Wednesday, December 31, 2008

குலபதி என்றால் என்ன அர்த்தம்?

குலபதி என்றால் என்ன அர்த்தம்னு கேஆரெஸ் கேட்டிருந்தார். அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்கு புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வாரா வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் இதிலே போடுகின்றேன்.

முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது.

எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம்.

இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றது. "யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 24, 2008

பரிபாடலில் பாவை நோன்பும், ஆண்டாளின் பாவை நோன்பும்!

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//

மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள். குறிப்பாகப் பாண்டிய நாட்டில் வையை நதி பெருக்கெடுத்து ஓடிய காலகட்டத்தில் வையைக் கரையில் நோன்பு நூற்கப் பட்டிருக்கின்றது. அதற்கான வழிமுறைகளையும் சொல்லுகின்றது பரிபாடல் பாடல்கள். அது ஆண்டாள் காலம் வரையிலும் சற்றே மாறுதல்களுடன் தொடர்ந்து வந்திருப்பதாயும் தெரியவருகின்றது.

இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.

மேலும் முதல் பாடல் பக்தி யோகத்தையும், அடுத்த பாடலான "வையத்து வாழ்வீர்காள்" கர்ம யோகத்தையும், மூன்றாம் பாடலான "ஓங்கி உலகளந்த" ஞான யோகத்தையும் குறிப்பிடுவதாயும் சொல்லுவதுண்டு. ஆண்டாள் கண்ணனைக் காதலோடு வர்ணிப்பதோடல்லாமல், கண்ணனையே மணாளனாக வரித்துக் கொள்ளுவேன் என்றும் உரிமையுடன் சொல்கின்றாள். ஆண்டாள் வாழ்ந்த காலத்திலே பெண்களுக்குத் தங்கள் மணாளனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்கு இத்தனை சுதந்திரம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அத்தோடு மட்டுமா? ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. முதல் பாடல் மூலம் கண்ணனுக்கு பக்தி செய்யவேண்டிய அவசியத்தையும், அவ்வாறு பக்தி செய்தால் கிடைப்பதையும் சொல்கின்றாள். இரண்டாவது பாடலில் எவ்வாறு விரதமுறைகள் எனக் குறிப்பிடுகின்றாள். அடுத்த பாடல் தான் இன்றளவும் அனைவராலும் மிக விரும்பிப் பாடப் படும் பாடல்.

டிஸ்கி: மெளலி இந்த வாரம் எழுதும்படி அழைத்தார். அழைத்து 4 நாட்கள் ஆகியும் என்னால் தயார் செய்து கொள்ள முடியலை, ஆகவே மீள் பதிவு சில மாற்றங்களுடன் தலைப்பையும் மாற்றிப் போட்டிருக்கிறேன். அடுத்தவாரமும் நானே தொடர்ந்தால் இதன் தொடர்ச்சி வரும். இல்லைனா நேரம் இருக்கும்போது எண்ணங்கள் பதிவிலே வரும். இந்தப் பாவை நோன்பைப் பற்றிய மேலதிகத் தகவல்களை http://jayasreesaranathan.blogspot.com/ இவரின் பதிவில் காணலாம். லிங்க் கொடுத்தால் போகவே இல்லை. அரை மணியாய் முயன்று பார்த்தும் எரர் வருது. ஆகவே மன்னிக்கவும். படமே ஒத்துக்கலை. ரொம்பவே ஆசாரமான வலைப்பதிவு போல! எதுவுமே ஒத்துக்கமாட்டேன்னு ஒரே பிடிவாதம்! இல்லைனா நம்ப ராசியோ??? ஷெட்யூல் பண்ணினா தேதி வேறே இப்போத் தான் 24-ம் தேதி காலைனு சொல்லுது. யு.எஸ். நேரம் தான் எடுத்துக்குதோ?

Wednesday, December 17, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -2



சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.

இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.

மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.



பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது

இவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்














ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....


ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.

Wednesday, December 10, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்-6

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்தனங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர்.

ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

Posted by Picasa


இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html

எழுத்தாளர் பாலகுமாரன் “நண்பன்” என்று ஒரு கதையை சுவையாக எழுதி இருக்கிறார். அது பிரம்மேந்திராள் கதைதான்.
நண்பர் ஜீவா பிரம்மேந்திராளின் சாகித்தியங்களின் பட்டியலுக்கு ஒரு சுட்டி கொடுத்து இருக்கிறார்.

சரி தற்காலத்துக்கு வரலாமா?

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்து கொண்டோம்.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

From nerur

Wednesday, December 3, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 5

யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர், புதுக்கோட்டை, தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

From nerur

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும், கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.