Showing posts with label krs. Show all posts
Showing posts with label krs. Show all posts

Monday, February 9, 2009

யார் ஜகத்குரு? - கூரத்தாழ்வான் கலக்கம்!

கடந்த சில வாரங்களாக, பரவஸ்து சுந்தர் அண்ணா அவர்கள்,
கூரத்தாழ்வானின் 1000வது பிறந்தநாள் வைபவங்களை ஒட்டி,
ஆழ்வானின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர் இடுகைகளாக இட்டு வந்தார்கள்! நான்கு பகுதிகளாக வந்த தொடர் நிறைவுற்றது!

இந்த கைங்கர்யத்துக்கு, அண்ணாருக்கு நம் வாழ்த்தையும் வணக்கங்களையும், இவ்வமயத்தில் சொல்லிக் கொண்டு,
சுந்தர் அண்ணா எழுதி அருளிய இத்தொடரினை, இ-புத்தகமாக,
ஸ்ரீயப்பதியான எம்பெருமான் - பெருந்தேவித் தாயார் உடனுறை பேரருளாளன், காஞ்சி வரதனின் திருவடிகளில் சமர்பிக்கின்றோம்! இதோ புத்தகம்!

Kuresa Vaibhavam



இது வரை கூரேசர் பற்றி வந்துள்ள பதிவுகள் இதோ:

1. ஷைலஜா அக்கா எழுதிய, கூரேசன் சீர் கேளீரோ!

2. KRS, கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்தநாள்

3. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1
குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2

4. கைலாஷி ஐயா எழுதிய, கண் கொடுத்த கூரேசர்

5. பரவஸ்து சுந்தர் அண்ணா எழுதிய, கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் (1-4)

இன்னும் வைபவப் பதிவுகள் நன்முறையில் வளர்ந்து,
ஆசார்ய மணம் பரப்ப, ஆசார்யர்கள் கிருபையையே முன்னிடுகிறோம்!

ஸ்ரீவத்சசிஹ்ந மிஸ்ரேப்யோ, நம உக்திமதீமஹே!
யதுக்தய ஸ்த்ரயீகண்டே, யாந்தி மங்கள ஸூத்ரதாம்!!

(கூரத்தாழ்வாரின் தனியன்)


ஜகத்குரு-அணுக்க சீடர், சேர்த்தி சேவை!


திருவரங்கம், வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் - போதாதா வாக்குவாதம் தோன்ற? :) இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்! அதனால் தவறில்லை!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம்,
கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது! - யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்! சரி வம்பே வேணாம்! ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - கீதாசார்யன் - அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...

கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்! கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!


"மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குரு? அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே! கீதையே நேரில் கேட்டவனுக்கே இந்தக் கதி!

ஆனால் நம் இராமானுசர், நம் அத்தனை பேரையும், கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா? இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்! கண்ணனிடமா அவை இருக்கின்றன?

இதில் இருந்தே தெரியவில்லையா? யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா? அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன், காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"

அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்! இவர் காவிரியில் நடக்கத் துணிந்த கதை அப்படியே பத்ம்பாதர் கதை போலவே இருக்கல்லவா?
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க, "ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!

"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!

அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "

இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!


இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்! ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??

கூரத்தாழ்வார்-இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!

Wednesday, January 28, 2009

ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும் விடக் கூடாதா?

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் அடியேன் எப்பமே ஊறிக் கிடந்தாலும்,
சில பல "புரிதல்கள்" காரணமாக,
"ஆச்சார்ய ஹ்ருதயம் என்னும் வலைப்பூவில்" பதிவுகள் இடுவதை நிறுத்தி வைத்திருந்தேன்!

ஆனால் பெரியவர் திராச ஐயா, ஒரு கிருத்திகை தினத்தன்று, முருகனருள் வலைப்பூவில் திடீரென்று ஆக்ஞாபித்தார்! - "கேஆரெஸ், மீண்டும் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் எழுதத் துவங்குங்கள்"!

இதோ, அவர் மார்கழியில் இட்ட இந்தப் பதிவினையே எடுத்துக் கொண்டு மீண்டும் துவங்குகிறேன்!


ஆச்சாரம் என்றால் என்ன?
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்! ஆச்சாரம் = ஒழுக்கம்!

சரிங்க, அப்போ, ஒழுக்கம்-ன்னா என்ன?
* "ஒழுங்கா" நான் சொல்லுறதைக் கேள்!
* "ஒழுங்கா" என் பேச்சுப்படி நட!
* "ஒழுங்காப்" பேசு!
* "ஒழுங்கா" எழுது!
- இதெல்லாமா ஒழுக்கம்?

"ஒழுகுதல்"-ன்னு வேற இதைச் சொல்றாங்க? வீட்டுக் கூரையில் இருந்து மழைத்தண்ணி ஒழுகுதலா? ஹா ஹா ஹா! :)

தமிழில் இருக்கும் அழகான காரணப் பெயர்களில், மிக மிக அழகானது, இந்த "ஒழுக்கம்"!
ஒழுகு = நட, கடைப்பிடி, குணம் (ஆற்றொழுக்கு-நீரோட்டம் போல போய்க்கொண்டே இருப்பது!)

* உயர்வான ஒன்றைக் குறித்துக் கொண்டு, அதில் ஒழுகுவதே ஒழுக்கம்!
* உயர்வான ஒன்றைப் பற்றி, "பேச மட்டும் செய்யாது, அதைக் கடைப்பிடிப்பதே" = ஒழுக்கம்! ஆச்சாரம்!


ஒழுக்கம்-ன்னா என்ன-ன்னு ஐயன் என்ன சொல்றாரு?
ஒழுக்கம் விழுப்பம் தரலான்! ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்!

* பெரியதை (விழுப்பம்) தருவது = ஒழுக்கம்!
* அதனால் ஒழுக்கம் உயிரை விட கடைப்பிடிக்கப்படும்! ஆச்சாரத்தை (ஒழுக்கத்தை) கடைப்பிடித்தே ஆகணும்-ன்னு வள்ளுவரே சொல்றாரு! :)


ஓ...பெரியதைத் தருவது தான் ஒழுக்கமா?
அப்போ எது பெரியது? = கடவுள் தான் பெரியது! இதில் என்ன சந்தேகம்?
எனவே கடவுள் பூசை எல்லாம் "ஒழுங்கா" கடைப்பிடிச்சே ஆகணும்! "எக்காரணம்" கொண்டும் ஒழுக்கம்=ஆச்சாரம் விட்டுறக் கூடாது! சரி தானே?

ஹிஹி! சரி தான்! ஆனால் பொறுமை! பொறுமை!
ஞானம் பற்றிப் பேசினா மட்டும் போதாது! அனுஷ்டானமும் ரொம்ப ரொம்ப முக்கியம்! ஆத்மார்த்தமான அனுஷ்டானம்!
ஞானம், அனுஷ்டானம் ரெண்டுமே வேண்டும்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தானே ஒழுக்கம்? இப்போ எது பெரியது-க்கு வருவோம்! எது பெரியது?
என் அப்பனும் சுப்பனும் ஆன முருகப் பெருமான், இதே கேள்வியைத் தான் கேட்கிறான்! - "ஒளவையே, எது பெரியது?"

பெரியது கேட்கும் எரி தவழ் வேலோய்!-ன்னு வரிசையா லிஸ்ட் போடுகிறாள் தமிழ் மூதாட்டி!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு!
...
...
புவியோ அரவுக்கு ஒரு தலைப் பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
...
...
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்!
இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்போ சொல்லுங்க! எது பெரிது? கடவுள் பெரிதா? ஆமாம்! இல்லை-ன்னு சொல்லலை! கடவுள் = "பெரிது"! ஆனால் தொண்டர் = "பெரிதே"!!!

* கடவுள் = பெரி"து"!
* ஆனால், அடியார்களை கடவுளுக்கு ஆட்படுத்துதல் = பெரி"தே"!

இப்போ எல்லாத்தையும் ஒவ்வொன்னாக் கோர்த்துப் படிங்க!
* பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் (ஆச்சாரம்)! ஒழுக்கம் விழுப்பம் தரலான்!
* அடியார்கள் தான் "பெரிதே"!
* ஆக, அடியார்கள் என்னும் பெரிதைத் தருவது எதுவோ, அதுவே ஒழுக்கம் (ஆச்சாரம்)!

நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது! ஞானம்,அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும்! ஆனால்...ஆனால்....
* நித்ய கர்மாக்கள் = ஆச்சாரம்!
* அடியார்கள் = ஆச்சார-ஆச்சாரம்! சதாச்சாரம்!
நேயம் "சத்ஜன" சங்கே சித்தம் என்றார் ஜகத்குரு ஆதிசங்கரர்! அவர் வழி வந்தவர் அல்லவா காஞ்சி மாமுனிகள்! அவர் எப்படி இருப்பார்? ஆச்சாரத்தை விடுவாரா?

ஹிஹி! காஞ்சி மாமுனிகளா? ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
*** அடியவர்கள்=ஆச்சாரம்! - இந்த அடியவர் என்னும் ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
இனி திராச ஐயா இதைப் பற்றிப் பேசுவார்! அவர் இட்ட பழைய பதிவு இதோ! படிப்போம்! ஒழுகுவோம்!


மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை.
வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம். பேசமாட்டார்கள்.
வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.

வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.

ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார்.

சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று.
மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.

அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது .

நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது.
அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.

இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்.
அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""

இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள் - காஞ்சி மாமுனியின் கருணை!


காஞ்சி முனிகளை விடவா நாம் ஆச்சாரத்தில் விற்பன்னர்கள்?
அவர் ஹ்ருதயம் = ஆச்சார்ய ஹ்ருதயம்!
அவர் ஹ்ருதயம் = அடியவர் ஹ்ருதயம்!


நமக்குள் ஆயிரம் ஒழுக்க வேறுபாடுகள், அனுஷ்டான வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! ஆனால் ஹ்ருதயத்தில் அடியவர் வெறுப்பு என்பது மட்டும் கூடவே கூடாது! அது "ஆச்சாரம்" ஆகாது!

ஒழுக்கம் = விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தான் ஒழுக்கம்!
அடியார்கள் என்னும் பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் = ஆச்சாரம்!
இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பித்துக் கொள்வோம்!
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள் திருவடிகளே சரணம்!
நாராயண! நாராயண!

Thursday, September 11, 2008

குரு பரம்பரை சுலோகங்கள்!

குரு பரம்பரை-ன்னா என்னா? எல்லாருக்கும் தெரிந்திருக்கும்!
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள்!

எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படி கால் தொடங்கி...வந்து வழி வழி ஆட்கொண்டு அருளும் குரு பரம்பரை!
அந்த குரு பரம்பரை சுலோகங்களை இன்று தியானிப்போம்!


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
நீங்களும் இரண்டு சுலோகங்களையும் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த சுலோகங்கள் திருமடங்களில் சொல்லப்படுகிறதா என்ற மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

பிகு:
ஒவ்வொரு வியாழனும் பதிவைத் தவற விட வேண்டாம் என்று மெளலி அண்ணா ஒரு முறை பேசும் போது சொன்ன ஞாபகம்!
கீதாம்மா வாதிராஜர் தொடரைப் போடுகிறார்கள்; ஹயக்ரீவ ஜெயந்தியான நாளைக்கு அவர்கள் பதிவை நிறுத்தி வைத்துள்ளார்கள்! அதான் இந்த Filler Post!

Wednesday, August 6, 2008

ஜலஸ்தம்பம்! செய்ய முடியுமா உம்மால்???

இன்னிக்கி ஒரே ஒரு சின்னக் கதை மட்டுமே!

இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்! இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!"என்ன இராமகிருஷ்ணரே...உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!
காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற நினைப்பா? அதுக்கெல்லாம் ஞானம் கைகூடணும், யோகம் செய்யணும்! ஆத்ம விசாரம் செய்யணும்! இதெல்லாம் ஞானிகளால் மட்டுமே முடியும்! என்றைக்கு இருந்தாலும் பூஜாரி பூஜாரி தான்! ஞானி ஞானி தான்!"
(சிரிப்பு)

"என்ன சிரிக்கிறீர்? உம்ம பின்னாடி சின்னூண்டு சிஷ்யக் கூட்டம் தான் இருக்கு! அப்புறம், நீங்க என்ன ஒரு பெரிய ஆச்சார்யர்?"

(சிரிப்பு)
"நான் ஆச்சார்யன் அல்ல மகாஞானியே! வெறும் ஆச்சர்யன்!
இறைவன் உண்டாக்கிய பல ஆச்சர்யங்களில், அடியேனும் ஒரு ஆச்சர்யம்! அவ்வளவு தான்!"

"இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடினால், நான் மயங்கி விடுவேன் என்று நினைத்தீரா? வார்த்தை எவனும் விளையாடுவான்! சித்து விளையாடத் தெரியுமா உமக்கு?"

"தெரியாது ஐயா!"

"இவ்வளவு நாள் என்ன தான் பண்ணிக்கிட்டு இருந்தீர்? உம்மையும் ஏமாற்றிக் கொண்டு, உம்ம சீடர்களையும் ஏமாற்றிக் கொண்டு...என்ன தான் பெருசா சாதிச்சீர்?"

"எதுவும் சாதிக்கலை ஐயா! அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!"

"இது ஒரு பூஜாரி வேலை! ஒரு ஆச்சார்யன் வேலை அல்ல!"

"ஓ....."
"எல்லாரும் சொல்வது போல், உம்மிடம் பல சித்திகள் இருக்கும் என்று நினைத்துத் தான் வந்தேன்! ஆனால் நீரே மாணவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறீர் போலும்! நல்ல வேடிக்கை! நான் வருகிறேன்! இனியாவது திருந்துங்கள்! ஆத்ம ஞானத்தைத் தேடப் பாருங்கள்"

"ஞானியே! ஒரு நிமிடம்! என்னைப் பல கேள்விகள் கேட்டீர்கள்! இது தெரியுமா? அது தெரியுமா? என்றெல்லாம் கேட்டீர்கள்.....சரி, எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! நீங்கள் இத்தனை நாள் யோகத்தில் அடைந்த சாதனையை, அடியேனுக்குச் சொல்லிவிட்டுச் செல்லுங்களேன்! உங்களையே முன் மாதிரியாக வைத்து நானும் கடைத்தேறப் பார்க்கிறேன்!"

"ஹா ஹா ஹா...சரி கேளும்...
பல ஆண்டுகள் இமய மலைச் சாரலில் தவம் இருந்த தப்ஸ்வி நான்! பல சித்தர்களை, அவர்கள் உலாவும் குறிப்புகளை நேரடியாகப் பார்த்து இருக்கேன்! என் யோகத்தின் பயன் என்ன தெரியுமா? - ஜலஸ்தம்பம்!"


"அப்படின்னா என்ன ஞானியே?"

"ஆகா...இது கூடத் தெரியாதா?
பரமஹம்சர் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் உமக்கு இது கூடத் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்! நான் சொன்னது சித்த புருஷ லட்சணம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தி! அணிமா, கரிமா, மகிமா, லகிமா என்று பல சித்திகள்! அதில், ஜலஸ்தம்பம் என்பது ஜலத்தின் மேலே நடப்பது!நான் நீர் மேலேயே நடப்பேன் இராமகிருஷ்ணரே! தெரியுமா உமக்கு? அதுக்கெல்லாம் சித்தி அருளப் பெற்று இருக்கணும்! தவம் ஐயா தவம்!"

(இராமகிருஷ்ணர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்...குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்...ஞானிக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருகிறது...)

"உமக்கே கேவலமாக இல்லை? இப்படிச் சிரிக்கிறீர்களே? நான் சபித்தால் என்ன ஆவீர் தெரியுமா?"

"அச்சோ! மன்னியுங்கள் மகா ஞானியே! நான் உங்களை இழிவுபடுத்த நினைக்கவில்லை! என்னையும் மீறி, என் காளி சிரித்து விட்டாள்...
கொஞ்சம் பொறுங்கள்...அவள் என்னை ஏதோ சொல்லச் சொல்கிறாள்...உங்களுக்குச் சொல்லச் சொல்கிறாள்...சொல்கிறேன்!
...
...
ஏன்பா...ஓடக்காரா...ஹூக்ளி ஆற்றைத் தாண்டிப் போகனும்! எவ்ளோ-ப்பா?"

"பத்து பைசா சாமீ! நீங்க பாக்க சாமீ மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்! பரவாயில்ல, சும்மாவே படகுல குந்திக்குங்க! காசு வேணாம்!"

"பார்த்தீங்களா ஞானியே! ஒரு பத்து பைசா கொடுத்தா, இவனே "ஜலஸ்தம்பம்" பண்ணிடுவானே! ஹா ஹா ஹா!"
(ஞானி திடுக்கிடுகிறார்...)



"இதுக்கு நீங்க...இத்தனை வருஷம் பிரயாசைப்பட்டு, யோகப்பட்டு, தவப்பட்டு, அணிமா, மகிமா, கரிமா, லகிமா-ன்னு பல மாக்களை எல்லாம் சாதனை பண்ணி...கடைசீல உங்க யோகத்தின் மதிப்பு வெறும் பத்து பைசா தானா?"

(ஞானிக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.....)

"உங்க ஜலஸ்தம்பத்தால் யாருக்கென்ன லாபம், சொல்ல முடியுமா? இத்தனை மக்களும் ஆற்றைக் கடக்க உம்ம "ஜலஸ்தம்பம்" உதவுமா?"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னு எங்கே பிரமாணம் ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்களேன்"

"சித்த நூல்களில் எல்லாம் உள்ளது இராமகிருஷ்ணரே! யோக ரகஸ்யங்களில் அதுவும் ஒன்னு! யோகத்தைக் கேவலமாக மட்டம் தட்டி விட்டீரே, உம்ம வார்த்தை விளையாட்டால்! ச்சே!"

"சித்த நூல்கள், யோக ரகஸ்யம் இதெல்லாம் அற்புதமானது ஞானியே! அடியேன் அதை மட்டம் தட்டவில்லை! நான் வார்த்தை விளையாடவும் இல்லை!
என் வார்த்தையின் உண்மை, உங்கள் மனத்தில் விளையாடி விட்டது! அதான் வார்த்தை+விளையாட்டு!"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னா என்ன? சித்த புருஷர்கள் ஆற்றின் ஜலத்தையா ஸ்தம்பம் செய்யச் சொன்னார்கள்?ஹா ஹா ஹா!
சம்சார ஜலம் = பிறவிக் கடல் = அதை உம்மால் ஸ்தம்பம் செய்ய முடியுமா?

சம்சார ஜலஸ்தம்பம்! செய்வீரா? சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! பகவத் சரணார விந்தம்! அதைச் சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! திருவடி ஓடம்! அதில் பயணித்து இருக்கீரா?"

(ஸ்தம்பம் செய்த ஞானி இப்போ ஸ்தம்பித்து நிற்கிறார்)

"இவ்வளவு நாட்கள் ஆன்மீக வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று என்னைச் சொன்னீர்களே, மஹாப்ரபு! ஆனால் ஜலஸ்தம்பம் என்றால் என்ன என்றே தெரியாமல், ஏதோ பைசா பெறாத ஒன்றை ஜலஸ்தம்பம் செய்யத் தெரிந்து கொண்டதாக நினைத்து இப்படி ஏமாந்து விட்டீர்களே? மகாஞானியே!"

(ஞானி, இராமகிருஷ்ணரின் காலடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார்! நாமும் வீழ்வோம்!)



புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல், மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு! என்று இருக்கும் நாமும்.....
பரமஹம்சர் காலடியில் வீழ்வோம்! பரம ஹம்சம் பெறுவோம்!

மனம் என்னும் தோணி பற்றி, "மதி" என்னும் கோலை ஊன்றி,
சினம் என்னும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மனன் என்னும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணாது,
"உனை" எண்ணும் உணர்வை நல்காய்! ஒற்றியூர் உடைய கோவே!

திருச்சிற்றம்பலம்!

Wednesday, July 2, 2008

அப்பைய்ய தீட்சிதரும், கருப்பண்ண சாமியும்!

* சிறு வயதிலேயே, ஆதிசங்கரரைப் போல், சகல சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, அபர சங்கராச்சாரியார் என்று பெயர் பெற்றவர் யார்?
* ஆதிசங்கரருக்குப் பின் அத்வைத நெறியைத் தூக்கி நிறுத்திய மகான் யார்?
* கோட்பாடுகள் பேதமின்றி, துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் விளக்கம் எழுதிய அறிஞர் யார்?
* சிவபிரான் மேல் ஆறாக் காதல் கொண்டாலும், வேதத்தில் சொல்லப்படும் பரத்துவம் நாராயணன் என்று சொன்ன மகாகுரு யார்?

அத்தனைக்கும் ஒரே பதில்! = அப்பைய்ய தீட்சிதர்!
தீட்சிதேந்திரன் என்று போற்றப்படுவது இவர் ஒருவரே!



எங்க வடார்க்காடு மாவட்டம், ஆரணி அருகே உள்ள அடையப்பாளையம் தான் தீட்சிதரின் திருஅவதாரத் தலம்! 1554 AD-இல் அவதாரம்!
திரிவிரிஞ்சிபுரம் மரகதவல்லி சமேத மார்க்கசகாய ஈஸ்வரர் அருளால், பாரத்வாஜ கோத்திரத்தில், ரங்கராஜத்வாரி என்பவருக்குப் பிள்ளையாய் அவதரித்தார் அப்பைய்யர். இயற்பெயர் விநாயக சுப்ரமணியம்!

இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர், வேலூர் மன்னன் சின்ன பொம்முவின் வேண்டுகோளை ஏற்று அரசவைப் பண்டிதராக விளங்கினார்!
ஆனால் அங்கே இருந்த ஒரு திவானால் அவருக்கு இள வயதிலேயே பல சோதனைகள்!

தாதாச்சாரி என்ற அந்தத் திவான் வைணவப் பித்து தலைக்கேறியவன்!
பித்தா பிறை சூடியை அவன் மதப்பித்து மறைப்பித்து விடுமா என்ன?
ஆனால் மதம் என்னும் பேய் பிடித்தவரைப் பக்குவமாய்ச் சமயத்தில் சமைக்க, இறைவன் திருவருள் கனிய வேண்டும் அல்லவா?



அப்பைய்யர், காஞ்சி காமாட்சியம்மன் அருளால், மங்களாம்பிகை என்ற மங்கை நல்லாளை மணந்து கொண்டு, இல்லறத்தில் தர்மம் கண்டார்!
சங்கரர் துறவற தர்மம்! அவர் அடியொற்றிய அப்பைய்யர் இல்லற தர்மம்!

அப்பைய்யர் காஞ்சிபுரத்தில் செய்த சோம, வாஜபேய யக்ஞங்கள், அதில் தரப்பட்டதாகச் சொல்லப்படும் மிருகபலி குறித்து...சில சர்ச்சைகள் நிலவுகின்றன! அதனால் அவற்றைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்போம்!
மன்னன் சின்னபொம்மு அப்பைய்யரை வெகுவாக ஆதரித்து வந்தான். அப்பைய்யரின் பூரண ஞானமும் பக்தியும் கண்டு பொறாமை கொண்டார் தாதாச்சாரி!

வெறுமனே பொறாமை கூட காலியான பணப்பை போலத் தான்! அது பரவாயில்லை! ஆனால் பக்தியில் பொறாமை என்பது பொக்கிஷம் உள்ள பணப்பைத் திருட்டு அல்லவா? அதற்குத் தண்டனையும் அதிகம் தானே!
இதை அந்த வைணவன் உணர்ந்தானில்லை! தான் வணங்கும் பெருமாள் பிரசாதத்தையே கலப்படம் செய்யத் திட்டம் போட்டான்! பக்தியில் பொறாமை காண்பது பகவானையே மறக்கச் செய்து விடுகிறது, பாருங்கள்!

பெருமாள் தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து, அப்பைய்யருக்கு அளிக்க ஏற்பாடு செய்தான்! குற்றமுள்ள நெஞ்சு...விஷ தீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. இதைத் தீட்சிதேந்திரர் கவனித்து விட்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார்.

ஆயினும், பெருமாள் பிரசாதத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். நஞ்சு உண்டு அருளிய நஞ்சுண்டேஸ்வரனைத் தியானித்தார் அப்பைய்யர்!
ஆலகால விஷத்தின் போது, பெருமாளும் பெருமானும் அருகருகே அல்லவா இருந்தார்கள்! அவர்கள் இருவரின் அருளும் ஒருசேரப் பெற்ற அப்பைய்யரை நஞ்சும் தீண்டுமோ?
அவர் நலமாக இருப்பதைக் கண்டு தாதாசாரியர் வெறுப்பு இன்னும் அதிகமாகத் தான் ஆகியது.


மன்னன் சின்னபொம்முவிடம் கோள் சொல்லி மனதைக் கலைத்தார் தாதாச்சாரி!
"உங்களை எப்போதும் இடது கரத்தால் தான் அப்பைய்யர் ஆசீர்வாதம் செய்கிறார்! இது நாட்டின் மன்னனையே அவமரியாதை செய்வது போல" என்று போட்டுக் கொடுத்தார்! மன்னனும் விசயம் அறியாமல், அய்யரிடம் சினந்து கொண்டான். அப்பைய்யர் அவன் திருப்திக்காகத் தன் வலக்கரத்தைச் சற்றே தூக்க, ஒரு சின்ன அசைவுக்கே, மன்னனின் துணிமணிகள் பற்றிக் கொண்டன!.

"மன்னா, அக்னி ஹோத்ரம் செய்து செய்து, அக்னி பகவான் அடியேன் கையில் ஆவாகனம் ஆகி விட்டான்! அதன் பொருட்டே வலக்கர ஆசீர்வாதம் நான் செய்வதில்லை! தவறாக எண்ணாதே" என்று சொல்லி அவனைத் திருத்தினார்!
அக்னி ஹோத்ரம் பரமம் பவித்திரமாகச் செய்வதன் பலனைக் கண்கூடாக உலகுக்குக் காட்டி அருளியவர் அப்பைய்யர்!

இதைக் கண்டும் மனம் மாறாத தாதாச்சாரி, இறுதியில் அப்பைய்யரைக் கொன்று விடுவதென்றே முடிவு கட்டி விட்டான்! கள்ளர்களை ஏவி விட்டு அவரை அழிக்க முனைந்தான்! ஆனால் அப்பைய்யர் கண் திறக்க கள்ளர் அனைவரும் சாம்பல் ஆயினர்! பின்னர் பரம கருணையால் அனைவரையும் உயிர்பித்துக் கொடுத்தார் அப்பைய்யர்! மாண்டவரே மீண்டதைக் கண்ட பின்னர் தான், தாதாச்சாரியும் இறுதியில் திருந்தினார். அப்பைய்யர் அவரைப் பட்சி தீர்த்தம் என்னும் ஊருக்குச் சென்று சிவபூசை செய்யச் சொல்லிக் கடைத்தேற்றினார்!


அப்பைய்யரும், சுவாமி தேசிகனும் நல்ல நண்பர்கள்! கருத்து மாறுபாடுகள் பற்றி அவர்களிடையே கடிதப் போர் எல்லாம் கூட நடக்கும்! :-)
சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு! சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! தேசிகரின் இன்னொரு பட்டமான "கவிதார்க்கிக சிம்மம்" என்பதை வழங்கியதே அப்பைய்யர் தான்! தேசிகரின் நாடகத்துக்கு அப்பைய்யர் ஒரு உரையும் எழுதியுள்ளார்.

அப்பைய்யர் சங்கரரைப் போலவே, பல தலங்களுக்கு திக்விஜயம் செய்தார்!
அவரின் மனைவியும், மாணவர்களும், அவரின் மூல சொரூபத்தைக் காட்டுமாறு ஒரு முறை வேண்டிக் கொண்டனர்; சித்தாசனத்தில் அமர்ந்து சமாதி நிலையானார் அண்ணல்!
அந்தச் சமயத்தில், உருத்திராக்கமும் திருநீறும் மேனியெங்கும் தரித்து, பல திவ்ய ஆயுதங்களுடன், சதாசிவ ருத்ர மூர்த்தியே அப்பைய்யரின் யோகத்தில் இருந்து கிளம்பி வெளிவந்ததைப் பலரும் தரிசித்து வியந்தார்கள்!

ஸ்ரீரங்கம் சென்று இறைவனின் புஜங்க சயனத்தைச் சேவிக்க எண்ணினார் அப்பைய்யர்!
ஆனால் அங்கிருந்த ஒரு வைணவக் கூட்டம் தீட்சிதரின் வருகையை விரும்பவில்லை! அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோயிலில் குழப்பத்தை ஏற்படுத்தவே, அர்ச்சகர்களும், மடத் தலைவர்களும் செய்வதறியாமல் திகைத்தார்கள்!

யாருக்கும் சங்கடம் கொடுக்க நினைக்காத அப்பைய்யர், சன்னிதிக்கு வெளியிலேயே நின்று கொண்டு அரங்க நகரப்பனைச் சேவித்து விடலாம் என்று நினைத்தார்! அரங்கனைச் சிவபெருமானாகத் தியானித்தார்.
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!

முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்! அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!
சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.
ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!



துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் சதுர்மத சாரம் என்ற விளக்க நூல் எழுதினார் அப்பைய்யர்!
ஆதிசங்கரரின் அத்வைத விளக்கத்துக்குத் தனியாக மெருகேற்றினார்! சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு நுட்பமான விளக்கங்கள் கண்டார்! அத்வைதத்தைப் பல இடங்களில் நிலைநாட்டிச் சென்றார்! இவர் சங்கரரின் மறு அவதாரமோ என்று எண்ணும் படிக்கு, அவர் விளக்கங்கள் அமைந்தன!

தன்னுடைய எழுபத்து இரண்டாம் வயதில், தன் இறுதியை அறிந்து கொண்ட அப்பைய்யர், தில்லையம்பலம் சென்று நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்தார்!
வீட்டில் அவருக்கு இறுதியாகக் கர்ண மந்திரங்கள் ஜபிக்கும் போது, நடராஜப் பெருமான் ஆலயத்திலும் அவர் சந்நிதிக்குள் நுழைவதைப் பார்த்தார்கள் தீட்சிதர்கள்!

வீட்டில் அவர் சிவ சாயுஜ்ஜியமாக, சிவ சுலோகத்தின் முதல் இரண்டடியை வாய்விட்டுச் சொல்லும் போதே, சீவன் சிவகதி அடைந்தது! மீதி சுலோகத்தை நீலகண்ட தீட்சிதர் (அன்னாரின் தம்பி பேரன்) உடனிருந்து முடித்துக் கொடுத்தார்!

அங்கோ....பொன்னம்பலத்தில்,
அவருக்குத் தரிசனம் செய்து வைக்கலாம் என்று எண்ணிய தீட்சிதர்கள், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், அப்பைய்யர் தில்லை அமபலத்தின் பஞ்சாட்சரப் படிகளில் விறுவிறு என்று ஏறிவிட்டார்!
சந்நிதியுள் சென்று நடராஜப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்!


அப்பைய்யர் பரம சைவர்! எனினும் வைணவத்தின் பேரில் ஒரு விதமான துவேஷமும் கொள்ளாதவர்! அவருடைய வரதராஜ ஸ்தவம் என்னும் நூலே இதற்குச் சாட்சி!
வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது வாதமே அல்ல! ஆனால் ஈசனை ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்!
கிம் த்வீ சத் வேஷகாட நலகலி தஹ்ருதாம் துர்மதீ னாம் துருக்தீ:
பங்க்தும் யத்னோ மமாயம் ந ஹிபவது விஷ்ணு வி த்வேஷ சங்கா!


சரி, தலைப்புக்கு இன்னும் வரலையே? இந்த அந்தணோத்தமருக்கும் கருப்பண்ண சாமிக்கும் என்ன சம்பந்தம்?
அப்பைய்யரின் நண்பர்...அவர் பெயர் சோளிங்கபுரம் தொட்டாச்சாரியார்! மிகவும் ஆழ்ந்த நரசிம்ம உபாசகர்!

ஒரு முறை இருவரும் மதுரை அழகர் கோயில் சந்நிதிக்குச் செல்லும் போது...அங்கே முதலில் பதினெட்டாம் படி கருப்பை வணங்கிச் சென்றனர்! கருப்பண்ண சாமியின் முன்பு பொய்யே உரைக்க முடியாது! வழக்கு விசாரணை வித்தகர் அல்லவா அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பு! நண்பரைச் சீண்டி விளையாட எண்ணினார் தொட்டாச்சாரியார்!

நண்பனின் கையைப் பிடித்து, கருப்பண்ணசாமியின் முன்பு வைத்து, "அப்பைய்யரே, எங்கே சொல்லுங்கள்! வேதங்களில் பரம், பரப்பிரும்மம் என்று பரத்துவமாக யாரைச் சொல்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" என்று கேட்க...
புரிந்து கொண்ட அப்பைய்யர், சிரித்துக் கொண்டே...

"வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது ஒரு வாதமே அல்ல! சங்கர பாஷ்யமே,"நாராயண பரோவக்யாத் அண்டம் அவயக்த சம்பவம்" என்றல்லவா துவங்குகிறது! அப்படி இருக்க, ஆதிசங்கரரையா நான் மறுத்துச் சொல்வேன்?

* பரம்பொருளே, சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருக்கிறான்! அந்தப் பரம் பொருளுக்கு நாராயணன் என்னும் திருநாமம்!
* நாராயணன் என்பவன் சைவமும் அல்ல! வைணவமும் அல்ல!
* அந்த நாராயணனே பரப்பிரம்மம்!
* நாராயணஹ பரஹ என்பதே வேதப் ப்ரமாணம்!"
என்று பதினெட்டாம் படிக் கருப்பின் சன்னிதியில் கையறைந்து சத்திய வாக்கு செய்தார் அப்பைய்யர்!

சிவாய விஷ்ணு ரூபாய, சிவ ரூபாய விஷ்ணவே
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோ, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ!
அபேதம் தர்சனம் ஞானம்!

மகான் அப்பைய்யர் திருவடிகளே சரணம்!

Wednesday, June 4, 2008

போலி குருக்களை அடையாளம் காண முடியுமா?

இராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் உள்ளது போலவே பரமகுரு! அவர் சீடர் விவேகானந்தர் பரமசிஷ்யன்!
அந்தப் பரமகுரு-பரமசிஷ்யன் இருவருக்குமிடையே ஆன உறவும் உரையாடலும் மிகவும் புகழ் வாய்ந்தது!
என்றோ இராமானுசருக்கும் அனந்தாழ்வானுக்கும் இடையே நடந்த அதே உரையாடல், அன்று கங்கைக் கரையில் இராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இடையேயும் நடக்கிறது! அந்த உரையாடல், இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது!

குரு என்றால் என்ன?
கு சப்தஸ் அந்தகாரஸ்ய! ரு சப்தஸ் தன்னிரோதஹ!
அந்தகாரம் என்னும் இருளை நீக்குபவரே குரு!
குருவின் ஒரு மெல்லிய பார்வை பட்டாலே போதும்! சின்ன ஒளிக் கீற்று, அறை முழுதும் இருட்டை நீக்குவது போல், குருவின் பார்வை நம் அகங்கார அந்தகாரத்தை அடியோடு அழித்து விடும்!

குருவிடம் சேர எனக்கு என்ன லட்சணம் தேவை?
சிஷ்ய லட்சணம் என்று ஒன்னுமே கிடையாது! குருவுக்குத் தான் லட்சணம் சொல்லி இருக்காங்க!
பாங்கு அல்லன் ஆகிலும் பயன் அல்லன் ஆகிலும் அந்தச் சிஷ்யனைத் திருத்திப் பணி கொள்பவனே குரு!
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர்ப் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே


நல்ல குருவை நான் எப்படி அடையாளம் கண்டு கொண்டு, அவரிடம் சீடனாய்ப் போய்ச் சேர முடியும்?
நல்ல குருவை அடையாளம் காணும் அளவுக்கு உனக்கு ஞானம் இருக்கா? இருந்தால், நீ ஏன் குருவைத் தேடுகிறாய்? அதான் ஞானம் பெற்று விட்டாயே!
ஞானம் இல்லாததால் ஞானம் தேடுவோன், ஞானியை மட்டும் எந்த ஞானத்தால் அறிந்து கொள்வான்?

ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்! When the Student is Ready, the Teacher Arrives!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

போலி குருமார்கள்....அதான் கொஞ்சம் பயமாய் இருக்கு? என்ன செய்ய?
அவர்களை உருவாக்குவதே நீங்கள் தானே!
ஞானம் வேண்டித் தாகமாய் இருந்தால், எதற்கு போலி வேண்டுகோள்களை வைத்துக் கொண்டு, போலி குருமார்களைத் தேடி ஓடுகிறீர்கள்?
அதான் சொன்னேன்! ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்!

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழு மாறே

போலிகளை எப்படி அடையாளம் காண்பது?
சான்றோர்களை அடையாளம் காண்பது தான் அரிது! போலிகளை வெகு எளிதில் கண்டு கொள்ளாலாமே!
தங்களைக் குரு என்று கூறிக் கொள்ளும் போலி குருமார்கள், முக்கியமாக அடக்கமின்றி இருப்பார்கள்!

மந்திரங்களிலும், தந்திரங்களிலும் ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் இருக்கலாம்!
ஆனால் இறை உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்! மெய்ப்பொருளை ஆய்ந்து இருக்க மாட்டார்கள்!
வேதங்களின் உண்மைகளை உணர்ந்து சிக்கலின்றி பிறருக்கு உணர்த்தும் வல்லமை அவர்களுக்கு அருளப் பெற்றிருக்காது!!

இறைவன் திருநாமத்துக்கு உருகாத உள்ளத்தை எளிதில் கண்டு விடலாம்! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது! அது ஒன்றே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்!

உன்னால் அவர்கள் நாடகத்தைக் காண முடியவில்லை என்றால், உன் தேடல் குருவை நோக்கி அல்ல! வேறு ஏதோ தன்னலமான ஒன்றை நோக்கி! அவ்வளவு தான்!


பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!


சொல்லிலும் செயலிலும் ஏன்.... ஒவ்வொரு அசைவிலும் பணிவை மட்டுமே கண்ட மகாகுருவைக் கலியுகத்தில் காண்பது கடினமா என்ன?
அவரைத் தரிசித்த மாத்திரத்தில், அந்தப் பணிவு நமக்கு வந்து ஒட்டிக் கொள்ளாதா என்ன, ஒரு சிறு விநாடியாவது! கீழே தரிசியுங்கள்! குரு தரிசனம், பாப விமோசனம்!



குரு புங்கவ புங்கவ கேதனதே
சமதா மயதம் நஹி கோ பி சுதி
சரணாகத வத்சல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!

Wednesday, May 7, 2008

குதிரையாய் வந்த குருவும், குதிரைக்காக வந்த குருவும்!

குதிரையாய் வந்த குரு யார்?
குதிரைக்காக வந்த குரு யார்??

யார் யார், யாருன்னு சொல்லுங்களேன்! அவர்களை வணங்கி அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகளைத் துவங்குகிறேன்!

இங்கு ஏற்கனவே நற்பதிவுகளை அள்ளித் தரும்
திராச ஐயா, கீதாம்மா, மெளலி அண்ணா - இவர்களும் அடியேனுக்கு ஒரு வகையில் குரு ஸ்தானம் தான்!
அதனால் இவர்களையும் அடி வணங்கியே இப்பதிவுகளைத் துவக்குகிறேன்!

இன்று சித்திரைத் திருவாதிரை - ஆதி சங்கர பகவத் பாதர் மற்றும் உடையவர் இராமானுசர் - இரு பெரும் ஆசார்யர்களின் திருவவதாரத் திருநாள் (ஜெயந்தி) - (May 8th, 2008)
இன்று பார்த்து அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகள் துவங்க வேண்டும் என்பதும் ஆசார்யர்களின் திருவுள்ளம் போலும்!



தமிழ் முனிவன் திருவள்ளுவனும் ஒரு பேராசான் - பரம ஆசார்யன் தான்!
திருக்குறள் கடவுள் வாழ்த்தில், கடைசிக் குறட்பா, ஆசான்-ஆசார்யனைக் குறிக்கும் என்பது நூலோர் கருத்து!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



மீன்களைத் தண்ணீரில் போட்டா அவை தானா நீந்தும்! ஆனால் குழந்தைகள்? மனிதர்கள்?
ஆக...பிறவிப் பெருங்கடல் நீந்தனும்-னா, முதலில் நீந்தத் தெரியனும்!
மீனுக்குத் தானா நீந்தத் தெரியும்! ஆனால் மனிதனுக்குத் தானா நீந்தத் தெரியாது! - அவனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கணும்!

அப்படி நீந்தக் கற்றுக் கொடுப்பவனே ஆசான்-ஆசார்யன் என்பது வள்ளுவர் சொல்லாமல் சொல்லிக் காட்டும் உள்ளுறை உவமம்!
ஆசார்யன் சொல்லிக் கொடுத்து, இறைவனடி உணர்பவர்கள், பிறவிக் கடலை நீந்துவார்கள், நீந்தி இறைவன் "அடி" சேர்வார்கள் என்பதையே ஐயன் வள்ளுவன் குறிப்பால் காட்டுவதாக வியாக்யானம்!

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் அல்லவா?



இப்போ எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்!

இவர் குதிரைக்காக வந்த குரு! - எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

கெளரிகாம்பாள் உடனுறை தட்சிணாமூர்த்தி - காணற்கு அரிய இந்த தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி கோலத்தைச் சென்னைக்கு அடுத்த சுருட்டப்பள்ளியில் காணலாம்! (இன்னொரு காணற்கு அரியதான சயனக்கோலச் சிவபெருமானும் இதே ஊரில் தான்!)
குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

குரவே சர்வ லோகானாம் = அனைத்துலகங்களுக்கும் குருவே
பீஷஜே பவ ரோகினாம் = பவ ரோகங்களான அஞ்ஞான நோய்களுக்கு விஞ்ஞான-மெய்ஞான மருந்தே
நிதயே சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் நிதிப் புதையலே
தக்ஷிணா மூர்த்தயே நமஹ! = தென்னமர் செல்வா! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்!



இவர் குதிரையாய் வந்த குரு! - இதையும் எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

ஹயக்ரீவர் = ஹயம்+க்ரீவம் = குதிரை+கழுத்து
எப்படிச் சிவபெருமானின் குரு வடிவம் தட்சிணாமூர்த்தியோ, அவ்வண்ணமே பெருமாளின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி! அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!

சரஸ்வதீ தேவியின் ஆதி குரு! அகத்தியனுக்கும் ஆசானாய் இருந்தவர்! சமண-பெளத்தங்களிலும் இவர் பேசப்படுகிறார்! பின்னொரு நாள் விரித்துச் சொல்லலாம்! இன்று வணங்கி மகிழலாம்!
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!


ஞான ஆனந்த மயம் = ஞானம், அதே சமயம் ஆனந்தம்! = ஞான காரணமாகவும் - அந்த ஞானத்தால் விளையும் ஆனந்த காரியமாகவும் இருப்பவனே!
தேவம் = இப்படிக் காரணமாகவும் காரியமாகவும் இருக்கும் இறைவா!
நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம் = மாசில்லா மணியே! ஸ்படிகம் போல் நிறம்/குணம்/குறைகளை எல்லாம் கடந்தவனே!

ஆதாரம் சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் ஆதாரம் நீ!
ஹயக்ரீவம் = அயமுகப் பெருமாளே! ஹயக்ரீவா!
உபாஸ்மஹே = உன்னை உபாசிக்கிறேன் (வணங்கிக் கொண்டே இருக்கிறேன்)


சிந்தனைக்கு ஒரு தீபம்: எல்லாம் சரி! ஏன் ஞான வடிவ இறைவன், சைவம்/வைணவம் இரண்டிலும் குதிரை தொடர்போடு வர வேண்டும்? குதிரைக்கு அப்படி என்ன விசேடம்? யோசித்துப் பாருங்கள்! :-)
(பதிலை மதுரையம்பதிப் பெருமானிடமோ இல்லை கூடலம்பதிப் பெருமானிடமோ பெற்றுக் கொள்ளலாம்! :-)