Wednesday, September 24, 2008

யார் புத்திசாலி குருவா? சிஷ்யனா?

அசுரர்கள் குருவான சுக்ராசாரியாருக்கு சஞ்சிவினி மந்திரம் தெரிந்ததால் போரில் மாண்டுபோன அசுரர்களை உயிர்பெறச்செய்து தேவர்களுக்கு கஷ்ட்த்தை கொடுத்துவந்தார்.தேவர்கள் இந்திலிருந்து எப்படி மீள்வது என்று யோஜித்து தங்கள் குருவான பிருஹஸ்பதியை அணுகினார்கள்.அவரும் தன்க்கு அந்த மந்திரம் தெரியாது,ஆனால் தன் மகன் கசனை கேட்டுப் பார்க்கலாம் என்றார்.தேவர்களும் அதன்படியே கசனை அணுகி சுக்க்ராசாரியாரிடம் சென்று சஞ்ஜீவினி மந்திரத்தை கற்றுவரும்படி கேட்டுக்கொண்டார்கள்.கசன் அழகுள்ளவன் அதனால் சுக்ராசாரியாரின் மகளான தேவயானியால் விரும்பப்படுவான் சுக்ராசாரியாருக்கு மகள் பேரில் பாசம் அதிகம் அதனால் எப்படியாவது கசன் சஞ்ஜிவினி மந்திரத்தை கற்றுக் கொண்டுவிடுவான் என்பது தேவர்களின் எண்ணம்.
கசனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சுக்ராசாரியாரிடம் சென்று "நான் பிரஹஸ்பதியின் குமாரன் பிரும்மச்சரிய விரதம் இருந்து உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்"" என்றான். அவரும் அவனை உடனே சீடனாக ஏற்றூக்கொண்டார். அந்தகாலத்தில் ஒர் வழக்கம்,யாராவது ஒருவர் குருவை அணுகி தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

கசனும் மிகவும் கவனத்துடன் குருவுக்கு பணிவிடைகள் செய்து குருவின் மகளான தேவயானியையும் நன்றாக சந்தோஷப்படுத்திவந்தாலும் விரதத்தை விடவில்லை.கொஞசகாலம் இப்படியே சென்றது. அரக்கர்களுக்கு ஏனோ ஒரு சந்தேகம் குசன் சஞ்ஜீவினி மந்திரத்தை எப்படியாவது குருவிடமிருந்து கற்றுக் கொண்டு போய் தேவர்களுக்கு கொடுத்து விடுவான் என்று. ஆகவே அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்.குசன் காட்டுக்குள் சென்று குருவிற்கு பசுக்களை மேய்க்கச் சென்றபோது அவனைக் கொன்று அவன் உடலை நாய்களுக்கு உணவாக போட்டு விட்டார்கள்.மாடுகள் திரும்பிவந்தும் கசன் வராததால் தேவயானி கலக்கமடைந்து தந்தையிடம் கூறினாள்.குரு ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து சஞ்ஜிவினி மந்திரத்தை பிரயோகித்து குசனை உயிர்பெறச்செய்து விட்டார்.மறுபடியும் ஒருநாள் குசன் காட்டுக்குச் சென்றபோது அசுரர்கள் அவனைக் கொன்று சாம்பலைக் கடலில் கரைத்து விட்டார்கள். தேவயானியின் முயற்சியால் மறுபடியும் குரு அவனை சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் உயிர்பெறச்செய்தார்.அசுரர்கள் கசனை விட்டபாடில்லை. மூன்றாவது தடவையாக அவனைக் கொன்று அவன் சாம்பலை மதுவில் கரைத்து சுக்ராச்சாரியாருக்கே கொடுக்க அதைக் அவரும் குடித்து விட்டார். கசன் அவர் வயிற்றில் ஐக்கியமானான். குசனின்மீது ஒருதலைக்காதல் கொண்ட தேவயானி தன் தந்தையிடம் மறுபடியும் முறையிட்டு குசனை உயிர்பித்துத்தர வேண்டினாள்
மீதியை அடுத்தபதிவில் பார்க்கலாமா ?

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Thursday, September 11, 2008

ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி இன்று! ஓணம், திருவோணம்!

வாதிராஜர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னர் தியானத்தில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு வெள்ளைக் குதிரையாக வந்து நிலத்தில் திருவிளையாடல் புரிந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பது புரிந்தது. தியானம் கலைந்தது. நிலத்து உரிமையாளரோ அற்புதம் செய்த குதிரையை மீண்டும் காணவேண்டும் என ஆசைப் படுகின்றார். வாதிராஜருக்கு உண்மை நிலைமை புரிய, இனி அந்தக் குதிரை கண்ணில் காண முடியாது எனப் புரிய, நிலத்துக்காரரை எச்சரிக்கின்றார். விபரீத ஆசை வேண்டாம் என்றும், அந்தக் குதிரையை இனியும் பார்க்க முயன்றால் ஒருவேளை கண்பார்வையே போய்விடும் என்றும் சொல்லுகின்றார். நிலத்துக் காரரோ, பிடிவாதமாய்க் கண் போனாலும் பரவாயில்லை, என்று அன்று இரவு மீண்டும் நிலத்துக்குப் போய்க் குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, குதிரையும் வந்தது. அதைப் பார்த்ததுமே அவர் கண்பார்வையும் போனது. ஆனாலும் நிலத்துக்காரர் கவலைப்படாமல் இறைவனின் அவதார சொரூபத்தைத் தரிசிக்க முடிந்ததை எண்ணி மன மகிழ்ந்து இருந்தார். ஆனால் ஸ்ரீ வாதிராஜர் அவ்வாறு இருக்க முடியாமல் ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்ள, நிலத்துச் சொந்தக் காரரின் கண்பார்வை திரும்புகின்றது.

தெய்வீகக் குதிரையின் காலடி பட்ட இந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று நிலத்துச் சொந்தக் காரர் அந்த நிலத்தை ஸ்ரீமடத்துக்கே கொடுக்கின்றார். அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வேகவைத்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து, ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி என்று அழைக்கப் படுவதாய்த் தெரிகின்றது. (எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா, தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)

அம்பி, உடனேயே கடலையை வேக வைக்கக் கிளம்பவேண்டாம், இன்னும் கொஞ்சம் இருக்கு இதிலே! அதுக்குள்ளே கடலை போட அவசரமா?????

ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார் ஸ்ரீவாதிராஜர். அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில் வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார். ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம் மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும் உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால் வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர் தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள் ,அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம் கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.

ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப் புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும் உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப் பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, “வாதிராஜ குள்ளா” என்னும் ஒருவகைக் கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும் ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே செய்து வழிபடலாம். ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம் ஆண்டு “ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.

குரு பரம்பரை சுலோகங்கள்!

குரு பரம்பரை-ன்னா என்னா? எல்லாருக்கும் தெரிந்திருக்கும்!
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள்!

எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படி கால் தொடங்கி...வந்து வழி வழி ஆட்கொண்டு அருளும் குரு பரம்பரை!
அந்த குரு பரம்பரை சுலோகங்களை இன்று தியானிப்போம்!


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
நீங்களும் இரண்டு சுலோகங்களையும் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த சுலோகங்கள் திருமடங்களில் சொல்லப்படுகிறதா என்ற மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

பிகு:
ஒவ்வொரு வியாழனும் பதிவைத் தவற விட வேண்டாம் என்று மெளலி அண்ணா ஒரு முறை பேசும் போது சொன்ன ஞாபகம்!
கீதாம்மா வாதிராஜர் தொடரைப் போடுகிறார்கள்; ஹயக்ரீவ ஜெயந்தியான நாளைக்கு அவர்கள் பதிவை நிறுத்தி வைத்துள்ளார்கள்! அதான் இந்த Filler Post!

Monday, September 1, 2008

கீதாசாரியனா??? ஜகதாசாரியனா??? யார் உண்மையான ஆசாரியன்?

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.


இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.

//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//


இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

சொந்த செலவில் மான்யம்:
யாருங்க அது, அங்கே நமக்கு நாமே மானியம் கொடுத்துக்கக் கூடாதுனு சொல்றது?? திராசவா?? ம்ஹூம், சான்ஸே இல்லை, அவர் இங்கே எல்லாம் வர மாட்டாரே! :P கே ஆரெஸ் பதிவுக்குத் தான் போய்ப் பின்னூட்டம் போடுவாராமே? அப்படியா??? :P:P:P

Wednesday, August 27, 2008

வெள்ளைக் குதிரையாக வந்தது யார்??? வாதிராஜர் தொடர்ச்சி

ஸ்ரீவாதிராஜர் மடத்தின் அதிபதியாக ஆன சமயம். ஸ்ரீமடத்தை ஒட்டி, தனியார் ஒருவரின் நிலம் மிக மிகப் பெரிய பரந்த நிலம், இருந்தது. அதன் உரிமையாளர் நிலத்தில் கடலையை விதைத்திருந்தார். கடலையும் செழிப்பாய் வளர்ந்திருந்தது. பயிர்கள் இன்னும் சிறிது காலம் போனால் கடலையை எடுக்கலாம் என்ற நிலைமை. தினம்போல் அன்றும் நிலத்துச் சொந்தக் காரர் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்ல வந்திருந்தார். அப்போது அங்கே ஒரு பகுதியில் பயிர்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப் பட்டது. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறுநாளும் சென்று பார்க்க, மீண்டும் அதே மாதிரியாக, இன்னும் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப் பட்டது. “ஆஹா, யாரோ வந்து திருடித் தின்கின்றனர், அல்லது எடுத்துச் செல்கின்றனர்.” என்று எண்ணிய நிலத்துக் காரர் அன்று இரவு எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணியவராய், இரவு நேரம் நிலத்திலேயே ஒரு பக்கம் மறைவாய்க் காத்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் ஸ்ரீமடத்தில் இருந்து கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்தோடு ஒரு குதிரை ஒன்று வந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப் படுத்தியது. தாங்க மாட்டாக் கோபத்தோடு நில உரிமையாளர் ஓடிப் போய் அந்தக் குதிரையை விரட்டினார்.
குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஸ்ரீ மடத்தினுள் புகுந்து கொண்டது. சரி, இங்கே தானே இருக்கப் போகின்றது, பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினார் நிலத்துக் காரர். மறுநாள் நேரே ஸ்ரீ வாதிராஜரிடம் சென்றார். நடந்தவற்றை அப்படியே விவரித்தார். இது என்ன நியாயமா? என்று நியாயமும் கேட்டார். ஆனால் வாதிராஜரோ மறுக்கின்றார். ஸ்ரீ மடத்திற்கு எனச் சொந்தமாய்க் குதிரையே கிடையாது என்றும், நிலத்துக்காரர் சொல்லுவது உண்மையாக இருக்குமா என்றும் சந்தேகப் படுகின்றார். நிலத்துக் காரரோ அடித்துச் சொல்கின்றார். தான் தன்னிரு கண்களால் நடந்தவற்றைப் பார்த்ததாய். எனினும் மீண்டும் அன்று இரவும் பார்க்கப் போவதாயும், அதன் பின்னர் மீண்டும் வாதிராஜரை மறுநாள் வந்து பார்ப்பதாயும் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

அன்று இரவு. மீண்டும் நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகே மறைந்திருந்து காவல் காக்க, மீண்டும் அதே வெள்ளைக் குதிரை மடத்தில் இருந்து வெளியே வந்து வழக்கம்போல் நிலத்திற்குள் நுழைந்து, பயிர்களைச் சேதப் படுத்தத் தொடங்கியது. கடலைச் செடிகள் மிதிபட்டன, தின்றது போக மற்றவை சேதம் ஆயின. பின்பு எப்படி வந்ததோ அது போலவே மடத்தினுள் நுழைந்து மறைந்தது. நிலத்துக் காரர் குதிரையைத் துரத்திக் கொண்டு வந்தவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. சாதாரணக் குதிரைக்கே வேகம் அதிகம். இது சாதாரணக் குதிரை அல்லவே. அசாதாரண வேகத்துடன் ஓடி மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் வாதிராஜரின் முன்னிலையில் வந்து நின்றார் உரிமையாளர். “ஸ்வாமி, இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது எனக்கு. என் இரு கண்களால் நன்றாய்க் கண்டு விட்டேன். வெள்ளைக் குதிரை ஸ்ரீமடத்தில் இருந்தே வெளியே வந்து என் நிலத்தினுள் புகுந்து கடலைச் செடிகளைத் தின்றுவிட்டு சேதமும் பண்ணிவிட்டு, ஓடி மறைந்துவிட்டது.” என்று சொல்கின்றார். வாதிராஜரோ திகைப்புடன் ஸ்ரீ மடத்தில் குதிரையே கிடையாது, ஆனால் இவர் இப்படிச் சொல்லுகின்றாரே என்றார்.


ஆனால் நிலத்துச் சொந்தக் காரரோ, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஏற்கெனவேயே நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டதாயும், குதிரையை அடக்காவிட்டால் மேலும் ஏற்படும் இழப்பைத் தன்னால் தாங்க முடியாது எனவும் சொல்லுகின்றார். வாதிராஜர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இழப்பைத் தானே ஈடு செய்வதாயும், இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்லுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றார். ஆனாலும் ஸ்ரீமடத்தில் குதிரையே கிடையாது என்பதை வலியுறுத்தவும் தவறவில்லை அவர். நிலக்காரர் ஒருமாதிரியாக நஷ்ட ஈடு கிடைக்குமே என்று ஆறுதலுடன் சென்றார். மீண்டும் நிலத்தை மதிப்பீடு செய்யச் சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். ஓடோடி வந்தார் வாதிராஜரிடம். “ஸ்வாமி, ஸ்வாமி, இது என்ன அதிசயம்?? ஒரே மாயாஜாலமாக அல்லவா இருக்கின்றது. எங்கெங்கே சேதங்கள் ஏற்பட்டனவோ அந்த இடத்தில் எல்லாம் தங்கக் கடலைகள். ஸ்வாமி, அந்தக் குதிரை சாதாரணமானதல்ல. தெய்வீகக் குதிரை. தாங்களே வந்து பாருங்கள் அந்த அதிசயத்தை!” என்று பரவசத்துடன் கூறுகின்றார்.

இப்போத் தான் கவனிச்சேன், இது 50-வது பதிவு என்று.

50-வது பதிவு

Wednesday, August 20, 2008

தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்ட குழந்தை!

எந்தவொரு காரியத்துக்குமே காரணங்கள் கட்டாயமாய் இருக்கும். ஆராயப் போனால் நம் அறிவுக்கு உகந்த முறையில் சரியான பதில் எல்லாவற்றுக்கும் கிடைப்பது இல்லை. பொதுவாகவே நம் பெரியோர்கள் அதனாலேயே நம்மை எதையும் அதிகம் ஆராயாதே எனச் சொல்லி வருகின்றார்கள் போலும். இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன், காரணத்தை மட்டுமல்லாது, காரியத்தையும் அவனே அறிவான். மாத்வாசாரியாரின் மகத்தான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஸ்தாபித்த 8 மடங்கள் பற்றித் தெரிந்திருக்கும். அந்த எட்டு மடங்களின் தலைமை குருவாக இருப்பவரே மாறி, மாறி உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயிலின் வழிபாடுகளைச் செய்து வருகின்றனர் இன்றளவும். அதில் ஒன்றான ஸோதே மடத்தின் அதிபதியான வாகீச தீர்த்தர் ஒரு ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு தம்பதிகள் அவரை வந்து பார்த்துக் காலில் விழுந்து வணங்கி விண்ணப்பம் கோரி நின்றனர். தம்பதிகளுக்குத் திருமணம் ஆகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே வாகீச தீர்த்தரிடம் தங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றனர் இருவரும்.

வாகீச தீர்த்தர் ஒரு மகான். நடக்கப் போவதை அறிந்தவர். அவர் சொல்கின்றார்: "உங்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுவும் ஆண் குழந்தையாகவே பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே எங்கள் ஸ்ரீமடத்திற்குக் குழந்தையைத் தந்து விடவேண்டும், சம்மதமா?" என்று கேட்கின்றார். தம்பதிகள் தடுமாறினார்கள். குழந்தை நிச்சயம் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தையே பிறக்கும். ஆனால் பிறந்த குழந்தையை எவ்வாறு ஸ்ரீமடத்திற்குத் தருவது?? கொஞ்சம் கலங்கினர் இருவரும். பேசாமல் நின்றனர். மகான் யோசித்தார். இவர்கள் இவ்வாறெல்லாம் வழிக்கு வரமாட்டார்களே?? என்ன செய்வது??? வாகீச தீர்த்தர் சொல்கின்றார்:"சரி, நான் வேறொரு யோசனையைச் சொல்கின்றேன். பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை உங்களுக்கு. ஆனால் அது வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை ஸ்ரீமடத்துக்கு. சம்மதமா?" என்று கேட்கின்றார்.

போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருக்கிறது இருவருக்கும். அப்பாடா, குழந்தையாவது வீட்டுக்கு வெளியே பிறப்பதாவது?? எப்படியும் வீட்டுக்கு உள்ளேயே குழந்தை பிறக்கும், நாமும் குழந்தையை மடத்துக்குக் கொடுக்கவேண்டியதில்லை, ஆகவே இதுக்கு சரினு சொல்லிடுவோம். இருவரும் ஒத்துக் கொண்டனர். வாகீச தீர்த்தர் அளித்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வருகின்றனர். இவர்கள் பெயர் இருவிதமாய் வழங்குகின்றது. ஒரு சாரார் தேவரநாம பட்டர்-கெளரிபாய் என்றும் இன்னும் சிலர், ராமாசார்யர்-சரஸ்வதி என்றும் சொல்கின்றனர். நமக்கு முக்கியம் ஸ்ரீவாதிராஜரே. ஆகவே அதைக் கவனிப்போம்.

வாகீச தீர்த்தரின் வாக்குப் பலித்தது. கெளரிபாயின் வயிற்றில் திரு உதித்தது. பட்டருக்குக் கவலை அதிகம் ஆனது. மனைவியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார். வெளியே எங்கும், எதற்கும் மனைவியை அனுப்புவதில்லை. தானே வெளிவேலைகளையும் சேர்த்துக் கவனித்து வருகின்றார். வீட்டின் பின்பக்கம் ஆன தோட்டத்துக்கோ, மாட்டுத் தொழுவத்துக்கோ கூட மனைவியை அனுப்பாமல் அதையும் தானே கவனித்துக் கொண்டு மனைவியின் நடமாட்டத்தையே கட்டுப் படுத்திக் கொண்டு வந்தார். பிரசவம் என்பது எப்படியும் வீட்டின் உள்ளே தானே நடக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தாலும், ஒருவேளை என்ற சந்தேகமே இவ்வாறெல்லாம் அவரை நடக்க வைத்தது.

நாட்கள் சென்றன. கெளரிபாய் நிறை கர்ப்பிணி. வீட்டுக்குத் திடீரென ஒரு விருந்தினர் வந்தார். வேறு வழியில்லை. கர்ப்பிணியான கெளரிபாயே எழுந்து அவரைக் கவனித்தார். சாப்பாடு சாப்பிடும் நேரமும் வர, இருவருக்கும் நிறை கர்ப்பிணியான கெளரிபாயே உணவும் பரிமாறினார். அப்போது வீட்டின் கொல்லைப்புறம் திறந்திருந்தது. அது வழியாக ஒரு மாடு உள்ளே நுழைந்தது. அவர்கள் மாடு இல்லை அது. கொல்லையில் தோட்டம் வேறே இருந்தது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு அர்த்தமும் உண்டல்லவா??? மாடு உள்ளே நுழைந்ததின் காரணமே, உலகுக்குச் செல்வத்தை இவர்களே வைத்துக் கொள்ளப் போகின்றார்களோ என்ற பயமாயும் இருக்கலாமோ???

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபடியால் வேறு வழியில்லாமல் கெளரிபாய் வெளியே வர நேரிட்டது. வெளியே வந்து மாட்டை விரட்டினார். அதுவா, வேகமாய் ஓட மறுத்தது. நகர மறுத்துச் சண்டித்தனம் வேறே. மாட்டைச் சற்றுக் கோபத்துடனேயே வேகமாய் ஓடிப் போய் விரட்ட ஆரம்பிக்கின்றார் கெளரிபாய். திடீரென ஓட ஆரம்பித்த மாடு வேகமாய் ஓடி மறைய, மாட்டின் பின்னால் இயல்புக்கு மாறாக வேகமாய் ஓடிய கெளரிபாய்க்கு வீடு நோக்கித் திரும்பும் எண்ணம் வர வைத்தது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலி. வேதனையில் துடித்த அவர் வீடு நோக்கி அவசர, அவசரமாய்த் திரும்ப முயல, திரும்ப முடியாமல் அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார் நடக்கக் கூட முடியாமல்.

அப்போது பார்த்தால் வாசலில் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த இருவர் நிற்க, என்னவெனப் போய்ப் பார்க்கின்றார் பட்டர். ஒரு தங்கத் தாம்பாளத்தை அவர் கையில் கொடுத்துப் பிறக்கும் குழந்தை பூமியில் படுமுன்னே அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்துமாறு வாகீச தீர்த்தர் சொன்னதாய்ச் சொல்லவே, கலங்கிய பட்டர் அப்போது தான் மாட்டைத் துரத்திய மனைவி வீட்டினுள் நுழையவில்லை எனப் புரிந்து வேகமாய் வெளியே ஓட, அப்போது ஒரு ஒளிமயமான ஆண்குழந்தை பிறக்க, செய்வதறியாது, தன் கையில் இருந்த தங்கத் தாம்பாளத்தில் அந்தக் குழந்தையை ஏந்தினார் பட்டர். வேறு வழி இல்லை. நிபந்தனையில் ஜெயிப்போம் என நினைத்தால் இறைவன் அருள் இவ்வாறு இருக்கின்றதே! குழந்தையை எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்திற்குச் சென்று வாகீச தீர்த்தரிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார் பேச்சுப் படியே பட்டர். பட்டரைப் பார்த்த வாகீசர், உலகு உய்ய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை உங்கள் குழந்தையாக இருப்பான் என்று ஆசீர்வதிக்கின்றார். மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி வளர்த்தார் வாகீச தீர்த்தர். கூடவே குழந்தைக்கு ஞானமும் ஊட்டப் பட்டது. அந்தக் குழந்தைதான் வாதிராஜர்.

அடுத்து வாதிராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அற்புதங்களும், கடலை நைவேத்தியமும்.

தொடரும்