எப்படி? நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். ( தேவி மஹாத்மியத்தில் வரும் மது, கைடபர்கள் இவர்கள் இல்லை. ஆகவே அவர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.) வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையே?? உலகை இருள் சூழ்ந்தது. பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு, சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக் கிளம்பினார்.

"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்" என்றும்,

"வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை
பயந்தவனே! எனக்கருள் புரியே" என்றும் முறையே எட்டாம் திருமொழியிலும், மூன்றாம் திருமொழியிலும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.

அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்ற மகான்கள் பலர் உண்டு. அவர்களில் ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் முக்கியமானவர்கள் என்றாலும், மாத்வாச்சாரியாரால் நிர்மாணிக்கப் பட்ட அஷ்ட மடங்களில் ஒன்றான ஸோதே மடத்தின் பீடாதிபதியாகவும், பிறக்கும்போதே தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்டவரும், பிறந்ததிலிருந்து ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை உண்டு வளர்ந்தவரும், ஹயவதன என்னும் முத்திரையோடு பலப் பல கீர்த்தனைகளை ஹயக்ரீவர் பால் எழுதியவரும் ஆன ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் பற்றியே இங்கே நாம் காணப் போகின்றோம்.