Wednesday, March 5, 2008

குருவின் தனித்தன்மை

மக்கள் யாரை குருவாகக் கொள்வார்கள். மக்கள் மனத்தில் அவர்கள் மீது நம்பிக்கைவர வேண்டும். அப்படி நம்பிக்கை வருமளவில் யார் நடப்பார்களே அவர்களுக்கு தனி மதிப்பு சமூகத்தில் உண்டு.மதிப்பு என்பது தானாக வரவேண்டும் அதை கேட்டு வாங்க முடியாது.




அதுசரி திராச இப்படிச் சொன்னால் நான் எப்படி ஒப்புக்கொளவது ஏதாவது கதை இருக்கா இதுக்கு புராணத்திலேன்னு கேஆர்ஸ் கேட்கலாம். இதோ......
பராசரருடைய குமாரர் வேதவியாசர் . வேதவியாசர்ருடைய குமாரர் சுகப்பிரும்மம்.இந்த சுகபிரும்மம்தான் பரிக்ஷித்து மஹாராஜனுக்கு ஏழு நாட்களில் பாகவதத்தை கூறி அவனுக்கு மோக்ஷ்மளித்தார்.வியாசருக்கு கொஞசம் பெருமை பிடிப்பு இருந்தது. தான்னால் தான் பாரதம் எழுதப்பட்டது, தான் விஷ்ணுவுக்கு சமானமானவர் என்று.

ஒரு சமயம் வேதவியாசரும் சுகபிரும்மமும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டி இருந்தது. சுகபிரும்மம் முதலில் சென்று கொண்டிருந்தார் அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் வேதவியாஸர் வந்து கொண்டிருந்தார்.



நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது। ஆற்றில் சில பெண்கள் குறைந்த ஆடைகளுடன் குளித்துக் கொண்டு இருந்தார்கள்।சுகபிரும்மம் அவர்கள் அருகில் ஆற்றை கடந்து சென்றார்.அப்போது அந்தப் பெண்கள் தாங்கள் பாட்டுக்கு எந்த வித லஜ்ஜையும் இல்லாமல் குளித்துக்கொண்டு இருந்தார்கள்.பின்னாலேயே சிறிது நேரத்தில் வேதவியாசர் வந்தார். அவரும் அங்குதான் கரையைக் கடந்தார். ஆனால் அவரைப் பார்த்த பெண்கள் பதறி அடித்துக்கொண்டு கரைக்கு வந்து ஆடைகளை அவசர அவசரமாக எடுத்து வெட்கத்துடன் உடலைப் போர்த்திகொண்டார்கள்

இதைப் பார்த்த வேதவியாசர் அந்தப் பெண்களைப் பார்த்துக் கேட்டார்.நான் மிகவும் வயசானவன், முற்றும் துறந்த முனிவன், விஷ்ணுவுக்கு ஒப்பானவன் இருந்தும் நீங்கள் என்னப் பார்த்து லஜ்ஜையுடன் உங்கள் உடலை துணிகளால் மறைத்துக்கொண்டீர்கள். ஆனால் இதற்கு சிறிது நேரம் முன்பு சென்றானே சுகபிரும்மம் என் மகன் வாலிபமுறுக்கு உள்ளவன் , முற்றும் துறந்த முனிவனும் அல்லன், திகம்பரனும் ஆவான், அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு லஜ்ஜையே வராமல் குளித்துகொண்டு இருந்தீர்களே அது ஏன் என்று கேட்டார்.

அந்தப் பெண்கள் சொன்னார்கள். முனிவரே சுகபிரும்மமும் இந்த வழியாகத்தான் போனார்.ஆனால் வாலிபரரகவும் திகம்பரராகவும் இருந்தாலும், அவர் பாட்டுக்கு மரங்கள் பிரும்மத்தையும்,நதி பிரும்மத்தையும்,குளித்துக்கொண்டு இருக்கின்ற பெண்கள் பிரும்மத்தையும்,பார்த்துகொண்டு நதியின் அடுத்த கரை பிரும்மத்துக்கு சென்று விட்டார். அவர் மனத்தில் எதுவும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லாவற்றையும் அவர் பிரும்மமாகவே பார்த்தார். அதனால் எங்களுக்கும் எந்த வித லஜ்ஜையும் வரவில்லை. ஆனால் முற்றும் துறந்த வயோதிகம் மிக்க முனிவராகிய உங்களுக்கு,இந்த நதியும், அரை குறை ஆடையுடன் குளித்துக் கொண்டு பெண்களாகிய நாங்களும் உங்கள் சிந்தையில் பட்டு சலனத்தை ஏற்படுத்தியது. அப்படியானால் உங்களுக்கு இது நதி ,இது பெண்கள்,அரைகுறை ஆடைகள்,இவ்வளவு விஷ்யங்களும் உங்களை பாதித்து இருந்தது. அதனால்தான் நாங்களும் உங்களைப் பார்த்ததும் எங்களை ஆடைகளால் முழுவதும் மறைத்துக் கொண்டோம் என்றார்கள்.

இப்பொழுது மறுபடியும் படியுங்கள்

மக்கள் யாரை குருவாகக் கொள்வார்கள். மக்கள் மனத்தில் அவர்கள் மீது நம்பிக்கைவர வேண்டும். அப்படி நம்பிக்கை வருமளவில் யார் நடப்பார்களே அவர்களுக்கு தனி மதிப்பு சமூகத்தில் உண்டு.மதிப்பு என்பது தானாக வரவேண்டும் அதை கேட்டு வாங்க முடியாது
.

7 comments:

jeevagv said...

ஆகா, அருமையான கதை - தெளிவாக தெரியப்படுத்துகிறது நீதியை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க ஜீவா. கதை சொல்லலேன்னா கேஆர்ஸ்க்கு யார் பதில் சொல்லறது.ஆர்டர் இல்லே போட்டுட்டாரு!எனக்கு தெரிந்ததைச் சொல்லுகிறேன். உங்களைப் போன்றோர்கள் ஆதரவுக்கு நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பின்னீட்டீங்க திராச.
அருமை அருமை!
சுகப் பிரம்மம் சிந்தையே சிந்தை!
பாருங்க...அதான் பரீட்சித்து தனக்கு எந்த குரு கிடைப்பாரு-ன்னு ஏங்கும் போது, தானாவே அங்கு போறாரு!
When the student is ready, The Teacher arrives!

கதையால் கண்ணபிரானைக் (உரலில்) கட்டிப்போட்ட திராசவுக்கு நன்றி! :-))

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கேஆர்ஸ். சுகபிரும்மம் தொடர் 3 பதிவுகள் போடலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம் குருவருள் எப்படி என்று.

குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் இனிமேல் இருக்குமா என்பதே சந்தேகமாகவுள்ளது.

எனது உறவினர் ஒருவர் கதை சொல்லுவதையே தொழிலாக வைத்துக்கொண்டு உலகைச் சுற்றி வருகிறார்.வெளிநாடுகளில் நல்லமதிப்பு இருக்கிறது. ஒரு கலையாக மதிக்கிறார்கள்.கேஆர்ஸ் மாதிரி.

தி. ரா. ச.(T.R.C.) said...

பதிவில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. பராசரரின் மகன் வேதவியாசர் அவரின் மகன் சுகர் என்பதிற்கு பதிலாக மாறி வந்து விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய திருமதி. கீதா மேடம் அவர்களுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் அனுப்பிய மடல். திராச அவர்கள் எழுதி இருக்கும் சுகப்பிரம்மம் பற்றிய தொடரில் "வேத வியாசரின் மகன் பராசரர்" என்று வந்திருக்கிறதே? அது சரியா? எனக்குத் தெரிஞ்சு பராசரர் தான் இந்த லக்னத்தில் பிறக்கும் பிள்ளை இந்த மாதிரியான யோகத்துடன் வருவான் என்று கணித்து, அந்த லக்னம் நெருங்கும் சமயம் யாரும் உயர்ந்த குலப் பெண்கள் இல்லை என்ற போதிலும், அந்தச் சமயம் கங்கையைக் கடக்கத் தனக்குப் படகு ஓட்டிய மச்சகந்திக்கு அந்த அதிர்ஷ்டத்தை அளிக்கின்றார். மச்சகந்திக்கும், பராசரருக்கும் பிறக்கும் பிள்ளை தான் வேத வியாசர். இந்த மச்சகந்தி தான் பின்னர் சந்தனுவைக் கல்யாணம் செய்து கொள்கின்றாள். இவள் தனக்கும் சந்தனுவுக்கும் பிறந்த பிள்ளை இறந்து போகவே தன் மருமகள்களுக்குத் தான் தன் இன்னொரு பிள்ளையான வேதவியாசர் உதவியின் மூலம் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் பிறக்க வைக்கிறாள் அல்லவா? வியாசரின் பிள்ளைதான் சுகப் பிரம்மம். தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளவும். பின்னூட்டங்கள் வேறே வந்து இருக்கிறது. யாரும் கவனிக்கும் முன்னர் சரி செய்யவும். நான் சொன்னது தப்பானால் மன்னிக்கவும்

குமரன் (Kumaran) said...

தெரிந்த கதை. தெரியாத நீதி. நல்லா சொன்னீங்க தி.ரா.ச.