Sunday, May 25, 2008

அமர சிம்மனும்-ஆதிசங்கரரும்...







ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம் இருந்திருக்கிறார்கள். இலக்கியத்தில் அவர்களால் நாம் பெற்றவை மிக அறிதானவை. ஐம்பெரும் காப்பியங்கள் என்று நாம் போற்றும் சிந்தாமணி, வளையாபதி போன்றவை எல்லாம் ஜைன நூல்கள் தான். வடமொழியில் பஞ்சகாவியங்கள் என்று இருப்பதைத் தவிர, ஜைனர்களுக்கு என்று தனியாக பஞ்ச காவியங்கள் இருக்கிறதாம். அமரசிம்மன் என்று ஒரு ஜைன அரசன், ஆதி சங்கரர் காலத்தில் வசித்தவன். இவன் பல ஜைன மத நூல்களை எழுதினான் என்றும் அவற்றை எல்லாம் அவனே அழித்து விட்டான் என்று தெரிகிறது. இவனது படைப்புத்தான் அமரகோசம் என்னும் நிகண்டு @ அகராதி. ஜைன மததவர் எழுதிய இந்த அகராதியை அழியாமல் இருக்கக் காரணம் ஆதிசங்கரர் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இது சம்மந்தமான கதையினைப் பார்க்கலாம்.




ஆதிசங்கரர் காலத்தில் பாரதம் முழுவதிலும் 72 சமயங்கள் இருந்தன, அவற்றினால் சனாதன மதம் தொய்வுற்றிருந்தது, அதனை மீட்க அவர் பஞ்சாயத பூஜை முறையும் ஷண்மதங்களையும் ஸ்தாபனம் பண்ணினார் என்றெல்லாம் அறிகிறோம். இதற்காக அவர் சஞ்சாரம் செய்கையில் அமரசிம்மனையும் சந்தித்தார். பெளத்த கொள்கை என்பது பொதுவாக எல்லாமே மாயை, சூன்யம் என்பார்கள். ஜைனர்களோ இந்த மாயை @ சூன்யத்திற்குப் பின்னால் ஏதேனும் ஒன்று இருந்தும் இல்லாதிருக்கலாம் (அஸ்தி நாஸ்தி) என்பர். இப்படிக் கொள்கை உடைய அமரசிம்மனுடன் ஆச்சார்யார் வாதம் செய்து சனாதன இந்து மதத்தை நிலை நிறுத்த முடிவாகியது.




இவர்கள் வாதம் செய்ய முடிவு செய்தவுடன் அமரசிம்மன் ஒரு தடுப்பு (துணியால் ஆன திரை) இருவரையும் பிரிக்கும்படியாக செய்து ஆளுக்கு ஒரு பக்கத்தில் இருந்து வாதத்தை ஆரம்பித்தனர். அமரசிம்மன் தெளிவாக, அழகாக எல்லாவற்றையும் பற்றி பேசினான். என்னதான் சிறந்த புத்திசாலி என்றாலும், கேள்விகளுக்கு அழகாக தொடர்புடன் பதில் சொல்வது சங்கரருக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இவ்வாறாக பதிலளிக்கிறான் அரசன் என்று சிறிது யோசித்தார். ஈஸ்வர அவதாரமல்லவா உடனே காரணம் தெரிந்தது. அவர் அமரசிம்மனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் குரலில் பதிலளித்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்.






அமரசிம்மன் மிகவும் ஸ்ரத்தையுடன் பல நாட்கள் சரஸ்வதியை உபாஸித்திருக்கிறான். [ஜைன மதம் ஒரு கடவுள்/ கடவுள்கள் தத்துவத்தை எதிர்க்கிறது] இவ்வரசன் ஜைனமத்தவனாக இருந்தாலும் ஜைன மதம் பற்றி புத்தகங்கள் எழுத சரஸ்வதியின் அனுக்கிரஹம் பெற உபாசனை செய்திருக்கிறான். இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' என்பது போல ஜைன மததில் இருந்து கொண்டு, ஜைன மத நூல்கள் எழுத சரஸ்வதியை வணங்கியிருக்கிறான். இவ்வாறாக எழுதிய ஜைன க்ரந்தங்களில் நமது இந்துமதத்தையும் நிறைய கண்டனம் செய்திருக்கிறான்.
சரியோ-தவறோ ஒரு காரியத்தை முழு மூச்சாக எடுத்துச் செய்தால் அதன் பலனை இறைவன் நமக்கு தருவான் என்பதற்கு உதாரணமாக இவன் உபாசனைக்கும், சிரத்தைக்கும் உயர்வளித்து இவனுக்கு சரஸ்வதி அனுக்கிரகம் செய்திருக்கிறாள்.






இங்கே வாதப்போரில் திரைக்குப் பின்னே அவனருகில் ஸரஸ்வதி தேவியை கடத்தில் ஆவாஹனம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் அது ஆச்சார்யார் முன் உதவாது என்று அறிந்து அவரை எதிர்க்க சரஸ்வதியையே தஞ்சமடைந்திருக்கிறான். இவனது உபாசனைக்கு பலனளிக்க அவளும் கட்டுப்பட்டிருக்கிறாள். எனவே சரஸ்வதியின் அறிவுரைப்படியே கடத்தில் ஆவிர்பஹிக்கச் செய்துவிட்டு, சுற்றிலும் திரையெல்லாம் போட்டுக் கொண்டது. அவனுக்காக அவள் பதிலளித்திருக்கிறாள். ஆச்சார்யார் ஈஸ்வர ஸ்வரூபம், ஒரு விதத்தில் சரஸ்வதி மஹேஸ்வரனுக்கு சஹோதரி முறை. ஆகவே ஆச்சார்யார் மனதில் நடந்தது, நடப்பது ஆகியவை எளிதாக புரிந்தது.




ஆச்சார்யார் சரஸ்வதியிடம் 'உன்னை வழிபட்டுக் கொண்டே அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தை எதிர்க்கும் இவனுக்கு அனுக்கிரகம் செய்யலாமா?' என்று மனதால் கோரிக்கை எழுப்புகிறார். அதிலும் இத்துணை நேரம் எனக்கு பதிலளித்து அவனுக்கு அனுக்கிரகித்திருக்கிறாயே , இது சரியா என்று நினைக்கையில் சரஸ்வதியும் அமரசிம்மன் உபாசனைக்கு ப்ரதிபலன் தந்தாயிற்று என்று உணர்ந்து உடனே கடத்திலிருந்து விலகி எதாஸ்தானம் சேர்கிறாள். அதன் பின் அமரசிம்மனால் ஆச்சார்யாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான்.





இவ்வாறாக தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன் தான் எழுதிய க்ரந்தங்களை எல்லாம் தீக்கிரையாக்கத் துணிகிறான். தனது சித்தாந்தம் தோற்றபின் தனது சித்தாந்ததை நிலைநாட்ட எழுதிய நூல்கள் வீண் என்றே அவற்றை அழிக்கிறான். சரஸ்வதி கடாக்ஷத்தில் மிக அழகான ஜைன க்ரந்தங்கள் இவன் படைத்திருந்தானாம். எல்லாம் ஒவ்வொன்றாக தீயில் போட்டுவிடுகிறான். இதை அறிந்த ஆச்சார்யார் மிகுந்த வருத்தமடைந்து உடனடியாக அவனிடத்து வந்து அவனது செயலைத் தடுக்கிறார். அப்போது எல்லாம் போக அவன் கையில் இருந்தது கடைசியாக ஒரு நூல், அதுதான் 'அமர கோசம்'. ஆச்சார்யார் தடுத்திருக்கவில்லையெனில் இதுவும் நமக்கு கிடத்திருக்காது. இந்த நூலை அழியாமல் காத்து அதற்கு 'அமரத்துவம் அளித்துவிட்டார் ஆச்சார்யார்.



எந்த மதத்திலும் நேர்மை, சத்யம் உள்ளவர்கள் இருப்பார்கள். அமரசிம்மனும் தான் எழுதிய அகராதியில் இந்த நேர்மையினை கடைப்பிடித்திருக்கிறான். தனது கொள்கையை திணிக்காது, பிற மதங்களை சேர்ந்த வார்த்தைகளை விலக்காமல், எதிர்க்காமல். அவற்றுக்கு அந்தந்த மதத்தில் என்ன அர்த்தம், பெருமை சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கொடுத்திருக்கிறான்.



இந்த கதையானது சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறது

Wednesday, May 21, 2008

குருவின் வார்த்தையை மீறுவதே மாட்சி ! ராமனே சாட்சி !

.அட இதென்ன குருவருளில் இப்படி ஒரு பதிவா? இப்படியெல்லாம் தலைப்புவெச்சு பதிவு போட்டாத்தான் மக்களை எட்டும் அப்படின்னு கேஆர்ஸ்தான் வழிகாட்டினார். கேஆர்ஸின் அடுத்த பதிவு குருவினைக் கொன்ற கொலையாளி அருச்சுனன் என்று கூட இருக்கலாம்.கருத்தில் தார்மீகம் இருப்பது மட்டுமல்லாமல் தலைப்பிலும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.Means should also justify the end. அதுவும் இல்லாம நான்கு சீடர்கள் இருந்தும்(கோவிந்தன் பால் ஊத்தினா மாதிரி) குருஅருளுக்கு பதிவுபோட ஆள் இல்லையான்னு அவப்பெயர்வரக்கூடாது.நாலு மாட்டுபொண்ணுகள் மாமியாருக்கு உணவு படைத்த கதை மாதிரி ஆகக்கூடாது.
கைகேயியின் வரத்தின் மூலமாக ராமன், சீதை, லக்ஷ்மணனுடனும் காட்டுக்கு செல்வது என்பது முடிவாகி அயோத்தியை விட்டு ராமன் செல்கிறான்
"குருவார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை" ஆனால் குரு தவறாகச் சொன்னால் மரியாதையோடு மறுக்க கூடாதா? மறுப்பது அஹங்காரமா இல்லை அது மானிடப்பரிணாமம்.ராமனுடைய குலகுரு வசிஷ்டர். தந்தை ஆணையை ஏற்றுக் காடு போகும் ராமனைத் தடுக்கிறர். "நான் உன் குல குரு மீறிப் போகவேண்டாம்"என்கிறார். அப்போது ராமன் கூறுகிறான் "குருவே ...சத்தியமெல்லா தருமங்களயும்விட பெரியதும் மேலானதும் ஆகும் என்று எனக்கு போதித்தவர் நீர்.இப்போது நீர் என் தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தை மீறச்சொல்லுகிறீர். நீர் மதிக்கச்சொன்ன சத்தியத்தை உம்மைவிட மேலாக மதிக்கிறேன்". என்று வசிஷ்டர் வார்த்தையை மீறுகிறன் ராமன்.ஆஹா.... ராமன் குருவை அவமதிக்கிறான்(கேஆர்ஸ் கவனிக்க) என்று குமுற முடியுமா.குருவைவிட சத்தியத்தை தருமத்தை மதிக்கிறான் என்று கொண்டாட வேண்டும்.கம்பர் எப்படி இதை அனுபவித்தார் என்றும் பார்க்கலாம்வில் தடந் தாமரைச் செங் கண் வீரனைஉற்று அடந்து ஐய நீ ஒருவி ஒங்கியகல் தடம் காணுதிஎன்னின் கண் அகல்மல் தடந் தானையான் வாழ்கிலான் என்றான்வசிஷ்ட மாமுனிவன், கையில் வில்லும் தாமரை போன்று சிவந்த பெரிய கண்களை உடைய ராமனின் அருகில் சென்று " ஐயனே நீ நாட்டைவிட்டுச் உயர்ந்த மலைகள் உள்ள காட்டை சென்று அடைந்தாய் என்றால், இடமகன்ற வலிமை பொருந்திய சேனையை உடைய தசரதன் உயிர் வாழ மாட்டான்" என்று கூறினான்ஏன்றனன் எந்தை இவ் வரங்கள் ஏவினாள்ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன்சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான்தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான்நன்கு விளங்கின்ற நல்லறத்தை நிலை நிறுத்த பிறந்த ராமன் இது கேட்டு வசிஷ்டரிடம் கூறுகிறான்." என் தந்தை இவ்வரங்களைக் கொடுக்கச் சம்மதித்தான். தாயாகிய கைகேயி, வரங்களின்படி நடக்கக் கட்டளையிட்டாள். அதை நான் என் சிரமேற் கொண்டேன். இவற்றுக்கு எல்லாம் சாட்சியாக நின்றுள்ள நீங்கள் என்னை தடுத்து தந்தை சொல் மீறச்சொல்லலாமா. அதனால் குருவாகிய உங்களது வார்த்தைகளை மீறவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன்." என்கிறான் ராமன்.அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் என் கடன்அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்இது நெறியும் என்றனன்இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் குருவுவின் வார்த்தைகளை ரமான் மீறினானா இல்லையா?

Monday, May 19, 2008

காஞ்சி காமாக்ஷியின் அருந்தவப் புதல்வன்


இன்று வைசாக அனுஷம் நாள். 1894-ஆம் ஆண்டு இதே மே மாதம் 20 ஆம் தேதியன்றுதான் மாஹா பெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதியான மகான் அவதரித்ததினம். இப்பொழுதும் அதே மே மாதத்தில் 20 ஆம் தேதி அனுஷம் வருவது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும்.

அவரைப்பற்றி நிறைய நிகழ்ச்சிகளை இன்நன்நாளில் நினைவு கூறலாம். அதில் எனக்கு தெரிந்த நான்கு நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் பரமாசாரியரைப் பற்றிய வீடியோ பதிவுகளையும் நான்கு பகுதியாகச் சேர்த்திருக்கிறேன் அதையும் கண்டு அன்னாரின் ஆசிக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறேன்

மிளிரும் நகைச்சுவை.

நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து" யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?"என்று வினவினார். அவர்களும் பவ்யமாக "ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள். அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்" இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"' என்றார் மாஹாஸ்வாமிகள். கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்



-

ஓளிரும் தன்னடக்கம்
ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து .........ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அதை அடக்கும் வண்ணம் "'நான் அதை ஆமோதிக்கிறேன்" என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது "'தெய்வத்தின் குரல்தான்" மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.




சர்வமத சம்மதன்

மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை.கீழே உள்ள வீடியோ பதிவில் அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய சகோதரர்களையும் பார்க்கலாம். ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸவாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸலாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளை கொண்டுவரச்சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப்பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள்முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப்பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார்.மேலும் கூறினார் நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.




-


என்னப்பெரும் தவம் யான் செய்ததறியேனே என்னையும் காஞ்சி முனி ஆட்கொண்டதென் சொல்வேன்.

ஒருமுறை திருப்பதி சென்றுவிட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன் மடத்துக்கு சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை. ஸ்வாமிகள் திருப்பதியில் பெருமாளுக்கு அபிஷேகம் எப்படி நடைபெற்றது என்று விசாரித்து விட்டு என்னுடைய வங்கி எப்படி இருக்கிறது என்றும் விசாரித்தார்.அது முடிந்ததும் விடை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ஓரமாக நின்றோம்.மணிபகல் இரண்டாகி விட்டது.ஸ்வாமிகள் அநத கணக்கர் இரண்டுபேரையும் போய் மடத்தில் சாப்பிடச் சொல்லு என்று மடத்து சிப்பந்தி ச்ரீ கணடன் மூலமாக ஆணையிட்டார். நாங்களும் போய் உணவருந்திவிட்டு மறுபடியும் வந்து நின்றோம். எங்களைப் பார்த்ததும் ஸ்வாமிகள் இப்படியே இருங்கள் உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது என்றார்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்களைப் போன்ற சாமனியர்களால் ஸ்வாமிகளுக்கு வேலை செய்ய முடியுமா? அப்போது மடத்து சிப்பந்தி வந்து ஸ்வாமிகளிடம் ச்ரீ ரங்கம் ஜீயர் ஸ்வாமிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அந்தச் சமயம் ச்ரீ ரஙகம் ரங்கநாத ஸ்வாமியின் ராஜகோபுரப் பணி நடந்து கொண்டு இருந்தது. ஸ்வாமிகளும் அதை உரக்கப் படிக்கும்படி அவரிடம் சொன்னார். அதில் கோபுரப் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார். அப்போது ஸ்வாமிகள் அவரிடம் கொஞ்சம் நிறுத்து என்று கூறி விட்டு என்னைப் பார்த்து உன்னுடைய வேலை வரப்போகிறது என்றார் நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.அடுத்த வரிகளில் அந்தக்கடிதத்தில் ச்ரீ. ஜீயர் ஸ்வாமிகள் கோபுரம் கட்டுவதற்கு நன் கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் நிதி துறைக்கு அனுப்பபட்ட விண்ணப்பம் இன்னும் பரிந்துரை செய்யப்பட்டு ஆர்டர் வந்து சேரவில்லை.ஆதலால் ஸ்வாமிகளின் உதவியை இந்த விஷயத்தில் கோரி இருந்தார். உடனே ஸ்வாமிகள் என்னைப் பார்த்து நீதானே வங்கியின் வருமானவ்ரி கணக்கு வழக்குகளை கவனித்துகொண்டு இருக்கிறாய்.உனக்குத்தான் டெல்லியில் மத்திய வருமானவரித்துறையின் குழுவின் தலைமையாளரை நன்றாகத்தெரியுமே. அவரிடம் சொல்லி சீக்கிரம் பர்மிஷன் வாங்கிக்கொடு.நல்ல காரியத்தில் பங்குகொண்ட பலனும் வரும் என்றார். அவருடையபெரிய நிலைக்கு கண்ணசைத்தால் நிதிமந்திரியே இதை செய்து முடித்திருந்திருப்பார் . இருந்தாலும் என்னைப்போல எளியவனிடம் இந்தப் பணியைக் கொடுத்தது எனக்கு அவர் செய்த அருள். அவர் சொன்னபடியேஅப்போது CBDT சேர்மனாக இருந்த டாக்டர். சிவ ஸ்வாமியிடம் அணுகி ஸ்வாமிகளின் விருப்பத்தைச் சொன்னதும் உடனே விலக்கு அளிக்கும் ஆர்டரை மத்திய கெஜட்டில் பதிவு செய்துவிட்டார்.
இதில் எனக்கு புரியாதது கடிதம் வருவதற்கு முன்பே எப்படி எனக்கு வேலை வரப்போகிறது என்றும், கடிதத்தின் பாதியில் படிக்காமலேயே நிறுத்தி எனக்குரிய பகுதி வரபோகிறது என்று எப்படிச் சொன்னார். அவர்தான் முக்காலமும் உணர்ந்த மஹானாயிற்றே இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?


-


ராகம்:- ஹிந்தோளம் தாளம்:- மிச்ரசாபு
பல்லவி
ஸ்ரீ சந்தரசேகரேந்த்ர சரஸ்வதியே சரணம்
காஞ்சி வாழ் தயாநிதியே....(சந்தரசேகரேந்தர.)
அனுபல்லவி
அந்தரங்கமுடன் உந்தன் அருளைபெறவேநான்
என்ன தவன் செய்தேனோ கருணைக் கடலே.....(சந்த்ரசேகரந்தர)
சரணம்
பக்தர்கள் செய்திட்ட பாக்யம் அப்பாரினில் பரம் பொருளாகவே அவதரித்தார்
மாதவம் செய்திடும் மாணிக்கமாம் ஸ்ரீ ஜெயந்தரஸரஸ்வதியை அளித்தாய்
பந்த பாசம் வென்ற பாலயோகி ஸ்ரீசஙகரவிஜெயேந்த்ர

ஸரஸ்வதியையும் அளித்தாய்.....( சந்த்ரசேகரேந்தர..)
பெரியவர்கள் மீது உள்ள பாடலை பாடியவர் திரு. மஹாராஜபுரம். ராமச்சந்தரன்

இயற்றியது மறைந்த சங்கீத கலாநிதி மஹாராஜபுரம் சந்தானம்

பாடலை இங்கே
%3Eகிளிக் செய்து கேளுங்கள்

மஹா பெரியவா என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர் எம் ஸ் அம்மாதான்.ஸ்வாமிகள் மீது அபாரா பக்தியும் அன்பும் கொண்டவர். அவருடைய பாடல் இல்லாமல் இந்தப்பதிவையும் குருவருளயும் முடிக்க முடியுமா?முடிவில் பகைவனுக்கும் அருளவேண்டும் என்ற எண்ணமும், யுத்த வெறியும் நாடு பிடிக்கும் ஆசையும் நமக்கு கிடையாது என்ற நமது தேசத்தின் உயர்ந்த கொள்கையை உறுதிப்படுத்தும் வண்ணம் ஸ்வாமிகள் எழுதி எம் ஸ் அம்மா அவர்களால் ஐக்கிய நாட்டு சபையில் பாடிய பாடலோடும் அவர் ஆசி வழங்கும் படத்துடன் குருவருள் பெற்று முடித்துக்கொள்ளலாம்







Sunday, May 18, 2008

மனக்குதிரையை அடக்க முடியுமா? பரமாசாரியாளின் வழி!


ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்கள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ளன. வடக்கே பத்ரியில் ஜ்யோதிர்மடத்திலும், மேற்கே துவாரகையிலும், கிழக்கே பூரியிலும்,தென்பகுதியில் சிருங்கேரியிலும் ஸ்தாபித்ததாய்ச் சொல்லுவார்கள். கைலை சென்றிருந்த சங்கரருக்கு அங்கே ஈசன் ஐந்து லிங்கங்களைத் தந்து அருளியதாகவும் ஒரு கூற்று உண்டு. அவை யோகலிங்கம், மோக்ஷலிங்கம், முக்தி லிங்கம், வரலிங்கம், போக லிங்கம் ஆகியவை. இவற்றை முறையே மற்ற நான்கு பீடங்களில் பிரதிஷ்டை செய்ததாயும், சொல்லுவார்கள். இன்னும் சிலர் சிதம்பரத்திலும், நேபாளத்திலும், பிரதிஷ்டை செய்ததாயும் சொல்கின்றனர். ஆனால் இந்த யோகலிங்கம் பற்றி மட்டும் மாறுபட்ட கருத்துக்கள் எவருக்கும் இல்லை. அத்தகைய யோகலிங்கம் ஸ்தாபித்த இடம் தான் காஞ்சி. சங்கரர் தன் யாத்திரையின் இறுதியில் காஞ்சியை அடைந்து, காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீகாமகோடி சக்ரப் பிரதிஷ்டை செய்தார். காமாட்சி அம்மனின் உக்ர கலைகளை அடக்கி, காமாட்சியை ஸ்ரீ காமகோடி யந்திரத்தில் ஆவிர்பாவம் அடையவும் செய்தார். பின்னர் மன்னாதி மன்னர்கள் அனைவரும் காண காஞ்சியில் காமாட்சி அம்மன் அனுமதியுடன், சரஸ்வதியின் முன்னிலையில் அவர் சர்வக்ஞ பீடத்திலும் ஏறினார். அத்தகைய காஞ்சி பீடத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லி முடியாது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் கூட சங்கராச்சார்யர்கள் யாத்திரைகளுக்குச் செல்லும் வழியில் தடங்கல் செய்யாமல், சுங்கவரி வசூலிக்காமல் சுதந்திரமாகவும், பத்திரமாகவும் செல்வதற்கு, அவரவர் சரகங்களின் ஜாகிர்தார்களும், நவாப்களும், பாளையக் காரர்களும் உத்தரவிடப் பட்டிருந்ததாயும் தெரிய வருகின்றது. கர்னல் மெக்கன்சி என்னும் சரித்திர ஆய்வாளர் சங்கராச்சார்யா என்னும் முக்கிய இந்துமத ஆச்சார்யரைத் தாம் கும்பகோணத்தில் சந்தித்ததாயும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பீடத்தின் 68-வது பீடாதிபதி ஆன ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், "பரமாச்சாரியாள்" என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். சந்நியாசியாக இருந்தாலும் நாட்டுப்பற்றுக்கு விதிவிலக்கல்ல என்பதைத் தெரிவிக்கும் நோக்குடன் கடைசி வரையில் கதர் ஆடைகளையே அணிந்தார். பாலக்ககடில் நல்லிச்சேரியில் தங்கி இருந்தபோது, பின்புறம் அமைந்திருந்த மாட்டுக் கொட்டிலில், மகாத்மா காந்தியைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடினார். தேதி 15-10-1927.

வைகாசி அனுஷத்தில் உதித்த மஹாஸ்வாமிகளின் 115-வது ஆராதனை விழா நாளைக்கு. மகாபுருஷர் ஆன அவரின் பாதம் பணிந்து வணங்குவோம். நம் மனதையும், இந்திரியங்களையும் பற்றி மகாஸ்வாமிகளின் அருள்வாக்கில் இருந்து:

"ஜீவன் என்பவன் தேரில் உட்கார்ந்துள்ள யஜமான் மாதிரி. சரீரம் தான் தேர். தேருக்கு சாரதி யாரென்றால் புத்தி. அது பல குதிரைகள் பூட்டிய தேர். குதிரைகள் எவை என்றால் அவைதான் நம் இந்திரியங்கள். குதிரைகளை சாரதி ஏவி, வழி நடத்துவது லகானைப் பிடித்துத் தானே. கடிவாளம் என்பது தானே? அந்த லகான் அல்லது கடிவாளம் தான் நம் மனது. (மனது குதிரையை விட வேகமாய் ஓடப் பார்க்கிறது இல்லையா) நம் புத்தியாகின்ற சாரதி தான் அந்தக் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கவேண்டும். அதற்குத் தேவை சாதனங்களால், விவேக வைராக்கியங்களால் உறுதிப்பட்ட நல்லறிவு என்ற தேர்ப்பாகன்.( இந்தத் தேர்ப்பாகன் நம் அனைவரிடமும் இருக்கின்றான். ஆனால் நாமதான் அலட்சியம் செய்துவிட்டு வேறேவழியில் போகச் சொல்லியோ, அல்லது, நாமே குதிரையை விரட்டியோ விட்டுடறோம்.) மனதாகிய கடிவாளத்தைக் கவனமாய் இழுத்துப் பிடித்து விடுகின்ற அளவுக்கே விட்டோமானால், இந்திரியக் குதிரைகள் உத்தமமான விஷயங்களிலேயே அல்லது வழியிலேயே போய் போக வேண்டிய இடத்துக்குச் சரியாய்க் கொண்டு சேர்க்கும். சேர்ந்தபின்னால் ஜீவன் ஆன யஜமான் ஆன்மாவைத் தன் பாட்டில் அனுபவிக்கலாம்."

அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை என் சொந்தக்கருத்துக்கள்.

பரமாசாரியார் அவர்களின் பாதம் பணிந்து வணங்குவோம்.

"ஜெய ஜெய சங்கர,
ஹர ஹர சங்கர"

Thursday, May 15, 2008

குருவின் உபதேசச் சிறப்பு....

குருகுலம் முடிந்து செல்லும் சிஷ்யனுக்கு, குரு உபதேசம் செய்கையில் "காஞ்சனா, காமினி, கீர்த்தி" ஆகிய மூன்றிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவற்றில் கவனமாக இல்லாவிடில், இந்த மூன்றும் சிஷ்யனை கீழ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார். சீடனும் குருவை வணங்கி 'தான் இந்த மூன்றிலும் எச்சரிக்கையாக இருந்து தானம், தவம் போன்றவை செய்து உயர்வடைவதாக' வாக்களித்து பின் விடைபெறுகிறான்.

அந்த சிஷயன் கங்கை கரையில் உள்ள ஒரு ஊரில் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். ஒருநாள் கங்கையின் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு
வருகையில் ஒரு புதையலைக் கண்டெடுத்தான். இது காஞ்சனம், நம் குரு சொல்லியபடி இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆகையால் அந்த புதையலை வைத்து கோவில் எழுப்ப முடிவுசெய்து கோவில் கட்டும் வேலையாட்களிடம் அந்த செல்வத்தை கொடுக்கிறான். அவர்கள் இவனைக் கட்டிப் போட்டுவிட்டு செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார்கள். அவ்வாறாக கட்டப்பட்ட நிலையில் தனது குரு கூறியதை நினைவிருத்தி, இனி இந்த செல்வத்தை கையாலும் தொடுவதில்லை என்று ப்ரதிஞ்ஞை செய்து கொண்ட சமயத்தில் சில வழிப்போக்கர்களால் விடுதலை செய்யப்படுகிறான்.

இவ்வாறாக அவன் தவத்தை தொடருகையில் அவனது ஆஸ்ரமத்திற்கு அழகிய பெண் ஒருவள் வந்து, தான் கணவனால் கைவிடப்பட்டவள் என்று
கூரி, தனக்கு ஆஸ்ரமத்தில் தங்க இடம் தர வேண்டுகிறாள். சிஷ்யனுக்கு மீண்டும் ஆச்சார்யரது உபதேசம் (காமினியிடம் கவனமாக இரு) மனதில் தோன்றுகிறது. ஆகையால் அந்த பெண்ணை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் அப்பெண் தனதுநிராதரவான நிலையினை கூறி அழுத காரணத்தால் தனி பர்ணசாலை அமைத்து தங்கிக் கொள்ள உதவுகிறார். நாளடைவில் சிஷ்யர் சம்சாரி ஆகிவிடுக்கிறார். திடிரென ஒருநாள் ஆச்சார்யரது நினைவு வருகிறது. அப்போது தான் திருமணம் என்ற பந்தத்தில் வீழ்ந்ததாக உணர்ந்து தனது ஆச்சார்யாரின் எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ளாது விட்டதற்காக வருந்தி, சன்யாசம் ஏற்று மீண்டும் தவம் செய்ய காட்டிற்கு செல்கிறார்.

இந்த முறை கடுமையான தவத்தாலும், மந்த்ர, தந்த்ர, யோக ப்ரயோகங்களாலும் பல ஸித்திகளை அடைக்கிறார் நம்ம சன்யாசி. ஒருநாள் ஒர்ஏழை, சன்யாசியிடம் வந்து, தான் பசியாலும், நோயாலும் மிகவும் வருந்துவதாகக் கூற, அதற்காக வருந்திய சன்யாசி தனது தாடியிலிருந்து ஒரு
மயிர் இழையினை எடுத்து அந்த ஏழைக்கு அளித்து, அந்த இழை அவனுக்கு வேண்டிய பணத்தை தரும் என்று கூறி அனுப்புகிறார். ஏழையும் நம்பிக்கையுடன் சென்று அதை தனது பெட்டியில் வைத்து மூடுகிறான். மறுநாள் அந்த பெட்டி முழுவதும் தங்க நாணயங்கள் ஜ்வலித்ததாம். இதன் காரணமாக சன்யாசியின் புகழ் பரவுகிறது. ஆனால் சன்யாசியோ 'நான் எந்த ப்ரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. எனது வைராக்யத்தை கலைக்காமல் நான் தவத்தை தொடருவேன்' என்று இருந்தார். ஒருநாள் காலை ஆஸ்ரமத்தின் முன்னே மிகப் பெரிய கூட்டம். நமது சன்யாசி என்ன-ஏது என்று விசாரிக்கும் முன்னரே கூட்டத்திலிருந்த மக்கள் அவரது தாடி முடியுனை பிடித்து இழுத்து எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மக்கள் கூட்டமாக இழுக்க ஆரம்பித்ததில் சன்யாசி நினைவிழந்து, ரத்தம் சொரிய கிழே விழுந்துவிடுகிறார்.

சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் தனது குருநாதரை நினைத்தார். தனது குருநாதர் கூறியது மூன்றும் (காஞ்சனம், காமினி, கீர்த்தி) எவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்துள்ளது என்று உணர்கிறார். அது மட்டுமல்லாது, குருவின் உபதேசம் எவ்வளவு ப்ரத்யக்ஷமானது என்றும் உணர்ந்து, அன்றிலிருந்து மெளனத்தையே கேடயமாக்கி தனது தவத்தை தொடர்ந்தார்.

Saturday, May 10, 2008

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!


மன்னன் முகம் கண்டு பிரமித்த சேவகர்கள் மன்னன் முகத்தின் ஒளியின் தாக்கம் தங்கள் உள்ளேயும் ஊடுருவதை உணர்ந்தனர். அதிசயித்தனர். அவர்கள் அதிசயம் மேலும் அதிகம் ஆகும் வண்ணம், மன்னன் தனக்களிக்கப் பட்ட மதுபானத்தை மறுத்தான். மங்கையரை இனிமேல் எதிரேயே வராதீர்கள், எனப் பணித்தார். பேராச்சரியத்துடன் நகருள் நுழைந்தனர் அனைவரும். மன்னன் முன்போல் இல்லை என மக்களுக்கும் தெளிவாய்த் தெரிந்தது. அந்தப் பரப்பிரும்மமே அருளாட்சி செய்ய வந்திருக்கும் பேறு பெற்றதை அவர்கள் உணரவில்லை. எனினும் மாற்றம் கண்டு மகிழ்வெய்தினர். முட்டாள் தனமாயும், சிற்றின்பத்தில் பேரின்பம் காணுபவனாயும் இருந்த மன்னனா இது என மந்திரிமார் வியந்தனர். பட்டமகிஷியின் ஆனந்தத்துக்கு ஓர் அளவில்லை! என்ன நடந்தது காட்டில்? அனைவரும் வியந்தனர். எனினும் மாற்றம் மகிழ்வூட்டக் கூடியதாயே இருந்ததால், அனைவரும் இது இவ்வாறே இருக்கவேண்டும் எனவும் எண்ணினர். தன்னுடன் தத்துவங்களைப் பற்றி மன்னன் பேசி மகிழ்வதில் மகாராணிக்கு மன மகிழ்ச்சி, மந்திரிமார்க்கோ அரசன் திடீரென இவ்வளவு புத்திசாலியாகவும், சிந்தனையாளனாயும் மாறியது எப்படி என்ற யோசனை! நாத்திகவாதம் பேசியவன், முழு ஆத்திகவாதியாக மாறியது எப்படி? மந்திரிமார்கள் யோசனையில் ஆழ்ந்தனர். இது நிலைத்தால் ராஜ்யம் நல்வழியில் திரும்பும். நாடெங்கும் ஒற்றர்கள் அனுப்பப் பட்டனர். அரசனுக்கே தெரியாமல் ஏதோ நடந்திருக்கின்றது என்ற சந்தேகம் எழ, அங்கங்கே ஒற்றர்கள் ஊடுருவி நடந்தது என்ன என அறிய முயன்றனர்.
ஒரு ஒற்றன் காட்டில் புகுந்து நடந்தான். ஓர் இடத்தில் சில துறவிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான். சற்றே மறைந்து இருந்து பார்த்தபோது அந்தத் துறவிகளில் தலைமையாக இருப்பவர் போல் தெரிந்த ஒருவர் அருகில் இருந்த குகைக்குள் சென்று பார்த்துவிட்டு மீண்டும் வருவதையும் கண்டான். அவர்களுக்குள் சோகம் இருந்தது எனவும் கண்டான். காத்திருக்கத் தீர்மானித்தான். மறுநாள் காலையில் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடிப்பதற்காகத் துறவிகள் அனைவரும் அருகில் இருந்த ஆற்றுக்குச் சென்றனர். அவர்கள் தங்கள் ஜபம்,சந்தியாவந்தனம் ஆகியவற்றை முடித்துவிட்டு வரச் சற்று நேரம் ஆகுமென அவர்கள் பேச்சில் தெரிந்தது. அவர்கள் சென்றதும் அந்தக் குகைக்குள் நுழைந்தான் ஒற்றன். அங்கே அவன் கண்டது என்ன? ஒரு இளம் சந்நியாசி படுத்திருக்கக் கண்டான். தூங்குகின்றாரோ என நினைத்து அருகே சென்ற போது தூங்கவில்லை என்பதைக் கண்டான். ஆனால் முகம் மட்டும் வாடவில்லை, கழுத்தில் போட்டிருந்த மாலையும் வாடவில்லை. என்ன அதிசயம் மூச்சில்லை, பேச்சில்லை, இவர் யார்? என யோசித்தவனுக்கு உண்மை புரிந்தது. ஏதோ நடந்திருக்கின்றது, அதன் மூலகர்த்தா இவரே எனப் புரிந்து கொண்டான். காத்திருந்தான். சீடர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் பேச்சில் இருந்து உண்மையும் புலனாகியது. உடனே நகருக்குத் திரும்பினான். தனக்காய்க் காத்திருந்த மந்திரிமார்களிடம் உண்மையைச் சொன்னான். மந்திரிகள் கூட்டம் கூடியது. ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஆஹா, என்ன இது? மந்திரிகள் எடுத்த முடிவு இதுவா? கேட்போருக்குத் திகைப்பாய் இருந்தாலும் நாடு நலம் பெற, மக்கள் நல்லாட்சி பெற, இதுதான் சரியான முடிவு என்று தீர்மானித்தனர் மந்திரிசபையார். காட்டில் இருக்கும் சங்கரரின் உண்மையான உடலை எரித்துவிட்டால் பின்னர் அவர் திரும்பிப் போக முடியாதே? மன்னன் உடலிலேயே தங்க வேண்டும் அல்லவா? இப்போது தான் ஒரு மாசமாய் நாடு நல்லாட்சி பெற்று வருகின்றது. நாடு முக்கியமா, சங்கரர் முக்கியமா? நாடு தான் முக்கியம், மந்திரிகளின் ஏகோபித்த முடிவு அது. ஒரு சிறு படை வீரர்களின் கூட்டம் காடு நோக்கிக் கிளம்பியது. ஒற்றன் காட்டிய குகைக்கு அருகில் தக்க நேரத்துக்குக் காத்திருந்தது. மறுநாள் காலை வழக்கம்போல் நடக்கப் போவதை அறியாத சீஷ்யர்கள் தங்கள் காலைக்கடன்களை முடிக்க ஆற்றுக்குக் கிளம்ப, அவசரம் அவசரமாய் அங்கே ஒரு சிதை ஏற்படுத்தப் பட்டது. குகைக்குள் இருந்த சங்கரரின் உடல் அதில் கிடத்தப் பட்டது. அடுத்து அவர்கள் செய்த காரியம்! அம்மா! கை கூசும் வண்ணமான காரியம் அல்லவோ அது! சிதையில் கிடத்தப் பட்ட சங்கரரின் உடலுக்குத் தீ மூட்டினார்கள். என்ன இது? இப்போது பிரம்ம முஹூர்த்தம் அல்லவா? இன்னும் அருணன் தோன்றவில்லையே? அதற்குள் சூரியன் வந்துவிட்டானோ? என்ன அதிசயம் இது? ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிஷ்யர்கள் அந்தப் பேரொளியைப் பார்த்ததும் வியந்தனர். ஆனால் ஒளியில் இருந்து புகை கிளம்புகின்றதே? என்ன? என்ன? என்ன? என்ன நடக்கின்றது?
ஒரேஓட்டமாய் ஓடினார்கள் அனைவரும். அதற்குள் அவர்கள் ஓடிவரும் சப்தம் கேட்டுவிட்டுப் படைவீரர்கள் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டனர். என்ன நடந்தது? அருகில் வந்து பார்க்கின்றனர். துடித்தார் பத்மபாதர். என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னர் அமருகன் உடலில் இருந்து விடுதலை பெற்ற சங்கரரின் உயிரானது, தன் உடலில் புகுந்தது. சிதையில் கிடத்தப் பட்டு எரிந்து கொண்டிருந்த சங்கரர் எழுந்தார். தீயில் இருந்து எழுந்து வெளியே வந்தார். அன்று அன்னை சீதை தன் கற்பை நிலைநாட்ட அக்னிப்ரவேசம் செய்தாள். இன்று சங்கரர் சிலகாலம் மன்னன் உடலில் இருந்து இல்லற வாசம் செய்ததுக்காக அக்னிப்ரவேசம் செய்தாரோ??????? ஆன்மாவை உணர்வுகள் பாதிக்காது என்றாலும், உலகத்துக்காக இப்படிச் செய்தாரோ என்னும் வண்ணம் தீக்குள் இருந்து எழுந்து வந்தார் சங்கரர். சிஷ்யர்கள் மனம் மகிழ்ந்தனர், எனினும் உலகுக்கே ஆசி வழங்க வேண்டிய வலது கை எரிந்து போயிற்றே? என்ன செய்யலாம்? பத்மபாதருக்கு ஒரு யோசனை தோன்றியது. "குரு தேவா, உங்களுக்கு உடலும், அதன் சுக, துக்கங்களும் ஒரு பொருட்டல்ல எனினும், கருகிய கையை அப்படியே விடாமல் லட்சுமி நரசிம்மரைத் துதியுங்கள். என் மனம் ஒருமிக்கவில்லை இப்போது, மனம் தடுமாறுகின்றது. எந்நிலையிலும் ஒரே மாதிரியான மனம் படைத்த நீங்களே இப்போது ஆற்றலில் வல்ல நரசிம்மனை லட்சுமியோடு கூடித் துதித்தால் அவன் அருள் புரிவான் என்று என் மனம் சொல்கின்றது." என்று வேண்டிக் கொள்ள அவ்வாறே சங்கரரும் ஸ்ரீலட்சுமிநரசிம்ம கருணாரச ஸ்தோத்திரத்தைப் பாடி மனமுருகி வேண்டக் கையும் மீண்டு வந்தது.
"லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப் ஜமதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் சுபசரம் புவிசங்கரேண
யே தத்படந்தி மநுஜா ஹரிபக்தியுக்தா
தே யாந்தி தத்பதஸரோஜம் கண்டரூபம்" என்று பாடி முடிக்கவும் கருகிய கை மீண்டும் முன்போல் ஆயிற்று.

மண்டனமிஸ்ரரைப் போய்ப்பார்க்க நாட்டுக்குள் போய் அவர் வீட்டில் நுழைந்தனர். சங்கரர் புத்தொளியோடு திரும்பி வருவதைப் பார்த்ததுமே சரசவாணி தன் தோல்வியை ஒப்புக் கொள்கின்றாள். மண்டனமிஸ்ரர் துறவறம் தழுவுகின்றார். கணவனைப் பிரிந்து தனித்து வாழ மனமில்லாமல் உயிர் விட நினைத்த சரசவாணியை சங்கரர் தாங்கள் திக்விஜயம் செய்யும் ஊர்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வருமாறும், அப்போது அவளுக்கு எங்கே பிடிக்கின்றதோ அங்கே தங்கலாம் எனவும் அழைக்க, அவளும் ஒத்துக் கொண்டு நிபந்தனை விதிக்கின்றாள். தன் பாதசர ஒலியைக் கேட்டுக்கொண்டே தான் வருவதை சங்கரர் அறிந்து கொள்ளவேண்டுமென்றும், நடுவில் திரும்பக் கூடாது, திரும்பினால் தான் அங்கேயே நின்றுவிடுவதாயும் சொல்ல, சங்கரரும் நிபந்தனைக்கு ஒத்துக் கொள்கின்றார். சிருங்கேரிக்கு அருகே வரும்போது பாதசர ஒலி கேட்காமல் சங்கரர் அன்னையின் கருணை உள்ளம் இதுவெனத் தெளிந்து திரும்பிப் பார்க்க அங்கே அன்னை "சாரதை"யாக நிலைகொண்டு இன்றளவும் அருளாட்சி செய்துவருகின்றாள்.

Friday, May 9, 2008

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!

சக்திக்கும், ஆற்றலைக் கணக்கிடுவதற்கும் குதிரையைப்பயன்படுத்துகின்றோம். அதுபோல் மனமும் ஒரு குதிரையே. குதிரையை அடக்க எவ்வாறு கடிவாளம் தேவையோ, அதே போல் நம் மனமாகிய குதிரையும் பக்தி, ஞானம், விவேகம் என்ற கடிவாளங்களினாலேயே அடங்கும். ஆனால் ஜகத்குரு என்று போற்றப்படும் ஆச்சாரியரோ, பிறப்பிலேயே மனோவலிமை உள்ளவர். அவரின் அவதார நோக்கமே இந்த உலகில் பக்தி மார்க்கத்தின் மூலம் நம் போன்ற சாதாரண மக்களை உய்விப்பதற்கும், அதற்கு ஒரு வழிகாட்டியுமாய் இருப்பதற்குமே. அத்தகைய பரப்பிரம்ம சொரூபத்திற்கே சோதனையும் வந்தது. என்னதான் பரப்பிரம்மம் என்றாலும் மனுஷ ரூபத்தில் வந்து, மானிட வாழ்க்கை வாழ்ந்து வரும்போது அதன் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆகவேண்டும், விதிப்படி. அத்தகைய ஒரு சமயம் ஜகத்குருவின் வாழ்விலும் ஏற்பட்டது ஒரு பெண்ணினால். அதுவும் அந்தப் பெண்ணோ கலைமகளின் உறைவிடம். சரசவாணி, அவள் கணவனோ படைப்புக்காரணம் ஆன பிரம்மனின் அம்சம். தன் கணவன் ஒரு சந்நியாசியிடம் தோற்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? பெண்ணினத்திற்கே உரிய பாசத்தோடும், கணவனின் திறமையையும் அறிவையும் நிலைநாட்டவும் அவள் ஜகத்குருவைப் பார்த்துக் கேட்ட கேள்வி? மனம் நொந்து போய்க் கூனிக் குறுகி உட்கார்ந்தாளாம் சரசவாணியே அத்தகைய கேள்வியைக் கேட்குமாறு நேர்ந்துவிட்டதே?அதிலும் ஒரு இளம் சந்நியாசி, இத்தன நேரம் அத்தனை கேள்விகளுக்கும் சரியான மறுமொழி பகிர்ந்துவிட்டு வாதத்தில் வெல்லப் போகும் நேரம் கேட்டாள் சரசவாணி! "துறவியே, அனைத்து உலகாயத வழக்குகள், வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோதிடம், மருத்துவம், இதிகாசம், கணிதம் என்ற அனைத்திலும் நீர் தேர்ந்து இருக்கின்றீர். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கி. இல்லற சுகம் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் 30 நாட்களுக்குள் எனக்குச் சொல்லுவீர்களாக!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள் சரசவாணி.

யோசனையுடன் தன் சிஷ்யர்களுடன் திரும்பி நடந்தார் சங்கரர். இதில் தோற்றால் சங்கரர் திருமணம் செய்து கொள்ளவேண்டும். சந்நியாச வாழ்வைத் துறக்க வேண்டும். அதுவே நிபந்தனை. என்ன செய்யலாம்? ஒரே குழப்பம்? ஒரு சந்நியாசியான தனக்கு இது எவ்வாறு தெரியமுடியும்? எப்படிப் பார்த்தாலும் இடிக்கின்றதே? அந்த சரசவாணி மிகுந்த கெட்டிக்காரிதான். இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு நிறுத்திவிட்டாளே? தன் குருவின் முகம் வாடி இருப்பதைக் கண்ட பத்மபாதரின் முகமும் வாடுகின்றது. மெல்ல, மெல்ல அருகிலிருந்த காட்டிற்குள் வருகின்றார்கள். காட்டிற்குள் நடக்கும்போது ஒரு இடத்தில் அநேகப் பறவைகளின் கூச்சல்! ஒரே ஆரவாரம். என்ன வென்று பார்த்தால், ஒரு மன்னன் தன்னந்தனியாய் இறந்து கிடந்தான். வழி தவறிவிட்டானோ என்னமோ? சட்டெனெ ஒரு யோசனை தோன்றியது சங்கரருக்கு. நின்று, திரும்பி பத்மபாதரைக் குறிப்பாய்ப்பார்த்தார் சங்கரர். குரு ஏதோ முக்கிய விஷயம் தெரிவிப்பதை அறிந்த பத்மபாதர் குருவின் அடுத்த உத்தரவுக்குக் காத்திருந்தார்.

"பத்மபாதா! சரசவாணி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல இந்த மன்னன் உடலை நான் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றேன். மன்னனின் உடலுக்குள் நான் புகுந்து கொண்டு அரண்மனைக்குச் செல்லப் போகின்றேன். சரியாக ஒரு மாதம் இந்த உடலில் இருந்துவிட்டுத் திரும்புகின்றேன்." இதுவே சங்கரர் சொன்னது. மற்ற சீடர்கள் ஒப்புக்கொள்ள பத்மபாதர் மட்டும் இது சரியெனச் சொல்லவில்லை. "மக்கள் தவறாய்ப் பேசுவார்களே?" என்று கவலைப்பட, "ஆத்மாவைக் காம உணர்வுகள் தாக்காது, பத்மபாதா!" என்றார் குரு. மேலும் சொன்னார்:"இது எனக்குத் தனிப்பட்ட சோதனையாகக் கொள்ளக் கூடாது. சத்தியத்துக்கு நேர்ந்த சோதனை என்றே கொள்ளவேண்டும். மனிதப் பிறவி எடுத்தால் மனிதர்களுக்கு நேரும் அத்தனை சங்கடங்களையும் அனுபவித்தே தீரவேண்டும்." என்று சொல்ல,பின்னர் தன் உடலைப் பத்திரமாய் ஒரு குகைக்குள் வைக்கச் சொல்லிவிட்டுக் கீழே படுத்தார். யோக முறைப்படித் தன் கால் பெருவிரலில் இருந்து உயிரை மேலே வாங்கித் தன் உச்சந்தலை வழியே வெளிக்கொண்டுவந்து மன்னன் உடலில் புகுந்தார். அந்த மாண்ட மன்னன் உடலில் இந்த உலகை ஆண்ட குருவின் உயிர். மாண்டவன் ஆண்டவனாகி மீண்டு வந்தான். தன் உடலை ஒரு முறை பார்த்துவிட்டுச் சங்கரராகிய மன்னன் உடல் நாட்டை நோக்கி நடந்தது. வழியில் மன்னனைத் தேடிக் கொண்டு வந்த அவன் பரிவாரங்கள் மன்னனை வழியிலேயே கண்டனர். "மன்னன் அமருகன் வாழ்க! வாழ்க!" கோஷம் எழுந்தது. மன்னனை மகிழ்விக்க மதுபானம் நிரம்பிய கோப்பையும், அந்தப் புரப் பெண்களும் வந்தனர். சங்கரராகிய மன்னன் பார்த்தார். மன்னனிடமிருந்து தோன்றிய ஒரு புது ஒளி அவர்கள் கண்ணிலிருந்து உள்ளத்துள்ளும் சென்றது.

Wednesday, May 7, 2008

குதிரையாய் வந்த குருவும், குதிரைக்காக வந்த குருவும்!

குதிரையாய் வந்த குரு யார்?
குதிரைக்காக வந்த குரு யார்??

யார் யார், யாருன்னு சொல்லுங்களேன்! அவர்களை வணங்கி அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகளைத் துவங்குகிறேன்!

இங்கு ஏற்கனவே நற்பதிவுகளை அள்ளித் தரும்
திராச ஐயா, கீதாம்மா, மெளலி அண்ணா - இவர்களும் அடியேனுக்கு ஒரு வகையில் குரு ஸ்தானம் தான்!
அதனால் இவர்களையும் அடி வணங்கியே இப்பதிவுகளைத் துவக்குகிறேன்!

இன்று சித்திரைத் திருவாதிரை - ஆதி சங்கர பகவத் பாதர் மற்றும் உடையவர் இராமானுசர் - இரு பெரும் ஆசார்யர்களின் திருவவதாரத் திருநாள் (ஜெயந்தி) - (May 8th, 2008)
இன்று பார்த்து அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகள் துவங்க வேண்டும் என்பதும் ஆசார்யர்களின் திருவுள்ளம் போலும்!



தமிழ் முனிவன் திருவள்ளுவனும் ஒரு பேராசான் - பரம ஆசார்யன் தான்!
திருக்குறள் கடவுள் வாழ்த்தில், கடைசிக் குறட்பா, ஆசான்-ஆசார்யனைக் குறிக்கும் என்பது நூலோர் கருத்து!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



மீன்களைத் தண்ணீரில் போட்டா அவை தானா நீந்தும்! ஆனால் குழந்தைகள்? மனிதர்கள்?
ஆக...பிறவிப் பெருங்கடல் நீந்தனும்-னா, முதலில் நீந்தத் தெரியனும்!
மீனுக்குத் தானா நீந்தத் தெரியும்! ஆனால் மனிதனுக்குத் தானா நீந்தத் தெரியாது! - அவனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கணும்!

அப்படி நீந்தக் கற்றுக் கொடுப்பவனே ஆசான்-ஆசார்யன் என்பது வள்ளுவர் சொல்லாமல் சொல்லிக் காட்டும் உள்ளுறை உவமம்!
ஆசார்யன் சொல்லிக் கொடுத்து, இறைவனடி உணர்பவர்கள், பிறவிக் கடலை நீந்துவார்கள், நீந்தி இறைவன் "அடி" சேர்வார்கள் என்பதையே ஐயன் வள்ளுவன் குறிப்பால் காட்டுவதாக வியாக்யானம்!

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் அல்லவா?



இப்போ எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்!

இவர் குதிரைக்காக வந்த குரு! - எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

கெளரிகாம்பாள் உடனுறை தட்சிணாமூர்த்தி - காணற்கு அரிய இந்த தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி கோலத்தைச் சென்னைக்கு அடுத்த சுருட்டப்பள்ளியில் காணலாம்! (இன்னொரு காணற்கு அரியதான சயனக்கோலச் சிவபெருமானும் இதே ஊரில் தான்!)
குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

குரவே சர்வ லோகானாம் = அனைத்துலகங்களுக்கும் குருவே
பீஷஜே பவ ரோகினாம் = பவ ரோகங்களான அஞ்ஞான நோய்களுக்கு விஞ்ஞான-மெய்ஞான மருந்தே
நிதயே சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் நிதிப் புதையலே
தக்ஷிணா மூர்த்தயே நமஹ! = தென்னமர் செல்வா! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்!



இவர் குதிரையாய் வந்த குரு! - இதையும் எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

ஹயக்ரீவர் = ஹயம்+க்ரீவம் = குதிரை+கழுத்து
எப்படிச் சிவபெருமானின் குரு வடிவம் தட்சிணாமூர்த்தியோ, அவ்வண்ணமே பெருமாளின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி! அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!

சரஸ்வதீ தேவியின் ஆதி குரு! அகத்தியனுக்கும் ஆசானாய் இருந்தவர்! சமண-பெளத்தங்களிலும் இவர் பேசப்படுகிறார்! பின்னொரு நாள் விரித்துச் சொல்லலாம்! இன்று வணங்கி மகிழலாம்!
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!


ஞான ஆனந்த மயம் = ஞானம், அதே சமயம் ஆனந்தம்! = ஞான காரணமாகவும் - அந்த ஞானத்தால் விளையும் ஆனந்த காரியமாகவும் இருப்பவனே!
தேவம் = இப்படிக் காரணமாகவும் காரியமாகவும் இருக்கும் இறைவா!
நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம் = மாசில்லா மணியே! ஸ்படிகம் போல் நிறம்/குணம்/குறைகளை எல்லாம் கடந்தவனே!

ஆதாரம் சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் ஆதாரம் நீ!
ஹயக்ரீவம் = அயமுகப் பெருமாளே! ஹயக்ரீவா!
உபாஸ்மஹே = உன்னை உபாசிக்கிறேன் (வணங்கிக் கொண்டே இருக்கிறேன்)


சிந்தனைக்கு ஒரு தீபம்: எல்லாம் சரி! ஏன் ஞான வடிவ இறைவன், சைவம்/வைணவம் இரண்டிலும் குதிரை தொடர்போடு வர வேண்டும்? குதிரைக்கு அப்படி என்ன விசேடம்? யோசித்துப் பாருங்கள்! :-)
(பதிலை மதுரையம்பதிப் பெருமானிடமோ இல்லை கூடலம்பதிப் பெருமானிடமோ பெற்றுக் கொள்ளலாம்! :-)