Wednesday, July 30, 2008

நாம சங்கீர்த்தன குரு - ஸ்ரீ போதேந்திரர்..





கலியில் பல நேரங்களில், பல்வேறு காரணங்களால் கர்மானுஷ்டானங்களை சரிவரச் செய்ய முடிவதில்லை. அப்படியே செய்தாலும் அவை எல்லாம் டாம்பீகத்துக்குகாக செய்வதாகவே இருக்கிறது. சிரத்தையால் வருவது ஞானம் என்பார்கள். இப்போது சம்ஸ்காரங்கள் சரியாக இல்லாததால் ஞான சூன்யர்களாக ஆகிவிடுகிறோம். இந்த நிலையினை முன்பே அறிந்த சுகர், "கீர்த்தனாதேவ கிருஷ்ணஸ்ய" என்று குறிப்பிட்டுளார் போல. அதாவது ஸ்ரீகிருஷ்ண சங்கீர்த்தனத்தாலேயே பந்தம் நீங்கி பரமாத்மாவை ஆடையலாம் என்பதாக பொருள்.


கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தின் மூலமே இறையனுபவம் பெறலாம் என்று நிதர்சனமாக காட்டியவர்கள் புரந்தர தாஸர், கனகதாஸர், ராமதாஸர், க்ஷேத்ரஞ்யர், கிருஷ்ண சைதன்யர், ஸமர்த்தர், தூக்காராம், கபீர்தாஸர், துளசிதாஸர், ஹரிதாஸ், மீரா, ஸ்ரீ வல்லபர் போன்றவர்கள். இங்கே குறிப்பிட்ட நாம சங்கீர்த்தன சக்ரவர்த்திகள் எல்லோரும் தமிழகத்தைச் சாராதவர்கள். இன்று தியாகப்பிரம்மத்தை நாம சங்கீர்த்தன பரம்பரையில் சேர்த்துக் கொண்டு பாடுவது இருக்கிறதென்றாலும், இவருக்கு முன்பே இரண்டு காமகோடி மடத்து பீடாதிபதிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை தமிழகத்துக்கு உணர்த்தியவர்கள் உண்டு. அவர்கள் ஆத்ம போதேந்திரரையும், பகவன் நாம போதேந்திரரும் ஆவர். காமகோடி பீடத்தின் 58ஆவது பீடாதிபதியான வித்வாதிகேந்திரர் என்ற ஆசிரம பெயர் கொண்ட ஆத்ம போதேந்திரர், ஞான, பக்தி வைராக்யங்களில் சிறந்தவர். இவரது சீடரே போதேந்திர ஸ்வாமிகள் என்று இன்று பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் தக்ஷிண ஸம்பிரதாய பஜனைப் பத்ததியை நமக்கெல்லாம் அருளிய சீலர். இதில் சிறப்பென்னவென்றால் போதேந்திரரும் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார், 59ஆம் பீடாதிபதி. இந்த போதேந்திரரே பகவன் நாம ரஸோதயம் என்னும் பரம பவித்ரமான நூலை அருளியவர். இந்நூலில் நவ லக்ஷணமான பக்தியில் நாம சங்கீர்த்தனதுக்கு பிராதான்யம் அளித்து, அது இந்த யுகத்துக்கு எத்துணை ஏற்றதாக இருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். இந்த நூலிலே பாகவத தர்மம், ஸனாதன தர்மம், அத்வைதம் ஆகிய மூன்றையும் இணைத்து கூறியுள்ளார். இவரது காலத்தில்தான் ஸ்ரீதர ஐயாவளும், சதாசிவ பிரம்மமும், இருந்திருக்கிறார்கள்.


நகரேக்ஷு காஞ்சி என்று புகழப்படும் காஞ்சி மாநகரிலே கேசவ பாண்டுரங்க யோகி என்பவருக்கும், அன்னாரது தர்ம பத்னி ஸுகுணாவுக்கும் புத்ரனாக அவதரித்தார். குழந்தையின் ஜாதகங்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கருத்தில் கொண்டு 'புருஷோத்தமன்' என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டார். இவரது தந்தை சங்கர மடத்தில் ஸ்ரீ கைங்கர்யம் செய்து வந்ததால், குழந்தை புருஷோத்தமனுக்கு ஆச்சார்ய பக்தி அதிகம். அதுகண்ட ஆச்சார்யார் வித்வாதிகேந்திரர் குழந்தையை மடத்துக்கு தர வேண்ட, பெற்றோரும் குருபக்தியால் வாக்கு மீறாது குழந்தையை மடத்துக்கு அளித்தனர். ஐந்து வயதில் அக்ஷராப்யாசம், 7 வயதில் உபநயனம் என்று தொடர்ந்து 16 வயதுக்குள் வேத-வேதாந்த வித்தைகளில் பூர்ண சந்திரனாக விகசித்தார். எல்லா சாஸ்திரத்துக்கும் சாரம் நாராயண த்யானமே என்று உணர்ந்து தினமும் லக்ஷத்தது எட்டு ராமஜபம் செய்ய ஆரம்பிக்கிறார். இவ்வாறாக பக்தி வைராக்யங்களால் பக்குவமடைந்தவராக, மாயா சுகங்களில் மயங்காது, பரம பாகவத தர்மத்தில் இச்சையுடையவராக வளர்ந்தார். இதே சமயத்தில் ஆத்ம போதேந்திரர் என்றழைக்கப்பட்ட வித்யாதிகேந்திரரும் ஆச்சார தர்மங்களை சரிவர அனுசரிக்க இயலாத ஜனங்களையும் நல்வழிப்படுத்த நாம கீர்த்தன ரூபமான பாகவத தர்மத்தை பிரசாரம் செய்தார். இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக தனது காசி யாத்திரையினை அமைத்துக் கொண்டார். தன்னுடன் வர சித்தமாக இருந்த புருஷோத்தமனை சில காலம் கழித்து வரச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். வடதேசத்தில் நாம்சங்கீர்த்தனத்திற்கு இருக்கும் மரியாதையையும், அதனால் அப்பிரதேசத்து மக்களது ஆன்மீக சிந்தனை, அருள் எல்லாம் உணர்ந்த ஆத்ம போதேந்திரருக்கு தக்ஷிண தேசத்தில் இவ்வாறான நாம சங்கீர்த்தனம் புழக்கத்தில் இல்லையே என்ற குறை வந்தது. இந்த குறையைப் போக்க, தமக்கு பின் பீடாதிபதியாக பட்டத்துக்கு வரும் புருஷோத்தமனாலேயே முடியும் என்ற முடிவுக்கு வந்து புருஷோத்தமனை காசிக்கு வரச் செய்கிறார். காசி வந்து குருவை வணங்கிய புருஷோத்தமனுக்கு பிரம்மச்சார்யத்திலிருந்து சன்யாச ஆஸ்ரமத்தை காசியிலேயே அருளுகிறார்.


சன்யாச ஆஸ்ரம நாமமாக 'பகவன் நாம போதேந்திரர் என்ற பெயரை அளித்து ஸ்ரீ மடத்தின் 59ஆம் ஆச்சார்யராக பொறுப்பினை அளித்து தென்னகத்தில் நாமசங்கீர்த்தனைத்தை பரப்பக் கட்டளையிடுகிறார். அத்துடன் இல்லாது நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை உணர்த்த சில காலம் நரசிம்மாச்ரமி அவர்களிடம் இருக்கும் பலவித கிரந்தங்களையும் படிக்கச் செய்தார். தகுந்த காலத்தில் காஞ்சீபுரம் செல்ல உத்தரவளித்த ஆத்ம போதேந்திரர், போகும் வழியில் ஜகன்னாத க்ஷேத்திரம் சென்று பகவன் நாம கெளமுகி என்ற சிற்ந்த பக்தி சங்கீர்த்தன கிரந்தத்தை அறிந்து கொள்ள உத்தரவிடுகிறார். [ஒரிசாவில் வாழ்ந்த லக்ஷ்மிதரர் என்ற கவி எழுதியது இந்த பகவன் நாம கெளமுகி. இதில் பகவன்நாமத்தின் வைபவத்தையும், செளலப்பித்தையும் ச்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச-புராண வாக்கியங்களைக் கொண்டு சொல்கிறார்.] கெளமுகியினையும் கற்றுணர்ந்த ஆச்சார்யார் காஞ்சீபுரம் வந்து ஸ்ரீதர அய்யாவாள் என்று அறியப்படும் ஸ்ரீதர வெங்கடேசரது சிறப்புக்களை அறிந்து அவரது கிரந்தங்களையும் தனது நாம சித்தாந்தங்களுக்கு ப்ரமாணமாகக் கொண்டார். போதேந்திரர் பிரமாணமாக கொண்ட மற்ற கிரந்தகளாவன, புருஷார்த்த ஸுதாநிதி, சங்கரரின் சஹஸ்ரநாம பாஷ்யம், வித்யாரண்யரின் சங்கரவிலாஸம், த்யான தீபிகை, பகவத்கீதா கூடார்த்ததீபிகை, நாமதரங்கம், பக்தி முக்தாபலம் போன்றவை. இத்துணை நூல்களையும் பிரமாணமாக கொண்டு ஸ்வாமிகள் எட்டு நாமசித்தாந்த கிரந்தங்களை வெளியிட்டார். அவற்றில் மிக பிரதான்யமானது நாமாம்ருத ரஸோதயம். இவை தவிர பல அத்வைத சித்தாந்த க்ரந்தங்களும் செய்திருக்கிறார்.


இடையில் குரு ஆத்ம போதேந்திரர் திருப்பாப்புலியூரில் பரிபூர்ண மஹாஸமாதி அடைய, அவருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்தபின் காஞ்சிபுரம் திரும்பி அத்வைத பிரசாரமும், நாமசங்கீர்த்தன பிரசாரமும் செய்துவந்தார். பீடாதிபதியான பின்பும், மடத்து சம்பிரதாயங்களுக்கிடையிலும் பிரதி தினம் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்வதும், பாகவத உபன்யாசமும் செய்து, ஞானத்தில் சனகாதியர் போலும், பக்தியில் நாரதர் போலும், வைராக்கியத்தில் சுகர் போலும் இருந்து வந்தார். ஜாதி, மத பேதமின்றி கருணையுடன் பகவன் நாம கீர்த்தனம் பற்றி விளக்கி ஹரிநாம சங்கீர்த்தனத்தை பரப்பினார். இவர் இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாமஜபத்தில் மூழ்கியிருக்கின்றனர். எந்த ஆச்ரமத்தில், எந்த ஜாதியில் இருப்பவர்களானாலும் நாமசங்கீர்த்தனம் செய்யாவிடில் அந்த ஜென்மம் வியர்த்தம் என்று குறிப்பிட்டு நாமஜப மகிமையினை உபதேசிப்பார். பீடாதிபதி என்ற கவுரவம் ஏதுமின்றி பாமரர்களுக்காக உருகி அவர்களும் கடைத்தேற நாமசங்கீர்த்தனத்தை பரப்பியிருக்கிறார்.


தடைபட்ட ராமேஸ்வர யாத்திரையினை முடித்து மத்யார்ஜுனம் வந்த போது அங்குள்ள மக்கள் ஓயாது நாமஜபம் செய்வது கண்டு அதிசயித்து விசாரித்ததில் ஸ்ரீதர அய்யாவாளால்தான் அந்த ஊரில் நாமஜபம் பரவியிருப்பதை அறிந்து அவரை சந்திக்கிறார். அய்யாவாள் ஸ்வாமிகளை


பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ஸர்வஸ்ய விக்ரஹம்

ஸ்ரீமத் போதேந்திர யோகீந்திர தேசிகேந்திரம் உபாஸ்மஹே


[பகவன்நாம சங்கீர்த்தனம் என்னும் ஐச்வர்யத்திற்கு ஏக சக்ராதிபதியான போதேந்திர யோகீந்திரர் என்னும் தேசிகேந்திரரான குருமூர்த்தியை உபாசிக்கிறேன்]


என்று கூறி வணங்க அச்சமயத்தில் ஸ்வாமிகள் தனது ஆச்ரம தர்மத்தையும் மீறி அவரை தூக்கி ஆலிங்கனம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் பல விஷயங்களையும் சம்பாஷித்து மகிழ்ந்துள்ளனர். பின்னர் பலகாலம் காஞ்சீபுரத்தில் வாழ்ந்து சிஷ்யர்களுக்கு பாகவத தர்மத்தையும் நாமசங்கீர்த்தனத்தையும் உபதேசித்து வந்தார். தனது பிடாதிபத்தின் காரணமாக முழு மூச்சாக நாமசங்கீர்த்தன பிரசாரம் செய்ய முடியவில்லை என்று தனக்கு அடுத்த 60ஆவது பீடாதிபதியாக "அத்வைதப்பிரகாசர்" என்பவரை நியமித்து ஸ்ரீமடத்து நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு, தண்ட-கமண்டலத்துடன் தனியாக யாத்திரை கிளம்பி ஆங்காங்கே பிரசாரம் செய்து கொண்டு செல்லும் இடத்தில் கிடைத்ததை பிக்ஷை பண்ணிக் கொண்டு மீண்டும் திருவிடைமருதூர் வந்து ஸ்ரீதர அய்யாவாளுடன் சேர்ந்து இருவருமாக பல ஊர்களுக்கும் சென்று பகவன்நாம கீர்த்தன பிரசாரம் கிளம்பினர். சென்ற இடங்களில் எல்லாம் பலவகையான மக்களுக்கும் நாம உபதேசம் செய்வித்தனர்.


இவ்வாறாக காலம் உருண்டோட, ஸ்ரீதர அய்யாவாளும் ஒருநாள் மஹாலிங்கத்தின் சன்னிதியில் வெகுநேரம் சிவநாம சங்கீர்த்தனம் செய்து பின்னர் மனமுருகி ஈசனிடம் பிரார்த்தனை செய்து ப்ரேமபக்தியின் உன்மத்ததில் மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய ஓடி கர்பகிரஹத்துள் நுழைகிறார். ஜோதிர் வடிவமாக தெரிந்த மஹாலிங்கத்தில் மறைந்தும் போகிறார். இதை அறிந்த போதேந்திரர் பல மணிநேரம் சமாதி நிலை யில் ஆழ்ந்து பின்னர் சகஜ நிலை அடைந்து அன்று முதல் யாரிடமும் பேசுவதை நிறுத்தி கோவிந்தபுரத்தில் காவிரிக் கரையிலேயே இருக்கத் தொடங்குகிறார்கள். அவர் ஒருநாள் அங்கு விளையாடும் சிறுவர்களிடம் ஒரு குழியினைக் காண்பித்து தான் அதில் இறங்குவதாகவும் அதன் பின்னர் மணலைத்தள்ளி மூடிவிட்டு மறுநாள் வந்து பார்க்கச் சொல்கிறார். விஷயமறியாத சிறுவர்கள் அவ்வாறே செய்து, மறுநாள் விஷயம் அறிந்த பெரியவர்கள் அவ்விடத்தை தோண்ட முற்படுகையில் அசிரீரியாக தான் அங்கேயே சமாதியாகி நாமசங்கீர்த்தனம் செய்ய முடிவெடுத்துவிட்டதாக சொல்லி, அங்கே பிருந்தாவனம் அமைத்துவிட சொல்கிறார் ஸ்வாமிகள். அத்துடன் இல்லாது யார் பிரதி தினமும் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்தாலும் தான் தரிசனம் தருவதாக வாக்கும் தருகிறார். இச்சம்பவம் கி.பி 1692ல் ப்ரஜோத்பத்தி வருஷம் ப்ரோஷ்டபத மாதம் பெளர்ணமியன்று நடந்தது. இன்றும் கோவிந்தாபுரத்தில் அவரது ஜீவ சமாதியில் பாகவதர்கள் ஆராதனை மிகவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.


இன்று நாம் எல்லோரும் அறிந்த ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், மற்றும் அவரது குரு ஞானாநந்தர், புதுக்கோட்டை கோபால கிருஷ்ண பாகவதர், சஞ்சீவி பாகவதர், முத்தையா பாகவதர், முரளிதர ஸ்வாமிகள், கடையநல்லூர் ராஜகோபால், மற்றும் பலர் தமது பஜனைகளில் பரம குருவாக கொண்டு பாடல்கள் பாடி பஜனையினை போதேந்திராளின் கீர்த்தனைகளையே. இன்றைய சம்பிரதாய பஜனைக்கு வித்திட்ட அந்த மஹானது குருவந்தனம் (தோடே மங்களம்) பாடாத பஜனைகள் இல்லை. அது பாடப்படும் இடங்களிலெல்லாம் அவரது சாந்நித்தியத்தை நாம் உணரவும் முடிகிறது. இவ்வாறாக நாமசங்கீர்த்தனத்தை நமக்கு அளித்த குரு போதேந்திரரை மனதால் வணங்கி அவரது சொற்படி நாமும் நாம சங்கீர்த்தனம் செய்து இறையருளில் மூழ்குவோமாக.


யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே

தந்நமாமி யதிச்ரேஷ்ட்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும்



[எவருடைய ஸ்மரணத்தால் நாமபக்தி உண்டாகிறதோ அந்த யதிஸ்ரேஷ்டரும், ஜகத்குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை சரணமடைகிறேன்]




மேலே இருப்பது புதுக்கோட்டை ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர், இப்போது தமிழகத்தில் கொஞ்சமேனும் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது என்றால் அது இவராலேயே என்று அறுதியிட்டு கூறலாம். இவர் செய்த உஞ்சவர்த்தி, டோலோற்ச்சவம், தீப பிரதக்ஷணம், அகண்ட நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம் போன்றவை எண்ணிலடங்கா. அன்னாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த பதிவு சமர்பணம். அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக்கவும்


Wednesday, July 23, 2008

நல்ல குருவும் நல்ல சிஷ்யனும் (2)

நல்ல குருவைப்பற்றித் ஓரளவு தெரிந்து கொண்டாகிவிட்டது இனி நல்ல சிஷ்யனை கவனிக்கலாம். எப்படிப்பட்ட சிஷ்யனை குரு நல்ல சிஷ்யன் என்றுகூறுவார்.குரு முக்கியமாக இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை

பொறுமையைக்கடை கடைபிடித்தல்

கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்


உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை இரண்டையும் சேர்த்தே பார்க்கலாம்.

ஒரு மாணவன் ஒரு குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அவருடைய குருகுலத்துக்குச் சென்று அவரைப் பணிந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். குரு மற்ற மாணக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே நாளை வா பார்க்கலாம் என்றார்.சிஷ்யன் போய்விட்டு மறுபடியும் மறு நாளைக்கு வந்து கேட்டான் . இந்தநாளும் குரு நாளைக்கு வா பார்க்கலாம் என்றார்.இது மாதிரி சிஷ்யன் 21 நாட்கள் வந்து வந்து விடாமுயற்சியோடு குருவை வணங்கி கேட்டுக்கொண்டிருந்தான்.குருவும் நாளைக்கு வா என்று கூறிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டுவந்தார்.

கடைசியாக குரு, சிஷ்யனின் பொறுமைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்து அவனை சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்ள தீர்மானித்து அவனுடைய உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் சோதிக்க விரும்பினார்.சரி மாணவனே நாளையிலிருந்து நீ வகுப்புக்கு வா. ஆனால் வரும்போது காலை பூஜைக்கு அக்னி வளர்க்கவேண்டும் ஆகையால் நீ வரும்போது உன் இருகைகளிலும் அக்னி தனலைக் கொண்டு வந்து என் முன்னால் இருக்கும் ஹோமகுண்டத்தில் போடவேண்டும் என்றார். மாணவனும் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றான்.


மறுநாள் காலை சிஷ்யனை எதிர்பார்த்து குரு அக்னி குண்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தார்.மற்ற மாணாக்கர்களும் என்ன குரு இப்படி ஒரு செயலைச் செய்யச் சொல்லியிருக்கிறர் நம் குரு, அதை எப்படி இந்த புது சிஷ்யன் செய்யப் போகிறான் என்று பயத்துடன் இருந்தனர். அப்போது சரியான நேரத்தில் சிஷ்யன் இரு கைகளிலும் அனல் பறக்கும் நெருப்புத்துண்டங்களைக் கொண்டுவந்து குருவின் முன்னால் இருக்கும் குண்டத்தில் சமர்ப்பித்து குருவை வணங்கி நின்றான்.குரு அதைப்பார்த்ததும் சிஷ்யனை அழைத்து அன்புடன் தழுவிக்கொண்டு நீதான் உத்தம சிஷ்யன் என்றார்.21 நாட்கள் உன்னை அலைக்கழித்தும் பொறுமையைக் கடைபிடித்து எப்படியாவது கற்க வேண்டும் என்ற ஆசையினால் வந்து கொண்டிருந்தாய்.அதே மாதிரி உனக்கு உன்னுடைய உணர்ச்சிகளை சோதனை செய்யவைத்த சோதனையிலும் வெற்றி பெற்று விட்டாய்.எல்லோரும் நினத்துக்கொண்டிருந்தார்கள் நீ உன் இருகைகளிலும் நெருப்பை அப்படியே கொண்டுவந்து கொட்டி கைகளைச் சுட்டுக் கொள்ளப் போகிறாய் என்று.ஆனால் நீயோ உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருகைகளிலும் மணலை நிரப்பச்செய்து அதில் நெருப்புத்துண்டங்களை வைத்து கைகளை சுட்டுக்கொள்ளாமல் புத்திசாலிதனத்துடன் செய்து முடித்தாய்.இன்றுமுதல் உனக்கு பாடம் ஆரம்பிக்கிறேன் என்று கூறி அவனை சிஷ்யனாகச் சேர்த்துகொண்டார்

இதே மாதிரிதான் கர்ணனும் பரசுராமரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளச் சென்றபோது அவரும் அவனை அலைக்கழித்து அவனது பொறுமையைச் சோதனை செய்துதான் சிஷ்யனாகச் சேர்த்துக்கொண்டார்.பின்பு அவர் கர்ணன் மடியில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தபோது தேவர்களின் சூழ்ச்சியால் வண்டு வந்து கர்ணனின் தொடையை துளையிட்டு ரத்தபெருக்கையும், கடுமையான வலியையும் ஏற்படுத்திய போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவண்ணம் இருந்தான்.ஆகவே அவனும் இரண்டு சோதனைகளில் வெற்றிபெற்றாலும் உண்மைகூறவில்லை என்ற தவறைச் செய்து அதன் பலனை அனுபவித்தான்.



இனி மூன்றாவது குணமான லட்சியத்தை மட்டும் அடைவது என்பதைப் பார்ப்போம். இந்த குணத்துக்கு நல்ல உதாரணமாக இருப்பது துரோணரும் அர்சுணனும்தான். வில்வித்தை கற்றுக்கொடுக்கும்போது ஒரு பெரிய மரத்திலுள்ள பலகிளைகளில் ஒருகிளையைக்காட்டி அதில் ஒரு இலையை மட்டும் காட்டி அம்பு எய்யச்சொன்னபோது பலபேர்கள் ஆச்சார்யன் சொன்ன இலையைத்தவிர பலவிஷயங்களை பார்த்துச் சொன்னபோது அர்ச்சுணன் ஒருவன் மட்டுமே தன் கண்களில் தெரிவது மரம் இல்லை, கிளைகளும் இல்லை. மற்ற இலைகளும் இல்லை ஆசார்யர் ஆன துரோணர் சொன்ன இலை மட்டும்தான் என்று சொல்லி லட்சியத்தை அடைவது மட்டும்தான் சிஷ்யனின் குறியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவன்.


நல்ல குருவைப் பற்றியும் நல்ல சிஷ்யனைப் பற்றியும் தெரிந்த நாம் இனி எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்






Wednesday, July 16, 2008

நல்ல குருவும் நல்ல சீடனும்

யார் நல்ல குரு? இந்தக்கேள்விக்கு விடை அளிப்பது மிகவும் கடினம். ஒரு மாதிரியாக இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.கொஞ்சம் ஆன்மீகத்தில் இருந்து விலகிச் சென்று பார்ப்போமா?


ஒரு ஊரில் மிகச் சிறந்த ஒருவரைக் கண்டு பிடித்து அவருக்குச் சன்மானமும் வழங்க ஏற்பாடு செய்தனர்.ஒரு குழு அமைத்து அவர்கள் மூன்று பேரைத் தேர்வு செய்தனர். பிறகு நகரத்தந்தையைக் கூப்பிட்டு அவரை மூன்று பேரில் ஒருவரையோ அல்லது வேறு ஒரு தகுதியான நபருக்கு பரிசு வழங்க அனுமதியும் அளித்தனர். நகரத்தந்தையும் முதலில் மேடைக்கு வந்த நபரிடம் கேட்டார்.""ஐயா நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?

அந்த மனிதர் சொன்னார். நான் அரசாங்கத்தில் தலைமைப் பொறியாளராக வேலப் பார்த்தேன்.ஒருபைசாகூட லஞ்சம் வாங்காமல், சிறந்த கட்டுமானப் பொருள்களின் கொணர்ந்து பல கல்லூரிகள்,சாலைகள்,பொதுப்பணிக் கட்டிடங்கள்,கட்டினேன் அவைகள் இன்றளவும் நிலையாக நிற்கின்றது என்றார்.நகரத்தந்தையும் ""சரி நல்லது செய்தீர்கள் ஐயா"" என்று வாழத்திவிட்டு இரண்டாவது மனிதரிடம் சென்றார்.

இரண்டாவது மனிதரிடமும் அதே கேள்வி. இரண்டாவது மனிதர் சொன்னார்""ஐயா நான் முதன்மை மருத்துவராக அரசாங்க பொது மருத்தவமனையில் பணியாற்றினேன்.நான் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையும் நல்ல மருந்துகளும் இலவசமாக கிடைக்கும்படி செய்தேன்.நகரத்தில் நோய்வாய்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து நோயில்லா ந்கரமாக்கினேன்"" என்றார். நல்லது செய்தீர்கள் ஐயா என்று கூறிவிட்டு மூன்றாவது மனிதரிடம் சென்றார் தலைவர்.

மூன்றாவது மனிதரும் தலைவரின் கேள்விக்கு ""ஐயா நான் இந்த ஊரில் மிகச் சிறந்த வழக்குரைங்கராக பணியாற்றினேன். நான் பணியாற்றிய பொழுது ஒரு பொய் வழக்கைக்கூட எடுத்துக்கொண்டதில்லை.எழைஎளியமக்களுக்காக வாதாடி அவர்களுக்கு நீதிகிடைகச் செய்தேன்.நீதிபதியாக பதவிஉயர்வு பெற்றதும் பாரபட்சமின்றி நீதியின்படி தீர்ப்பு வழங்கினேன்"" என்றார். தலைவரும் சிறந்த பணியாற்றினீர்கள்"" என்று கூறிவிட்டு யாருக்கு பரிசு அளிப்பது மனதில் முடிவெடுத்து அறிவிப்பை சொல்லுவதற்காக மேடையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்

அப்பொழுது கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது'.. என்னவென்று பார்த்தால் ஒரு எண்பது வயது மிகுந்த முதியவர் கூட்டதின் முன்வரிசையில் வந்து அமர்ந்தார். அவரைக்கண்டதும் மக்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். மேடையில் இருந்த சிறப்பு செயல்களைச் செய்தமூவரும் அவருக்கு அருகே சென்று அவருக்கு வணக்கம் செலுத்தி அவரை இருக்கையில் அமரச்செய்தனர். அவர்களைப்பார்த்து தலைவர் கேட்டார் யார் அந்த பெரியவர் என்று, அவர்கள் மூவரும் கூறினார்கள் ""ஐயா இவர்தான் எங்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியர். அவர்தான் எங்களுக்கு சிறுவயதிலேயே ஒழுக்கத்தையும்,நன்நடத்தையையும்,வாழ்க்கையில் எப்படி சமூகத்திற்கும் ஏழை எளியவற்கும் உதவிபுரியவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த ஆசான் என்றனர். நாங்கள் மூவரும் எங்கள் குரு சொன்னபடித்தான் நடந்தோம் வேறு எதுவும் நாங்களாகச் செய்யவில்லை என்றார்கள்.

தலைவர் உடனே அந்தப்பெரியவரை மேடைக்கு அழைத்து வரச்சொன்னார். அவர் வந்ததும் கூடத்தினரைப் பார்த்து சிறந்த மனிதருக்கான பரிசை இந்த ஆசானுக்குத்தான் அளிக்கப் போகிறேன்.ஏன் என்றால் இவ்வளவு சிறந்த சேவையை மக்களுக்கு அளித்த மூன்று ரத்தினங்களை அளித்த இந்த குருவைக்காட்டிலும் வேறு யார் சிறந்த மனிதராக இருக்கமுடியும்.

இதைகேட்ட அந்த மூன்றுபேர்களும் கண்களில் கண்ணீர்மல்க ஐயா நாங்களும் இதற்கு உடன்படுகிறோம் என்றார்கள். எங்களுக்கு பரிசு கிடைத்திருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியைவிட இப்போது எங்கள் குருவுக்கு கிடைக்கும்போது இரட்டிப்பாக இருக்கிறது என்றார்கள்.

மறுபடியும் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். யார் நல்ல குருவாக இருக்கமுடியும்? நல்ல செயல்களை செய்கின்ற மாணாகர்களை உருவாக்கும் மனிதரே நல்ல குருவாக இருக்கமுடியும் சரி நல்ல சிஷ்யனை எப்படி குரு தேர்ந்தெடுப்பார் என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன்

பகவான் ரமணரின் உபதேசங்களிலிருந்து படித்த கருத்தை கதை வடிவில் உருவாக்கினேன்.



Tuesday, July 15, 2008

சிருங்க கிரியா? கிரியா? இல்லை தோடகரா?

துங்காநதிக்கரை, இடம் சிருங்கேரி. சங்கரர் தன் சீடர்களுடன் அங்கே தங்கி , இதுதான் சாரதையைப் பிரதிஷ்டை செய்யச் சரியான இடம் எனத் தேர்வு செய்து தங்கி இருந்த நேரம் அது! சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா? காத்திருந்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். "கிரி, பூப்பறித்து வா!" "இதோ குருவே" என்று ஓடுவான். "கிரி, துணிகளை என்ன செய்தாய்?" "துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே!" என்று சொல்வான். இத்தகைய தொண்டுகள் செய்து வந்த அவன் தன் வேலையிலே மட்டுமே கவனமாக இருப்பான்.

இங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ?? அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ? என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள்! யாருக்கு?? கிரிக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு? இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா??

பாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா?? மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே? என்ன செய்வது? (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், "குருவே, இன்று பாடம் இல்லையோ?" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. "கிரி எங்கே? அவனும் வரட்டும்!" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். "என்ன கிரியா? " சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா? சிருங்ககிரியா? பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது "என்ன அது? இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே? உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ?" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.

அட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே?? என்ன இது? கிரியின் குரலில் சங்கீதம்? அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு? ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.
"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே
ஹிருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்"


என்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.

"என்ன சிருங்க கிரியா? வெறும் கிரியா?" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் "தோடகாஷ்டகம்" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.

டிஸ்கி:"தோடகாஷ்டகம்" எங்கேயோ வைத்துவிட்டேன். தேடியும் கிடைக்கலை. அஷ்டகம் கிடைச்சதும் எழுத நினைச்சு, இப்போ குரு பூர்ணிமா வந்துட்டதாலேயும், ஏற்கெனவே நிறையப் பேர் துண்டு போட்டு வச்சுட்டதாலேயும் 2 நாள் முன்னதாக வழக்கம்போல் குரு பூர்ணிமா சிறப்புப் பதிவு போட்டாச்சு.



-

Thursday, July 10, 2008

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா????


பிரம்மத்தைப் பற்றியும், பூரண சரணாகதியைப் பற்றியும் படிச்சதும், இது நினைவுக்கு வந்தது. இறைவன் இருக்குமிடம் தேடி அலையவேண்டாம், நம்முள்ளேயே உறைகின்றான் என்றாலும், அதை உணர்ந்தவர் வெகு சிலர். அப்படி உணர்ந்தவர்களும் திரும்பத் திரும்ப இறைவன் புகழைப் பாட பூமியிலேயே பிறக்க ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் இந்தப் பூமியிலேயே சிரஞ்சீவியாக நிலைக்கவும் நிலைத்தனர், அப்படி நிலைத்தவர்களில் ஆஞ்சநேயரும் ஒருத்தர். ராமர் வைகுண்டம் செல்லத் தயார் ஆனபோது அனைவரும் அவருடன் கிளம்பத் தயார் ஆனார்கள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு அனுமன் மட்டும் தனித்திருக்க, ராமர் அனுமனைக் கூப்பிட்டு, "அப்பா, நீ ஏன் இன்னும் கிளம்பவில்லை? நீ வைகுண்டம் வரவில்லையா?" என்று கேட்டாராம். அனுமனோ, "ராமா, வைகுண்டத்தில் நீ யார்? மகாவிஷ்ணு! உனக்கு அங்கே சேவை சாதிக்க அநேகக் கோடி அடியார்கள் இருக்கின்றார்கள். ஏற்கெனவே உன் வாகனம் ஆக கருடனும், உன் படுக்கையாக ஆதிசேஷனும் இடம் பெற்றிருக்கின்றார்கள். உன்னருகில் அமர உரிமை பெற்ற இரு பெண்களும் இருக்கின்றார்கள். மற்ற அடியார்களோடு அடியாராக நான் அங்கே இருந்து என்ன செய்யப் போகின்றேன்? இந்த உன் ராம அவதாரத்தைக் கண்ட என் கண்கள், ராம காதையைச் சொன்ன என் நாவு, ராம காதையைக் கேட்ட என் செவிகள், உன் சர்வாலிங்கனத்தை உணர்ந்த என் உடல், உணர்வு, உன் அன்பில் திளைத்த என் புலன்கள், இனி இன்னொருவரை நாடுமோ? நான் இங்கேயே இருக்கின்றேன். உன் ராம கதை இந்தப் பூவுலகில் பாடும்வரை, எங்கெல்லாம் பாடப் படுகின்றதோ, சொல்லப் படுகின்றதோ, எழுதப் படுகின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன். நீ எனக்கு அதற்கு மட்டும் அருள் புரிந்தால் போதும்." என்று சொல்ல ராமனும் அவ்வாறே அருள் பாலித்தானாம். ஆஞ்சநேயரும்,

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சனம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராட்ச சாந்தகம்"


என்று சொல்லும் வண்ணம் இன்றளவும் ராம காதையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுவதுண்டு.இதையே தான் தொண்டரடிப் பொடியாழ்வாரும்(??) தன்

"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"


என்று சொல்லி இருக்கின்றார். 13-ம் ஆழ்வார் வந்து இதைச் சொன்னது தொண்டரடிப் பொடிதானானு சொல்ல அழைக்கிறேன். இன்னொருத்தரும் சொல்லி இருக்கார்,. பெயர் நிச்சயம் செய்யாததால் போடவில்லை,

"ஊரிலேன் காணி இல்லை, உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி,
காரொளிர் வண்ணனே, கண்ணனே கதறுகின்றேன்,
ஆருளர் களை கண் அம்மா, அரங்கமாநகருளானே!"


இப்படி ஆழ்வார்களும், அடியார்களும் வேண்டாம் என்று சொல்லும் சொர்க்கத்தை வேண்டாம் என்று சொன்ன ரிஷி ஒருத்தரும் புராண காலத்திலே இருந்திருக்கின்றார்.அவர் தான் முத்கலர். நானுமே சொர்க்கம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்! முத்கலரும், அனுமனும், ஆழ்வார்களும் மறுத்த சொர்க்கத்தில் உண்மையில் என்ன இருக்கின்றது? அங்கே போனால் அனுபவித்துத் தீர்த்ததும், மீண்டும் பிறந்து கர்மாவைக் கழிக்க இறைவனைப் பாடி அவனருளாலே, அவன் தாள் பற்றி, சற்றேனும் அவனை மறவாமல் இருந்தால் அதை விடச் சிறந்தது வேறு என்ன உண்டு. "இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே!" என்று இருந்தால் அதுவே போதுமே! கீழே உள்ளவை குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" தொடருக்கு நரசிம்ம தாசரின் பக்தியைக் குறித்து வியந்த நான் அது பற்றி எழுதிய விமரிசனம். அந்தத் தொடர் மொத்தத்திலும் என்னைக் கவர்ந்ததும் இந்த ஒரு அத்தியாயமே!

பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது. இப்போ முத்கலர் பற்றிப் பார்ப்போமா???

முத்கலர் என்னும் முனிவர் மிகச் சிறந்த ஞானி, தவசீலர், கேட்பவருக்கு இல்லை என்னாது இயன்றவரை தரும் தயாள குணம் படைத்தவர். எனினும் அன்றாட உணவுக்குத் தேவையான தானியங்களை அவ்வப்போது சேமித்துக் கொண்டே உண்பவர்கள் அவரும், குடும்பத்தினரும். ஆகவே எப்போதுமே ஒரு பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களே கைவசம் இருக்கும். இது இவ்வாறிருக்க, ஒரு முறை இவரின் ஆசிரமத்துக்கு துர்வாசர் வருகை புரிந்தார். மகிழ்வோடு துர்வாசரை முத்கலர் வரவேற்றார். முத்கலர் மட்டுமின்றி, அவர் குடும்பத்தினரும் துர்வாசர் வரவால் மகிழ்ந்து அவரை வரவேற்றனர், உபசரித்தனர். துர்வாசருக்கு விருந்து அளிக்க விரும்பினார் முத்கலர். துர்வாசரிடம் உணவு அருந்திவிட்டுச் செல்லும்படி கூறினார் முத்கலர். அவர் குடும்பத்தினரும் அவ்வாறே அவரை உபசரித்தனர். துர்வாசருக்கு மிகுந்த நகைப்பாக இருந்தது. ஏளனத்துடன், "எனக்கு உணவளித்து உபசரிக்கும் வல்லமை உன்னிடம் உண்டோ?" என வினவினார் முத்கலரிடம். முத்கலர் தன்னிடம் இருப்பதை வைத்து விருந்து அளிப்பதாய் மிகுந்த வணக்கத்துடன் சொல்ல, துர்வாசரும் ஒப்புக் கொண்டார். முத்கலர் விருந்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றார். பத்து நாட்களுக்காகச் சேர்த்து வைத்த அனைத்து உணவுப் பொருட்களையும் போட்டு மிக அருமையான விருந்து தயாரிக்கப் பட்டது. துர்வாசர் நதியில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யப் புறப்பட்டுச் சென்றார். அனைத்தையும் முடித்துக் கொண்டு வந்த துர்வாசருக்கு, முத்கலரும், அவர் மனைவியும் விருந்து அளித்தனர். தங்கள் எளிமையான விருந்தை துர்வாசர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

விருந்து எளிமையாக இருந்தாலும், சுவையாகவே இருந்தது. வயிறு நிரம்பத் திருப்தியோடு சாப்பிட்டார் துர்வாசர். யாருக்கும், எதுவும் மிச்சம் வைக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அவசரம், அவசரமாய் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். முத்கலரோ, அவர் மனைவியோ சாப்பிட்டார்களா என்று பார்த்துக் காத்திருக்கவில்லை. சாப்பிட்ட பின்னர் முறையாகச் செய்ய வேண்டிய ஆசி வழங்கும் கடமையையும் செய்து முடிக்கவில்லை. துர்வாசர் சென்று விட்டார். ஆயிற்று. விருந்து முடிந்தது. ஆனால் பத்து நாட்களுக்கான தானியங்களைப் போட்டுச் செய்த விருந்து இது! துர்வாசர் அனைத்தையும் அவரே சாப்பிட்டு முடித்துவிட்டார். இனி என்ன செய்வது?? அரைப் பட்டினி, கால் பட்டினி தான். இனி வேண்டும் தானியங்களைச் சேகரித்தாலே, அடுத்து வரும் நாட்களுக்கான உணவு கிட்டும். அதுவரையிலும் கிடைத்த காய், கிழங்குகள் தான். இருக்கும் கொஞ்ச தானியத்தில் கஞ்சி தான். மீண்டும் தானியங்களைச் சேகரித்த பின்னரே முழுச்சாப்பாடு.

இதற்கெனக் கவலைப் படாமல் முத்கலர் மீண்டும் தானியங்களைச் சேகரித்தார். குடும்பத்தினரும் உதவினார்கள். அதுவரையில் கிடைத்தவற்றைச் சாப்பிட்டனர் அவர் குடும்பத்தினரும், அவரும். தானியங்கள் சேகரிக்கப் பட்டது. அதற்குள் துர்வாசர் முதல் முறை வந்து போய்ப் பத்து நாட்களும் ஆகி இருந்தது. சரியாகப் பதினோராவது நாள். இருக்கும் தானியங்களை வைத்து உணவு தயார் ஆனது. குடும்பத்தினர் சாப்பிட அமர்ந்தனர். அந்தச் சமயம் பார்த்து வந்தார் துர்வாசர். தான் மிகுந்த பசியோடு வந்திருப்பதாயும், உணவு கிட்டுமா எனவும் கேட்டார். கடுகடுத்த முகத்துடனேயே இருந்த அவரைப் பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீட்டில் உள்ளவர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை எனினும் துர்வாசரை அமர வைத்து உணவைப் பரிமாறினார்கள். துர்வாசர் இம்முறையும் உணவு அனைத்தையும் அவரே உண்டார். கடு கடுத்த முகத்துடன் உணவை உண்ட அவர் இம்முறையும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

முத்கலர் குடும்பத்தினரின் அரைப்பட்டினி நிலை தொடர்ந்தது. எனினும் குடும்பத்தினர் யாரும் இதற்காகக் கவலைப்படவில்லை. வருந்தவும் இல்லை. தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தினசரி வேலைகளைச் செய்வதும், எஞ்சியுள்ள நேரத்தில் வயல்வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வருவதும் வழக்கம் ஆனது. மீண்டும் அதே போல் பத்து நாட்கள் கடந்தது. பதினோராம் நாள் மீண்டும் அழையா விருந்தாளி துர்வாசர், அதே போல் கடுகடுத்த முகத்துடன், மிகுந்த பசியோடு, உணவு அளிக்கும்படியான அதிகாரத் தொனியோடு. மீண்டும் உணவளித்தனர் குடும்பத்தினர். இப்படியே தொடர்ந்தது, இரண்டு மாதங்களுக்கு மேல். துர்வாசர் வரும்போது இருக்கும் தானியங்களை வைத்து உணவு படைப்பதும், வீட்டில் உள்ளவர்கள் அரைப்பட்டினி இருப்பதும், மீண்டும் தானியங்கள் சேர்ப்பதும், துர்வாசர் வருவதும், தொடர்கதையானது. இப்போது இது ஏழாம் முறை!

வரும்போதே இம்முறை துர்வாசர் முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது. மிகுந்த சுமுகத்தோடு காட்சி அளித்தார். முத்கலரிடம் சொன்னார்:" முத்கலரே! உம்முடைய பணிவும், வினயமும், திட சிந்தையும், விருந்தோம்பும் குணமும் என்னை வியக்க வைத்தது. அதைப் பரிட்சை செய்து பார்க்கவே இம்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டி வந்தது. ஒன்றையும் மிச்சம் வைக்காமல் உங்கள் அனைவரையும் பட்டினி போட்டுவிட்டு நான் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு விட்டுப் போனாலும், நீர் ஒவ்வொரு முறையும் இன்முகத்தோடு விருந்தளித்து எம்மை மகிழ்வித்தீர். உம் பண்பு என்னை மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களையும் வியக்க வைத்தது. தேவலோகத்திலிருந்து, இதோ உமக்காகப் பொன்மயமான ரதம் வந்துள்ளது. போதும் இப்பூவுலக் வாழ்க்கை! உம் துன்பங்கள் அனைத்தும் இன்றோடு அழிந்து விடப் போகின்றது. கிளம்பும், தேவதூதர்களோடு, சொர்க்கத்துக்கு!" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றார். முத்கலரோ???

மிக மிக மெதுவாக, "மகரிஷி, இம்மண்ணுலகுக்கும், அவ்விண்ணுலகுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எடுத்துரைக்க இயலுமா தங்களால்? என்று கேட்கின்றார். துர்வாசர் சொல்கின்றார்: "பூலோகம் கர்மபூமி. வினைப்பயன்களை அனுபவித்தே தீரவேண்டும். சொர்க்கமோ எனில் போக பூமி. கற்பனைக்கும் எட்டாத சுகங்களை அங்கே அனுபவிக்கலாம். எப்போதும் அங்கே மகிழ்ச்சிதான். துன்பம் என்பதே இல்லை. பூமியில் பிறந்து புண்ணியங்களைச் சேகரித்துக் கொண்டால் ஒழிய சொர்க்கம் இத்தனை எளிதில் கிட்டாது. நீர் இந்தப் பூமியில் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவாலேயே சொர்க்கம் உமக்குக் கிட்டியுள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை. அதிலும் உம்போன்ற தவசீலர்களின் செயல்களால் சொர்க்கம் அன்றி வேறு ஏது கிட்டும்? உமக்குத் தகுந்தது சொர்க்கம் ஒன்றே!" என்று சொல்கின்றார்.

முத்கலரோ,"ஸ்வாமி, அங்கே எப்போதும் மகிழ்ச்சி என்றால் குறை ஒன்றும் இல்லையோ? சொர்க்கத்திலும் குறை இருக்குமே ஸ்வாமி?" என வினவ, துர்வாசர், "முத்கலரே, ஒரே ஒரு குறைதான் சொர்க்கத்திலே, புண்ணிய பலன்களை அங்கே வேண்டிய மட்டும் அனுபவிக்கலாமே ஒழிய, புண்ணியங்களை மேன்மேலும் பெருக்கிக் கொண்டு போக அங்கே இடம் இல்லை. புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமானால், மீண்டும் பூமியில் பிறந்து, தானம், தர்மம், போன்ற நற்செயல்களைச் செய்து, புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளலாமே தவிர, சொர்க்கத்தில் புண்ணியம் பெருக வாய்ப்பே இல்லை" என்று சொல்ல, முத்கலரோ, "ஸ்வாமி, அறச்செயல்கள் செய்ய வாய்ப்பில்லை எனில் அது எவ்வாறு சொர்க்கம் ஆகும்? அப்படி வாய்ப்பில்லாத ஓர் இடம் எனக்குத் தேவை இல்லை. இந்தக் கர்ம பூமியிலேயே மீண்டும், மீண்டும் பிறந்து, கர்மங்களோடு சேர்ந்து அறங்களையும் முறைப்படி செய்து, கர்மங்களுக்கான பலன்களையும் அனுபவித்து, அறச்செயல்களைச் செய்தும், பிறருக்குத் தொண்டுகள் பல செய்தும், வாழவே ஆசைப்படுகின்றேன். இதிலே கிடைக்கும் மன நிறைவும், மன மகிழ்ச்சியும், உங்கள் சொர்க்கத்திலே கிட்டாது எனில் அந்த சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை, துர்வாசரே, என்ன மிக மிக மன்னிக்க வேண்டுகின்றேன்." என்று சொல்கின்றார் முத்கலர்.

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல் வருமா???????????????

Wednesday, July 2, 2008

அப்பைய்ய தீட்சிதரும், கருப்பண்ண சாமியும்!

* சிறு வயதிலேயே, ஆதிசங்கரரைப் போல், சகல சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, அபர சங்கராச்சாரியார் என்று பெயர் பெற்றவர் யார்?
* ஆதிசங்கரருக்குப் பின் அத்வைத நெறியைத் தூக்கி நிறுத்திய மகான் யார்?
* கோட்பாடுகள் பேதமின்றி, துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் விளக்கம் எழுதிய அறிஞர் யார்?
* சிவபிரான் மேல் ஆறாக் காதல் கொண்டாலும், வேதத்தில் சொல்லப்படும் பரத்துவம் நாராயணன் என்று சொன்ன மகாகுரு யார்?

அத்தனைக்கும் ஒரே பதில்! = அப்பைய்ய தீட்சிதர்!
தீட்சிதேந்திரன் என்று போற்றப்படுவது இவர் ஒருவரே!



எங்க வடார்க்காடு மாவட்டம், ஆரணி அருகே உள்ள அடையப்பாளையம் தான் தீட்சிதரின் திருஅவதாரத் தலம்! 1554 AD-இல் அவதாரம்!
திரிவிரிஞ்சிபுரம் மரகதவல்லி சமேத மார்க்கசகாய ஈஸ்வரர் அருளால், பாரத்வாஜ கோத்திரத்தில், ரங்கராஜத்வாரி என்பவருக்குப் பிள்ளையாய் அவதரித்தார் அப்பைய்யர். இயற்பெயர் விநாயக சுப்ரமணியம்!

இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர், வேலூர் மன்னன் சின்ன பொம்முவின் வேண்டுகோளை ஏற்று அரசவைப் பண்டிதராக விளங்கினார்!
ஆனால் அங்கே இருந்த ஒரு திவானால் அவருக்கு இள வயதிலேயே பல சோதனைகள்!

தாதாச்சாரி என்ற அந்தத் திவான் வைணவப் பித்து தலைக்கேறியவன்!
பித்தா பிறை சூடியை அவன் மதப்பித்து மறைப்பித்து விடுமா என்ன?
ஆனால் மதம் என்னும் பேய் பிடித்தவரைப் பக்குவமாய்ச் சமயத்தில் சமைக்க, இறைவன் திருவருள் கனிய வேண்டும் அல்லவா?



அப்பைய்யர், காஞ்சி காமாட்சியம்மன் அருளால், மங்களாம்பிகை என்ற மங்கை நல்லாளை மணந்து கொண்டு, இல்லறத்தில் தர்மம் கண்டார்!
சங்கரர் துறவற தர்மம்! அவர் அடியொற்றிய அப்பைய்யர் இல்லற தர்மம்!

அப்பைய்யர் காஞ்சிபுரத்தில் செய்த சோம, வாஜபேய யக்ஞங்கள், அதில் தரப்பட்டதாகச் சொல்லப்படும் மிருகபலி குறித்து...சில சர்ச்சைகள் நிலவுகின்றன! அதனால் அவற்றைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்போம்!
மன்னன் சின்னபொம்மு அப்பைய்யரை வெகுவாக ஆதரித்து வந்தான். அப்பைய்யரின் பூரண ஞானமும் பக்தியும் கண்டு பொறாமை கொண்டார் தாதாச்சாரி!

வெறுமனே பொறாமை கூட காலியான பணப்பை போலத் தான்! அது பரவாயில்லை! ஆனால் பக்தியில் பொறாமை என்பது பொக்கிஷம் உள்ள பணப்பைத் திருட்டு அல்லவா? அதற்குத் தண்டனையும் அதிகம் தானே!
இதை அந்த வைணவன் உணர்ந்தானில்லை! தான் வணங்கும் பெருமாள் பிரசாதத்தையே கலப்படம் செய்யத் திட்டம் போட்டான்! பக்தியில் பொறாமை காண்பது பகவானையே மறக்கச் செய்து விடுகிறது, பாருங்கள்!

பெருமாள் தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து, அப்பைய்யருக்கு அளிக்க ஏற்பாடு செய்தான்! குற்றமுள்ள நெஞ்சு...விஷ தீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. இதைத் தீட்சிதேந்திரர் கவனித்து விட்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார்.

ஆயினும், பெருமாள் பிரசாதத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். நஞ்சு உண்டு அருளிய நஞ்சுண்டேஸ்வரனைத் தியானித்தார் அப்பைய்யர்!
ஆலகால விஷத்தின் போது, பெருமாளும் பெருமானும் அருகருகே அல்லவா இருந்தார்கள்! அவர்கள் இருவரின் அருளும் ஒருசேரப் பெற்ற அப்பைய்யரை நஞ்சும் தீண்டுமோ?
அவர் நலமாக இருப்பதைக் கண்டு தாதாசாரியர் வெறுப்பு இன்னும் அதிகமாகத் தான் ஆகியது.


மன்னன் சின்னபொம்முவிடம் கோள் சொல்லி மனதைக் கலைத்தார் தாதாச்சாரி!
"உங்களை எப்போதும் இடது கரத்தால் தான் அப்பைய்யர் ஆசீர்வாதம் செய்கிறார்! இது நாட்டின் மன்னனையே அவமரியாதை செய்வது போல" என்று போட்டுக் கொடுத்தார்! மன்னனும் விசயம் அறியாமல், அய்யரிடம் சினந்து கொண்டான். அப்பைய்யர் அவன் திருப்திக்காகத் தன் வலக்கரத்தைச் சற்றே தூக்க, ஒரு சின்ன அசைவுக்கே, மன்னனின் துணிமணிகள் பற்றிக் கொண்டன!.

"மன்னா, அக்னி ஹோத்ரம் செய்து செய்து, அக்னி பகவான் அடியேன் கையில் ஆவாகனம் ஆகி விட்டான்! அதன் பொருட்டே வலக்கர ஆசீர்வாதம் நான் செய்வதில்லை! தவறாக எண்ணாதே" என்று சொல்லி அவனைத் திருத்தினார்!
அக்னி ஹோத்ரம் பரமம் பவித்திரமாகச் செய்வதன் பலனைக் கண்கூடாக உலகுக்குக் காட்டி அருளியவர் அப்பைய்யர்!

இதைக் கண்டும் மனம் மாறாத தாதாச்சாரி, இறுதியில் அப்பைய்யரைக் கொன்று விடுவதென்றே முடிவு கட்டி விட்டான்! கள்ளர்களை ஏவி விட்டு அவரை அழிக்க முனைந்தான்! ஆனால் அப்பைய்யர் கண் திறக்க கள்ளர் அனைவரும் சாம்பல் ஆயினர்! பின்னர் பரம கருணையால் அனைவரையும் உயிர்பித்துக் கொடுத்தார் அப்பைய்யர்! மாண்டவரே மீண்டதைக் கண்ட பின்னர் தான், தாதாச்சாரியும் இறுதியில் திருந்தினார். அப்பைய்யர் அவரைப் பட்சி தீர்த்தம் என்னும் ஊருக்குச் சென்று சிவபூசை செய்யச் சொல்லிக் கடைத்தேற்றினார்!


அப்பைய்யரும், சுவாமி தேசிகனும் நல்ல நண்பர்கள்! கருத்து மாறுபாடுகள் பற்றி அவர்களிடையே கடிதப் போர் எல்லாம் கூட நடக்கும்! :-)
சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு! சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! தேசிகரின் இன்னொரு பட்டமான "கவிதார்க்கிக சிம்மம்" என்பதை வழங்கியதே அப்பைய்யர் தான்! தேசிகரின் நாடகத்துக்கு அப்பைய்யர் ஒரு உரையும் எழுதியுள்ளார்.

அப்பைய்யர் சங்கரரைப் போலவே, பல தலங்களுக்கு திக்விஜயம் செய்தார்!
அவரின் மனைவியும், மாணவர்களும், அவரின் மூல சொரூபத்தைக் காட்டுமாறு ஒரு முறை வேண்டிக் கொண்டனர்; சித்தாசனத்தில் அமர்ந்து சமாதி நிலையானார் அண்ணல்!
அந்தச் சமயத்தில், உருத்திராக்கமும் திருநீறும் மேனியெங்கும் தரித்து, பல திவ்ய ஆயுதங்களுடன், சதாசிவ ருத்ர மூர்த்தியே அப்பைய்யரின் யோகத்தில் இருந்து கிளம்பி வெளிவந்ததைப் பலரும் தரிசித்து வியந்தார்கள்!

ஸ்ரீரங்கம் சென்று இறைவனின் புஜங்க சயனத்தைச் சேவிக்க எண்ணினார் அப்பைய்யர்!
ஆனால் அங்கிருந்த ஒரு வைணவக் கூட்டம் தீட்சிதரின் வருகையை விரும்பவில்லை! அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோயிலில் குழப்பத்தை ஏற்படுத்தவே, அர்ச்சகர்களும், மடத் தலைவர்களும் செய்வதறியாமல் திகைத்தார்கள்!

யாருக்கும் சங்கடம் கொடுக்க நினைக்காத அப்பைய்யர், சன்னிதிக்கு வெளியிலேயே நின்று கொண்டு அரங்க நகரப்பனைச் சேவித்து விடலாம் என்று நினைத்தார்! அரங்கனைச் சிவபெருமானாகத் தியானித்தார்.
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!

முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்! அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!
சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.
ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!



துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் சதுர்மத சாரம் என்ற விளக்க நூல் எழுதினார் அப்பைய்யர்!
ஆதிசங்கரரின் அத்வைத விளக்கத்துக்குத் தனியாக மெருகேற்றினார்! சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு நுட்பமான விளக்கங்கள் கண்டார்! அத்வைதத்தைப் பல இடங்களில் நிலைநாட்டிச் சென்றார்! இவர் சங்கரரின் மறு அவதாரமோ என்று எண்ணும் படிக்கு, அவர் விளக்கங்கள் அமைந்தன!

தன்னுடைய எழுபத்து இரண்டாம் வயதில், தன் இறுதியை அறிந்து கொண்ட அப்பைய்யர், தில்லையம்பலம் சென்று நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்தார்!
வீட்டில் அவருக்கு இறுதியாகக் கர்ண மந்திரங்கள் ஜபிக்கும் போது, நடராஜப் பெருமான் ஆலயத்திலும் அவர் சந்நிதிக்குள் நுழைவதைப் பார்த்தார்கள் தீட்சிதர்கள்!

வீட்டில் அவர் சிவ சாயுஜ்ஜியமாக, சிவ சுலோகத்தின் முதல் இரண்டடியை வாய்விட்டுச் சொல்லும் போதே, சீவன் சிவகதி அடைந்தது! மீதி சுலோகத்தை நீலகண்ட தீட்சிதர் (அன்னாரின் தம்பி பேரன்) உடனிருந்து முடித்துக் கொடுத்தார்!

அங்கோ....பொன்னம்பலத்தில்,
அவருக்குத் தரிசனம் செய்து வைக்கலாம் என்று எண்ணிய தீட்சிதர்கள், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், அப்பைய்யர் தில்லை அமபலத்தின் பஞ்சாட்சரப் படிகளில் விறுவிறு என்று ஏறிவிட்டார்!
சந்நிதியுள் சென்று நடராஜப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்!


அப்பைய்யர் பரம சைவர்! எனினும் வைணவத்தின் பேரில் ஒரு விதமான துவேஷமும் கொள்ளாதவர்! அவருடைய வரதராஜ ஸ்தவம் என்னும் நூலே இதற்குச் சாட்சி!
வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது வாதமே அல்ல! ஆனால் ஈசனை ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்!
கிம் த்வீ சத் வேஷகாட நலகலி தஹ்ருதாம் துர்மதீ னாம் துருக்தீ:
பங்க்தும் யத்னோ மமாயம் ந ஹிபவது விஷ்ணு வி த்வேஷ சங்கா!


சரி, தலைப்புக்கு இன்னும் வரலையே? இந்த அந்தணோத்தமருக்கும் கருப்பண்ண சாமிக்கும் என்ன சம்பந்தம்?
அப்பைய்யரின் நண்பர்...அவர் பெயர் சோளிங்கபுரம் தொட்டாச்சாரியார்! மிகவும் ஆழ்ந்த நரசிம்ம உபாசகர்!

ஒரு முறை இருவரும் மதுரை அழகர் கோயில் சந்நிதிக்குச் செல்லும் போது...அங்கே முதலில் பதினெட்டாம் படி கருப்பை வணங்கிச் சென்றனர்! கருப்பண்ண சாமியின் முன்பு பொய்யே உரைக்க முடியாது! வழக்கு விசாரணை வித்தகர் அல்லவா அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பு! நண்பரைச் சீண்டி விளையாட எண்ணினார் தொட்டாச்சாரியார்!

நண்பனின் கையைப் பிடித்து, கருப்பண்ணசாமியின் முன்பு வைத்து, "அப்பைய்யரே, எங்கே சொல்லுங்கள்! வேதங்களில் பரம், பரப்பிரும்மம் என்று பரத்துவமாக யாரைச் சொல்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" என்று கேட்க...
புரிந்து கொண்ட அப்பைய்யர், சிரித்துக் கொண்டே...

"வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது ஒரு வாதமே அல்ல! சங்கர பாஷ்யமே,"நாராயண பரோவக்யாத் அண்டம் அவயக்த சம்பவம்" என்றல்லவா துவங்குகிறது! அப்படி இருக்க, ஆதிசங்கரரையா நான் மறுத்துச் சொல்வேன்?

* பரம்பொருளே, சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருக்கிறான்! அந்தப் பரம் பொருளுக்கு நாராயணன் என்னும் திருநாமம்!
* நாராயணன் என்பவன் சைவமும் அல்ல! வைணவமும் அல்ல!
* அந்த நாராயணனே பரப்பிரம்மம்!
* நாராயணஹ பரஹ என்பதே வேதப் ப்ரமாணம்!"
என்று பதினெட்டாம் படிக் கருப்பின் சன்னிதியில் கையறைந்து சத்திய வாக்கு செய்தார் அப்பைய்யர்!

சிவாய விஷ்ணு ரூபாய, சிவ ரூபாய விஷ்ணவே
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோ, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ!
அபேதம் தர்சனம் ஞானம்!

மகான் அப்பைய்யர் திருவடிகளே சரணம்!