Thursday, October 16, 2008

ஸ்ரீ வித்யாரண்யர்


14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.


இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.


ஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.

இவற்றைத் தவிர, "ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே "பஞ்சதசீ" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், "விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு "காலமாதவம்" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு "ஸங்கீத ஸாரம்" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே "மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.

அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா
வித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே!

அவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.

18 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குரு வித்யாரண்யர் பற்றிச் சொன்னமைக்கு நன்றி மெளலி அண்ணா.

//"மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது//

மாதவீய என்றால் என்ன? ஏதாச்சும் பந்தலா?
சங்கரருக்கும், மாதவீய-க்கும் என்ன சம்பந்தம்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விஜயநகர ஸ்தாபிதம் செய்த முதல் குரு வித்யாரண்யர் தான்.
ஹரிஹரா, புக்கா இருவரையும் கண்டெடுத்து, அவர்கள் மூலமாக விஜயநகர அரசை நிறுவினார்.

அடிக்கல் நாட்டும் போது, மலை மேல் ஏறிச் சென்று கோள் நிலைகளை ஆராய்ந்து சங்கு முழங்குவதாகச் சொல்ல,

கீழே இருந்த சகோதரர்கள் வேறொரு யாசகனின் சங்கொலிக்குத் தெரியாமல் அடிக்கல் இட்டு விட்டார்கள்.

பின்னர் குருவின் சங்கொலி கேட்க, செய்வதறியாமல் விழித்தனர். வித்யாரண்யர் புவனேஸ்வரி அன்னையின் உபாசகர். அவர் அன்னையிடமே வழி கேட்க, வித்யாரண்யர் சொன்ன நேரத்தில் அமைத்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அரசு அமைந்து விடும்! அது தெய்வ சங்கல்பம் அல்ல! வெறும் இருநூறு ஆண்டுகள் மட்டும் விஜயநகரம் அமையவே தெய்வ சித்தம். அதான் இப்படி ஆகியது என்று அன்னை அருள் பாலித்தாள்.

பின்னரே வித்யாரண்யரைக் குருவாகக் கொண்டு விஜயநகரப் பேரரசு அமைந்தது!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்,

வித்யாரண்யரது பூர்வாஸ்ரமப் பெயர் மாதவர்...ஆகையால் அவரது நூல்கள் சிலவற்றை மாதவீய என்ற அடைமொழியுடன் குறிப்பிடுகிறார்கள்.

குமரன் (Kumaran) said...

மாதவ வித்யாரண்யர் என்று படித்திருக்கிறேன். பெரும் முனிவர் என்பதால் மாதவ என்று முன்னொட்டுடன் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இன்று தான் தெரிந்தது. அது அவர் இயற்பெயர் என்று. :)

சாயன பாஷ்யம் என்று படித்திருக்கிறேன். இந்த ஆசார்யர் தான் அந்த சாயனரா? இதுவும் புதிய செய்தி. :-)

சார்வாக மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மாற்று மதத்தவர்கள் எழுதிய நூற்கள் தான் கிடைக்கின்றன என்று படித்திருக்கிறேன்.

ஸர்வதர்சனம் எங்கே கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா?

Kavinaya said...

ஸ்ரீ வித்யாரண்யர் பற்றிச் சொன்னமைக்கு நன்றி மெளலி.

கபீரன்பன் said...

ஆசார்ய பரம்பரையில் மிக முக்கியமானவர் வித்யாரண்யர். அவரைப் பற்றி ஒரு முழுபக்க விவரங்களை சாரதாபீட வலைப்பக்கத்தில் காணலாம்.
நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கபீரன்பன்..ஆமாம், முக்கியமானவர், நிறைய க்ரந்தங்கள் எழுதியிருக்கார்...அவை இன்றும் உபயோகத்தில் இருக்கவும் செய்கிறது. நீங்க கொடுத்த சுட்டியை நான் கவனித்ததில்லை. நன்றி,பார்க்கிறேங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா, வருகைக்கு நன்றி :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//மாதவ வித்யாரண்யர் என்று படித்திருக்கிறேன். பெரும் முனிவர் என்பதால் மாதவ என்று முன்னொட்டுடன் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இன்று தான் தெரிந்தது. அது அவர் இயற்பெயர் என்று. :)//

முன்னொட்டு...புதிய சொல்..தெரிந்து-கொண்டேன். நன்றி.

//சாயன பாஷ்யம் என்று படித்திருக்கிறேன். இந்த ஆசார்யர் தான் அந்த சாயனரா? இதுவும் புதிய செய்தி. :-) //

இவரது பூர்வாஸ்ரம குலம் சாயன குலம், அதனால் அவர் பூர்வாஸ்ரமத்தில் செய்த நூல்களை அப்படிக் கூறுவதாக தெரிகிறது :)

//சார்வாக மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மாற்று மதத்தவர்கள் எழுதிய நூற்கள் தான் கிடைக்கின்றன என்று படித்திருக்கிறேன்.

ஸர்வதர்சனம் எங்கே கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா?//

ஸர்வதர்சனம் நானும் கேள்விப்பட்டதுடன் சரி, கிடைத்தால் சொல்கிறேன்...நீங்களும் எங்காவது கிடத்தால் அறியத்தாருங்கள். :)

Geetha Sambasivam said...

//http://sivamgss.blogspot.com/2006/05/46.html//

enga kitte vidyaranyar koil enru than sonnanga. mmmmm??? ippo than theriyum athu vidyaranyar kattina koilnu! thirumba oru tharam poy parkkanum! ange ezuthi vachirukirathum Vidyaranyar koilnu padicha ninaivu!

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌலீ வித்யாரண்யர் ச்ருங்கேரி மடத்தின் வழித்தோன்றலின் ஒருவரா. எப்படி யிருந்தாலும் நல்ல சாம்ராஜ்யத்தை நிறுவ உதவியர்

கீதமேடம் ஏதாவது ஒரு இடத்துக்கு போனா நல்ல கவனிச்சுட்டு வரனும்.

ange ezuthi vachirukirathum Vidyaranyar koilnu padicha ninaivu
நம்ம நினைவுதான் தெரியுமே கல்யாணநாளுக்கு 2 நாள் முன்னதாகவே பதிவுபோட்டோமே

ambi said...

அந்த கோவில் சுற்று சுவரில் 12 ராசிகளின் சின்னம் பொறித்து இருக்கும். ஒவ்வொரு மாசமும் அந்த மாசத்துகுரிய சின்னத்தில் சூரிய ஒளி படும். உதாரணமா மார்கழி மாசத்தில் தனுர் சின்னத்தில் படும்.

தக்குடு said...

சிருங்கேரியில் நவராத்ரி தர்பார் மிகவும் விசேஷமானது, அந்த சமயத்தில் மட்டும் தான் குரு பரம்பரையில் உள்ள பட்டத்து ஆச்சார்யர் ராஜகுருவிற்குரிய உடை,அணிகலன்கள் அணிந்து வியாக்யான சிம்மாசனத்தில் அமர்ந்து சிஷ்யர்களுக்கு காட்சி தருவார்,அந்த வைபவம் இவருடைய காலத்திலிருந்து தான் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

தம்பி

Geetha Sambasivam said...

தம்பி, சிருங்கேரி ஸ்வாமிகள் மதுரைக்கு வந்தப்போ கூட ராஜாங்க சேவை காட்சி கொடுத்து கையில் செங்கோல் போன்ற ஒரு தண்டத்துடன், நான் பார்த்திருக்கேன். நவராத்திரியில் அங்கேயே இருப்பதால் இன்னும் கோலாகலமாய் இருந்திருக்கலாம்.

Geetha Sambasivam said...

முதல்முறையா (?????) அம்பி சொன்னதை ஒத்துக்கறேன், அங்கே இம்மாதிரியான ஒரு விசித்திரம் இருக்கு, கூட வந்தவங்களும் காட்டினார்கள், அங்கேயும் எழுதி இருக்கு. ஆனால் கோயில் வழிபாடுகள் இல்லாமலேயே இருக்கு.

ambi said...

//முதல்முறையா (?????) அம்பி சொன்னதை ஒத்துக்கறேன்,//

அதான் வங்க கடலில் புயல் சின்னமா? :p


//ஆனால் கோயில் வழிபாடுகள் இல்லாமலேயே இருக்கு.//

கோவில் பூட்டின நேரம் சுண்டலுக்கு போயி நின்னா இப்படித்தான். :p

காலை நேரத்துல முறைப்படி அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் காட்றாங்க.

அங்கயும் மாருதி மெஸ்ல காப்பி குடிக்க போயிட்டீங்களோ? :)))

Geetha Sambasivam said...

//காலை நேரத்துல முறைப்படி அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் காட்றாங்க.//
grrrrrr sayangalama ponom! :P

Zeal study said...

பலருக்கு இந்த வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் தாங்கள் மிக அருமையாக, நேர்த்தியாக ஸ்ரீவித்யாரண்யரின் வரலாற்றை கூறியுள்ளீர்கள். நானும் எனது பெயருடன் இவரின் பெயரை இணைத்துக் கொள்கிறேன். இந்து மதத்தை தக்காணத்தில் மீண்டும் உயிர் பெற செய்த உத்தமர். நன்றி அய்யா.