Wednesday, August 27, 2008

வெள்ளைக் குதிரையாக வந்தது யார்??? வாதிராஜர் தொடர்ச்சி

ஸ்ரீவாதிராஜர் மடத்தின் அதிபதியாக ஆன சமயம். ஸ்ரீமடத்தை ஒட்டி, தனியார் ஒருவரின் நிலம் மிக மிகப் பெரிய பரந்த நிலம், இருந்தது. அதன் உரிமையாளர் நிலத்தில் கடலையை விதைத்திருந்தார். கடலையும் செழிப்பாய் வளர்ந்திருந்தது. பயிர்கள் இன்னும் சிறிது காலம் போனால் கடலையை எடுக்கலாம் என்ற நிலைமை. தினம்போல் அன்றும் நிலத்துச் சொந்தக் காரர் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்ல வந்திருந்தார். அப்போது அங்கே ஒரு பகுதியில் பயிர்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப் பட்டது. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறுநாளும் சென்று பார்க்க, மீண்டும் அதே மாதிரியாக, இன்னும் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப் பட்டது. “ஆஹா, யாரோ வந்து திருடித் தின்கின்றனர், அல்லது எடுத்துச் செல்கின்றனர்.” என்று எண்ணிய நிலத்துக் காரர் அன்று இரவு எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணியவராய், இரவு நேரம் நிலத்திலேயே ஒரு பக்கம் மறைவாய்க் காத்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் ஸ்ரீமடத்தில் இருந்து கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்தோடு ஒரு குதிரை ஒன்று வந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப் படுத்தியது. தாங்க மாட்டாக் கோபத்தோடு நில உரிமையாளர் ஓடிப் போய் அந்தக் குதிரையை விரட்டினார்.
குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஸ்ரீ மடத்தினுள் புகுந்து கொண்டது. சரி, இங்கே தானே இருக்கப் போகின்றது, பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினார் நிலத்துக் காரர். மறுநாள் நேரே ஸ்ரீ வாதிராஜரிடம் சென்றார். நடந்தவற்றை அப்படியே விவரித்தார். இது என்ன நியாயமா? என்று நியாயமும் கேட்டார். ஆனால் வாதிராஜரோ மறுக்கின்றார். ஸ்ரீ மடத்திற்கு எனச் சொந்தமாய்க் குதிரையே கிடையாது என்றும், நிலத்துக்காரர் சொல்லுவது உண்மையாக இருக்குமா என்றும் சந்தேகப் படுகின்றார். நிலத்துக் காரரோ அடித்துச் சொல்கின்றார். தான் தன்னிரு கண்களால் நடந்தவற்றைப் பார்த்ததாய். எனினும் மீண்டும் அன்று இரவும் பார்க்கப் போவதாயும், அதன் பின்னர் மீண்டும் வாதிராஜரை மறுநாள் வந்து பார்ப்பதாயும் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

அன்று இரவு. மீண்டும் நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகே மறைந்திருந்து காவல் காக்க, மீண்டும் அதே வெள்ளைக் குதிரை மடத்தில் இருந்து வெளியே வந்து வழக்கம்போல் நிலத்திற்குள் நுழைந்து, பயிர்களைச் சேதப் படுத்தத் தொடங்கியது. கடலைச் செடிகள் மிதிபட்டன, தின்றது போக மற்றவை சேதம் ஆயின. பின்பு எப்படி வந்ததோ அது போலவே மடத்தினுள் நுழைந்து மறைந்தது. நிலத்துக் காரர் குதிரையைத் துரத்திக் கொண்டு வந்தவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. சாதாரணக் குதிரைக்கே வேகம் அதிகம். இது சாதாரணக் குதிரை அல்லவே. அசாதாரண வேகத்துடன் ஓடி மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் வாதிராஜரின் முன்னிலையில் வந்து நின்றார் உரிமையாளர். “ஸ்வாமி, இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது எனக்கு. என் இரு கண்களால் நன்றாய்க் கண்டு விட்டேன். வெள்ளைக் குதிரை ஸ்ரீமடத்தில் இருந்தே வெளியே வந்து என் நிலத்தினுள் புகுந்து கடலைச் செடிகளைத் தின்றுவிட்டு சேதமும் பண்ணிவிட்டு, ஓடி மறைந்துவிட்டது.” என்று சொல்கின்றார். வாதிராஜரோ திகைப்புடன் ஸ்ரீ மடத்தில் குதிரையே கிடையாது, ஆனால் இவர் இப்படிச் சொல்லுகின்றாரே என்றார்.


ஆனால் நிலத்துச் சொந்தக் காரரோ, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஏற்கெனவேயே நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டதாயும், குதிரையை அடக்காவிட்டால் மேலும் ஏற்படும் இழப்பைத் தன்னால் தாங்க முடியாது எனவும் சொல்லுகின்றார். வாதிராஜர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இழப்பைத் தானே ஈடு செய்வதாயும், இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்லுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றார். ஆனாலும் ஸ்ரீமடத்தில் குதிரையே கிடையாது என்பதை வலியுறுத்தவும் தவறவில்லை அவர். நிலக்காரர் ஒருமாதிரியாக நஷ்ட ஈடு கிடைக்குமே என்று ஆறுதலுடன் சென்றார். மீண்டும் நிலத்தை மதிப்பீடு செய்யச் சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். ஓடோடி வந்தார் வாதிராஜரிடம். “ஸ்வாமி, ஸ்வாமி, இது என்ன அதிசயம்?? ஒரே மாயாஜாலமாக அல்லவா இருக்கின்றது. எங்கெங்கே சேதங்கள் ஏற்பட்டனவோ அந்த இடத்தில் எல்லாம் தங்கக் கடலைகள். ஸ்வாமி, அந்தக் குதிரை சாதாரணமானதல்ல. தெய்வீகக் குதிரை. தாங்களே வந்து பாருங்கள் அந்த அதிசயத்தை!” என்று பரவசத்துடன் கூறுகின்றார்.

இப்போத் தான் கவனிச்சேன், இது 50-வது பதிவு என்று.

50-வது பதிவு

6 comments:

Kavinaya said...

ம்... அப்புறம்?

மெளலி (மதுரையம்பதி) said...

கதை நன்றாக போகிறது கீதாம்மா...:)

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..கதை என்னவோ நல்லாதான் இருக்கு.
என்னடா "அடுத்த பதிவு நீயா நானா" போட்டின்னு பாத்தேன். 50 வது பதிவு என்கிறதுதான் காரணமா? சரி சரி....

பிஎஸ்: இதுக்குத்தான் பின்னூட்ட கயமைத்தனம் என்கிறதோ? இ.கொ வை கேக்கணும்.

Geetha Sambasivam said...

@kavinaya, varum, konjam porunga,
@Maduraiyampathi, enna sirippu?? puriyalai! :P
@Thiva, enakku theriyalai, இ.கொ.வையே கேளுங்க, :P

மெளலி (மதுரையம்பதி) said...

கதை அப்படின்னு சொன்னதுக்காக சிரித்துக் கொண்டேன்...வேறொன்றுமில்லை

குமரன் (Kumaran) said...

அருமை. ஐம்பதாவது இடுகையில் தங்கக் கடலைகளா? பொருத்தம் தான். :-)