
கலியில் பல நேரங்களில், பல்வேறு காரணங்களால் கர்மானுஷ்டானங்களை சரிவரச் செய்ய முடிவதில்லை. அப்படியே செய்தாலும் அவை எல்லாம் டாம்பீகத்துக்குகாக செய்வதாகவே இருக்கிறது. சிரத்தையால் வருவது ஞானம் என்பார்கள். இப்போது சம்ஸ்காரங்கள் சரியாக இல்லாததால் ஞான சூன்யர்களாக ஆகிவிடுகிறோம். இந்த நிலையினை முன்பே அறிந்த சுகர், "கீர்த்தனாதேவ கிருஷ்ணஸ்ய" என்று குறிப்பிட்டுளார் போல. அதாவது ஸ்ரீகிருஷ்ண சங்கீர்த்தனத்தாலேயே பந்தம் நீங்கி பரமாத்மாவை ஆடையலாம் என்பதாக பொருள்.
கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தின் மூலமே இறையனுபவம் பெறலாம் என்று நிதர்சனமாக காட்டியவர்கள் புரந்தர தாஸர், கனகதாஸர், ராமதாஸர், க்ஷேத்ரஞ்யர், கிருஷ்ண சைதன்யர், ஸமர்த்தர், தூக்காராம், கபீர்தாஸர், துளசிதாஸர், ஹரிதாஸ், மீரா, ஸ்ரீ வல்லபர் போன்றவர்கள். இங்கே குறிப்பிட்ட நாம சங்கீர்த்தன சக்ரவர்த்திகள் எல்லோரும் தமிழகத்தைச் சாராதவர்கள். இன்று தியாகப்பிரம்மத்தை நாம சங்கீர்த்தன பரம்பரையில் சேர்த்துக் கொண்டு பாடுவது இருக்கிறதென்றாலும், இவருக்கு முன்பே இரண்டு காமகோடி மடத்து பீடாதிபதிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை தமிழகத்துக்கு உணர்த்தியவர்கள் உண்டு. அவர்கள் ஆத்ம போதேந்திரரையும், பகவன் நாம போதேந்திரரும் ஆவர். காமகோடி பீடத்தின் 58ஆவது பீடாதிபதியான வித்வாதிகேந்திரர் என்ற ஆசிரம பெயர் கொண்ட ஆத்ம போதேந்திரர், ஞான, பக்தி வைராக்யங்களில் சிறந்தவர். இவரது சீடரே போதேந்திர ஸ்வாமிகள் என்று இன்று பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் தக்ஷிண ஸம்பிரதாய பஜனைப் பத்ததியை நமக்கெல்லாம் அருளிய சீலர். இதில் சிறப்பென்னவென்றால் போதேந்திரரும் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார், 59ஆம் பீடாதிபதி. இந்த போதேந்திரரே பகவன் நாம ரஸோதயம் என்னும் பரம பவித்ரமான நூலை அருளியவர். இந்நூலில் நவ லக்ஷணமான பக்தியில் நாம சங்கீர்த்தனதுக்கு பிராதான்யம் அளித்து, அது இந்த யுகத்துக்கு எத்துணை ஏற்றதாக இருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். இந்த நூலிலே பாகவத தர்மம், ஸனாதன தர்மம், அத்வைதம் ஆகிய மூன்றையும் இணைத்து கூறியுள்ளார். இவரது காலத்தில்தான் ஸ்ரீதர ஐயாவளும், சதாசிவ பிரம்மமும், இருந்திருக்கிறார்கள்.
நகரேக்ஷு காஞ்சி என்று புகழப்படும் காஞ்சி மாநகரிலே கேசவ பாண்டுரங்க யோகி என்பவருக்கும், அன்னாரது தர்ம பத்னி ஸுகுணாவுக்கும் புத்ரனாக அவதரித்தார். குழந்தையின் ஜாதகங்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கருத்தில் கொண்டு 'புருஷோத்தமன்' என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டார். இவரது தந்தை சங்கர மடத்தில் ஸ்ரீ கைங்கர்யம் செய்து வந்ததால், குழந்தை புருஷோத்தமனுக்கு ஆச்சார்ய பக்தி அதிகம். அதுகண்ட ஆச்சார்யார் வித்வாதிகேந்திரர் குழந்தையை மடத்துக்கு தர வேண்ட, பெற்றோரும் குருபக்தியால் வாக்கு மீறாது குழந்தையை மடத்துக்கு அளித்தனர். ஐந்து வயதில் அக்ஷராப்யாசம், 7 வயதில் உபநயனம் என்று தொடர்ந்து 16 வயதுக்குள் வேத-வேதாந்த வித்தைகளில் பூர்ண சந்திரனாக விகசித்தார். எல்லா சாஸ்திரத்துக்கும் சாரம் நாராயண த்யானமே என்று உணர்ந்து தினமும் லக்ஷத்தது எட்டு ராமஜபம் செய்ய ஆரம்பிக்கிறார். இவ்வாறாக பக்தி வைராக்யங்களால் பக்குவமடைந்தவராக, மாயா சுகங்களில் மயங்காது, பரம பாகவத தர்மத்தில் இச்சையுடையவராக வளர்ந்தார். இதே சமயத்தில் ஆத்ம போதேந்திரர் என்றழைக்கப்பட்ட வித்யாதிகேந்திரரும் ஆச்சார தர்மங்களை சரிவர அனுசரிக்க இயலாத ஜனங்களையும் நல்வழிப்படுத்த நாம கீர்த்தன ரூபமான பாகவத தர்மத்தை பிரசாரம் செய்தார். இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக தனது காசி யாத்திரையினை அமைத்துக் கொண்டார். தன்னுடன் வர சித்தமாக இருந்த புருஷோத்தமனை சில காலம் கழித்து வரச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். வடதேசத்தில் நாம்சங்கீர்த்தனத்திற்கு இருக்கும் மரியாதையையும், அதனால் அப்பிரதேசத்து மக்களது ஆன்மீக சிந்தனை, அருள் எல்லாம் உணர்ந்த ஆத்ம போதேந்திரருக்கு தக்ஷிண தேசத்தில் இவ்வாறான நாம சங்கீர்த்தனம் புழக்கத்தில் இல்லையே என்ற குறை வந்தது. இந்த குறையைப் போக்க, தமக்கு பின் பீடாதிபதியாக பட்டத்துக்கு வரும் புருஷோத்தமனாலேயே முடியும் என்ற முடிவுக்கு வந்து புருஷோத்தமனை காசிக்கு வரச் செய்கிறார். காசி வந்து குருவை வணங்கிய புருஷோத்தமனுக்கு பிரம்மச்சார்யத்திலிருந்து சன்யாச ஆஸ்ரமத்தை காசியிலேயே அருளுகிறார்.
சன்யாச ஆஸ்ரம நாமமாக 'பகவன் நாம போதேந்திரர் என்ற பெயரை அளித்து ஸ்ரீ மடத்தின் 59ஆம் ஆச்சார்யராக பொறுப்பினை அளித்து தென்னகத்தில் நாமசங்கீர்த்தனைத்தை பரப்பக் கட்டளையிடுகிறார். அத்துடன் இல்லாது நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை உணர்த்த சில காலம் நரசிம்மாச்ரமி அவர்களிடம் இருக்கும் பலவித கிரந்தங்களையும் படிக்கச் செய்தார். தகுந்த காலத்தில் காஞ்சீபுரம் செல்ல உத்தரவளித்த ஆத்ம போதேந்திரர், போகும் வழியில் ஜகன்னாத க்ஷேத்திரம் சென்று பகவன் நாம கெளமுகி என்ற சிற்ந்த பக்தி சங்கீர்த்தன கிரந்தத்தை அறிந்து கொள்ள உத்தரவிடுகிறார். [ஒரிசாவில் வாழ்ந்த லக்ஷ்மிதரர் என்ற கவி எழுதியது இந்த பகவன் நாம கெளமுகி. இதில் பகவன்நாமத்தின் வைபவத்தையும், செளலப்பித்தையும் ச்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச-புராண வாக்கியங்களைக் கொண்டு சொல்கிறார்.] கெளமுகியினையும் கற்றுணர்ந்த ஆச்சார்யார் காஞ்சீபுரம் வந்து ஸ்ரீதர அய்யாவாள் என்று அறியப்படும் ஸ்ரீதர வெங்கடேசரது சிறப்புக்களை அறிந்து அவரது கிரந்தங்களையும் தனது நாம சித்தாந்தங்களுக்கு ப்ரமாணமாகக் கொண்டார். போதேந்திரர் பிரமாணமாக கொண்ட மற்ற கிரந்தகளாவன, புருஷார்த்த ஸுதாநிதி, சங்கரரின் சஹஸ்ரநாம பாஷ்யம், வித்யாரண்யரின் சங்கரவிலாஸம், த்யான தீபிகை, பகவத்கீதா கூடார்த்ததீபிகை, நாமதரங்கம், பக்தி முக்தாபலம் போன்றவை. இத்துணை நூல்களையும் பிரமாணமாக கொண்டு ஸ்வாமிகள் எட்டு நாமசித்தாந்த கிரந்தங்களை வெளியிட்டார். அவற்றில் மிக பிரதான்யமானது நாமாம்ருத ரஸோதயம். இவை தவிர பல அத்வைத சித்தாந்த க்ரந்தங்களும் செய்திருக்கிறார்.
இடையில் குரு ஆத்ம போதேந்திரர் திருப்பாப்புலியூரில் பரிபூர்ண மஹாஸமாதி அடைய, அவருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்தபின் காஞ்சிபுரம் திரும்பி அத்வைத பிரசாரமும், நாமசங்கீர்த்தன பிரசாரமும் செய்துவந்தார். பீடாதிபதியான பின்பும், மடத்து சம்பிரதாயங்களுக்கிடையிலும் பிரதி தினம் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்வதும், பாகவத உபன்யாசமும் செய்து, ஞானத்தில் சனகாதியர் போலும், பக்தியில் நாரதர் போலும், வைராக்கியத்தில் சுகர் போலும் இருந்து வந்தார். ஜாதி, மத பேதமின்றி கருணையுடன் பகவன் நாம கீர்த்தனம் பற்றி விளக்கி ஹரிநாம சங்கீர்த்தனத்தை பரப்பினார். இவர் இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாமஜபத்தில் மூழ்கியிருக்கின்றனர். எந்த ஆச்ரமத்தில், எந்த ஜாதியில் இருப்பவர்களானாலும் நாமசங்கீர்த்தனம் செய்யாவிடில் அந்த ஜென்மம் வியர்த்தம் என்று குறிப்பிட்டு நாமஜப மகிமையினை உபதேசிப்பார். பீடாதிபதி என்ற கவுரவம் ஏதுமின்றி பாமரர்களுக்காக உருகி அவர்களும் கடைத்தேற நாமசங்கீர்த்தனத்தை பரப்பியிருக்கிறார்.
தடைபட்ட ராமேஸ்வர யாத்திரையினை முடித்து மத்யார்ஜுனம் வந்த போது அங்குள்ள மக்கள் ஓயாது நாமஜபம் செய்வது கண்டு அதிசயித்து விசாரித்ததில் ஸ்ரீதர அய்யாவாளால்தான் அந்த ஊரில் நாமஜபம் பரவியிருப்பதை அறிந்து அவரை சந்திக்கிறார். அய்யாவாள் ஸ்வாமிகளை
பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ஸர்வஸ்ய விக்ரஹம்
ஸ்ரீமத் போதேந்திர யோகீந்திர தேசிகேந்திரம் உபாஸ்மஹே
[பகவன்நாம சங்கீர்த்தனம் என்னும் ஐச்வர்யத்திற்கு ஏக சக்ராதிபதியான போதேந்திர யோகீந்திரர் என்னும் தேசிகேந்திரரான குருமூர்த்தியை உபாசிக்கிறேன்]
என்று கூறி வணங்க அச்சமயத்தில் ஸ்வாமிகள் தனது ஆச்ரம தர்மத்தையும் மீறி அவரை தூக்கி ஆலிங்கனம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் பல விஷயங்களையும் சம்பாஷித்து மகிழ்ந்துள்ளனர். பின்னர் பலகாலம் காஞ்சீபுரத்தில் வாழ்ந்து சிஷ்யர்களுக்கு பாகவத தர்மத்தையும் நாமசங்கீர்த்தனத்தையும் உபதேசித்து வந்தார். தனது பிடாதிபத்தின் காரணமாக முழு மூச்சாக நாமசங்கீர்த்தன பிரசாரம் செய்ய முடியவில்லை என்று தனக்கு அடுத்த 60ஆவது பீடாதிபதியாக "அத்வைதப்பிரகாசர்" என்பவரை நியமித்து ஸ்ரீமடத்து நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு, தண்ட-கமண்டலத்துடன் தனியாக யாத்திரை கிளம்பி ஆங்காங்கே பிரசாரம் செய்து கொண்டு செல்லும் இடத்தில் கிடைத்ததை பிக்ஷை பண்ணிக் கொண்டு மீண்டும் திருவிடைமருதூர் வந்து ஸ்ரீதர அய்யாவாளுடன் சேர்ந்து இருவருமாக பல ஊர்களுக்கும் சென்று பகவன்நாம கீர்த்தன பிரசாரம் கிளம்பினர். சென்ற இடங்களில் எல்லாம் பலவகையான மக்களுக்கும் நாம உபதேசம் செய்வித்தனர்.
இவ்வாறாக காலம் உருண்டோட, ஸ்ரீதர அய்யாவாளும் ஒருநாள் மஹாலிங்கத்தின் சன்னிதியில் வெகுநேரம் சிவநாம சங்கீர்த்தனம் செய்து பின்னர் மனமுருகி ஈசனிடம் பிரார்த்தனை செய்து ப்ரேமபக்தியின் உன்மத்ததில் மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய ஓடி கர்பகிரஹத்துள் நுழைகிறார். ஜோதிர் வடிவமாக தெரிந்த மஹாலிங்கத்தில் மறைந்தும் போகிறார். இதை அறிந்த போதேந்திரர் பல மணிநேரம் சமாதி நிலை யில் ஆழ்ந்து பின்னர் சகஜ நிலை அடைந்து அன்று முதல் யாரிடமும் பேசுவதை நிறுத்தி கோவிந்தபுரத்தில் காவிரிக் கரையிலேயே இருக்கத் தொடங்குகிறார்கள். அவர் ஒருநாள் அங்கு விளையாடும் சிறுவர்களிடம் ஒரு குழியினைக் காண்பித்து தான் அதில் இறங்குவதாகவும் அதன் பின்னர் மணலைத்தள்ளி மூடிவிட்டு மறுநாள் வந்து பார்க்கச் சொல்கிறார். விஷயமறியாத சிறுவர்கள் அவ்வாறே செய்து, மறுநாள் விஷயம் அறிந்த பெரியவர்கள் அவ்விடத்தை தோண்ட முற்படுகையில் அசிரீரியாக தான் அங்கேயே சமாதியாகி நாமசங்கீர்த்தனம் செய்ய முடிவெடுத்துவிட்டதாக சொல்லி, அங்கே பிருந்தாவனம் அமைத்துவிட சொல்கிறார் ஸ்வாமிகள். அத்துடன் இல்லாது யார் பிரதி தினமும் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்தாலும் தான் தரிசனம் தருவதாக வாக்கும் தருகிறார். இச்சம்பவம் கி.பி 1692ல் ப்ரஜோத்பத்தி வருஷம் ப்ரோஷ்டபத மாதம் பெளர்ணமியன்று நடந்தது. இன்றும் கோவிந்தாபுரத்தில் அவரது ஜீவ சமாதியில் பாகவதர்கள் ஆராதனை மிகவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.
இன்று நாம் எல்லோரும் அறிந்த ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், மற்றும் அவரது குரு ஞானாநந்தர், புதுக்கோட்டை கோபால கிருஷ்ண பாகவதர், சஞ்சீவி பாகவதர், முத்தையா பாகவதர், முரளிதர ஸ்வாமிகள், கடையநல்லூர் ராஜகோபால், மற்றும் பலர் தமது பஜனைகளில் பரம குருவாக கொண்டு பாடல்கள் பாடி பஜனையினை போதேந்திராளின் கீர்த்தனைகளையே. இன்றைய சம்பிரதாய பஜனைக்கு வித்திட்ட அந்த மஹானது குருவந்தனம் (தோடே மங்களம்) பாடாத பஜனைகள் இல்லை. அது பாடப்படும் இடங்களிலெல்லாம் அவரது சாந்நித்தியத்தை நாம் உணரவும் முடிகிறது. இவ்வாறாக நாமசங்கீர்த்தனத்தை நமக்கு அளித்த குரு போதேந்திரரை மனதால் வணங்கி அவரது சொற்படி நாமும் நாம சங்கீர்த்தனம் செய்து இறையருளில் மூழ்குவோமாக.
யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே
தந்நமாமி யதிச்ரேஷ்ட்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும்
[எவருடைய ஸ்மரணத்தால் நாமபக்தி உண்டாகிறதோ அந்த யதிஸ்ரேஷ்டரும், ஜகத்குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை சரணமடைகிறேன்]

மேலே இருப்பது புதுக்கோட்டை ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர், இப்போது தமிழகத்தில் கொஞ்சமேனும் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது என்றால் அது இவராலேயே என்று அறுதியிட்டு கூறலாம். இவர் செய்த உஞ்சவர்த்தி, டோலோற்ச்சவம், தீப பிரதக்ஷணம், அகண்ட நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம் போன்றவை எண்ணிலடங்கா. அன்னாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த பதிவு சமர்பணம். அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக்கவும்